Last Updated : 31 Dec, 2021 12:49 PM

 

Published : 31 Dec 2021 12:49 PM
Last Updated : 31 Dec 2021 12:49 PM

3-0 எனத் தொடரைக் கைப்பற்றுவோம்; மழை பெய்யாமல் இருந்தால் 3 நாளில் ஆட்டம் முடிந்திருக்கும்: இந்திய அணி வெற்றியைக் கொண்டாடிய சரண்தீப் சிங் 

செஞ்சூரியனில் நடந்த டெஸ்ட்டில் வெற்றி மகிழ்ச்சியில் இந்திய அணியினர் | படம் உதவி: ட்விட்டர்.

புதுடெல்லி: செஞ்சூரியனில் மழை பெய்து 2-வது நாள் தடைப்படாமல் இருந்தால், 3 அல்லது 4 நாளில் ஆட்டம் முடிந்து இந்திய அணி வென்றிருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வுக்குழு முன்னாள் தலைவருமான சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

செஞ்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இதுவரை செஞ்சூரியனில் வென்றதில்லை என்ற நிலையை மாற்றி தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் 2 டெஸ்ட் போட்டிகளில் வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றார்.

இந்த ஆண்டில் இந்திய அணி பெறும் 8-வது டெஸ்ட் வெற்றியாக இது அமைந்தது. சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள்தான் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் மட்டும் 40 விக்கெட்டுகளில் 38 விக்கெட்டுகளை வேகப்பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர்.

இந்திய அணியின் வெற்றி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சரண்தீப் சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும் என நம்புகிறேன். தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங் சிறப்புக்குரியதாக இல்லை. டீல் எல்கரும், குயின்டன் டீகாக், மார்க்ரம் மட்டுமே நம்பிக்கையளிக்கிறார்கள். இதில் குயின்டன் டீ காக் ஓய்வு அறிவித்துவிட்டார். மார்க்ரம், எல்கருக்கும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் நெருக்கடியளித்தால், நிச்சயம் வெல்ல முடியாது, இந்தியப் பந்துவீச்சு வலுவாக இருக்கிறது.

மழை காரணமாகத்தான் முதல் டெஸ்ட் 5 நாட்கள் வரை நடந்தது. இல்லாவிட்டால், ஆட்டம் 3 அல்லது 4-வது நாளிலேயே முடிந்திருக்கும். செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய ஆசியாவைச் சேர்ந்த முதல் அணி இந்தியா என்பது மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம்.

தென் ஆப்பிரிக்கப் பயணத்துக்கு இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் திராவிட்டுக்கு மிகப்பெரிய வாழ்த்துகள். தென் ஆப்பிரிக்காவை அவர்கள் நாட்டில் வீழ்த்துவது மிகக்கடினம். இந்தியா வென்றது மிகப்பெரிய பெருமை. விராட் கோலி அணியை வழிநடத்தியது, வேகப்பந்துவீச்சாளர்களான முகமது ஷமி பந்து வீசியது அற்புதம்.

சரண்தீப் சிங்

கணுக்கால் காயத்தால் பும்ரா சென்றபோதிலும் பந்துவீசத் திரும்பி வந்தது, சிராஜின் நெருக்கடியான பந்துவீச்சு இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. நான் பேட்ஸ்மேன்களைப் பற்றி மட்டுமே பேசுகிறோம், ஆனால், நம்முடைய பந்துவீச்சாளர்களைப் பாருங்கள். ரவி சாஸ்திரிக்கும், தற்போது ராகுல் திராவிட்டுக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டும். பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருணுக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாகப் பல வீரர்களை உருவாக்கியுள்ளார்.

பல போட்டிகளாக மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையிலும் அவர் சிறப்பாக இந்த டெஸ்ட்டில் விளையாடினார். ராகுல் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். டி20 போட்டிகளில் மட்டும் ஆட்டத்தைத் தொடங்கிய ராகுல் தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் தொடக்க வீரராகக் களமிறங்குகிறார்.

ராகுல் திராவிட் மட்டும் இதற்குக் காரணமல்ல, பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரும் காரணம். பேட்ஸ்மேன்களுடன் ஏராளமான நேரத்தைச் செலவிட்டு ஆலோசனை வழங்குகிறார். கடைசி வரிசை வரை பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ய ரத்தோரின் ஆலோசனை முக்கியமானது. ராகுல் கடினமாக உழைக்கிறார். அவரால் நடுவரிசையிலும் களமிறங்க முடியும், தொடக்க வீரராகவும் விளையாட முடியும்.

விராட் கோலி சிறந்த கேப்டனாக இருக்கிறார். ஆனால், பேட்ஸ்மேனாக இன்னும் சிறப்பாகச் செயல்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச அரங்கில் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. பல சதங்களை அடித்த கோலி, ஒரு சதம்கூட அடிக்க முடியாமல் இருக்கிறார். இங்கிலாந்தில் 70 முதல் 80 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார். நம்பிக்கையுடன் கோலி விளையாட வேண்டும்.

ரஹானே, புஜாரா இருவரும் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். ரஹானே முதல் இன்னிங்ஸில் ஓரளவு ரன் சேர்த்தால், புஜாரா அதுகூட சேர்க்கவில்லை. ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்ததால், ரஹானே மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. ரஹானேயின் 30 முதல் 40 ரன்கள் அவரின் இடத்தைத் தக்கவைக்க முடியாது. கடினமான முடிவுகளைத் தேர்வுக்குழு எடுக்க வேண்டிய நேரத்தில் மூத்த வீரர்களுக்குப் பயிற்சியாளர் திராவிட் ஆதரவாக இருப்பது மகிழ்ச்சிதான்.

பிரியங்க் பஞ்ச்சல், ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற இளம் வீரர்களை நீண்டகாலம் அமரவைக்க முடியாது என்பதால், ரஹானே, புஜாரா தங்களை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள், அழுத்தமும் அதிகரித்துள்ளது. இது மட்டுமல்லாமல் ஷுப்மான் கில், பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ஆகியோரும் காத்திருக்கிறார்கள். கடும் அழுத்தத்தை புஜாராவும், ரஹானேவும் எதிர்கொள்கிறார்கள்''.

இவ்வாறு சரண்தீப் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x