Published : 27 Dec 2021 08:11 PM
Last Updated : 27 Dec 2021 08:11 PM

ரவி சாஸ்திரி வேலை வெண்ணை தடவிப் பேசுவது அல்ல; அஸ்வின் தவறாகப் புரிந்து கொண்டார்: தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினர் ஆதரவு


புதுடெல்லி : ரவி சாஸ்திரியின் வேலை வெண்ணை தடவிப் பேசுவது இல்லை. ரவி சாஸ்திரி பேசியதை அஸ்வின்தான் தவறாகப் புரிந்து கொண்டார் என்று தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினர் சரண்தீப் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் அளித்த பேட்டியில் “ கடந்த 2018-19ம் ஆண்டு ஆஸ்திரேலியப் பயணத்தில் சிட்னியில் 5 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவை புகழ்ந்து, வெளிநாடுகளில் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியதால் நான் நொறுங்கிவிட்டேன்” எனத் தெரிவித்திருந்தார்.

ரவிச்சந்திர அஸ்வினின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “ஒவ்வொருவரின் வேதனைக்கும் நான் வெண்ணை தடவிக்கொடுப்பதுபோல் பேசுவது என் வேலையல்ல. என்னுடைய பணி எந்தவிதமான திட்டமும் இல்லாமல் உண்மையைப் பேசுவதுதான். குல்தீப் யாதவ்குறித்த என்னுடைய கருத்து அஸ்வினை காயப்படுத்தியிருந்தால், எனக்கு மகிழ்ச்சிதான். நான் குல்தீப் யாதவை புகழ்ந்தது என்பது இளம் வீரருக்கு உற்சாகமாக இருக்கும், சிறப்பாக அடுத்தடுத்து விளையாடுவார் என்பதற்காகத்தான். ஆனால் அஸ்வின் சிட்னி டெஸ்டில் அப்போது விளையாடவில்லை, குல்தீப் நன்றாகப் பந்துவீசினார். அதனால்தான்குல்தீப் யாதவுக்கு வாய்ப்புக் கிடைத்தது.

குல்தீப் யாதவைப் புகழ்ந்தால் அஸ்வின் ஏன் துடிக்கிறார். உங்களுடைய பயிற்சியாளர் உங்களிடம் சவால் விடுத்தால், என்ன செய்வீர்கள். வீட்டுக்குச்சென்று தனியே அமர்ந்து அழுவீர்களா. நான் திரும்பவரமாட்டேன் என பேசுவீர்களா. திறமையான வீரராக இருப்பவர், அந்த சவாலை எதிர்கொண்டு, பயிற்சியாளர் கூறியது தவறு என நிரூபிக்க வேண்டும். அப்படி அஸ்வின் செய்திருக்கலாமே” எனத் தெரிவித்தார்

இந்நிலையில் தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினர் சரண்தீப் சிங் இந்த விவகாரத்தில் ரவி சாஸ்திரிக்கு ஆதரவாகக் கருத்துத்த தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் “ ரவி சாஸ்திரி பேசியதை அஸ்வின் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.நானும் அந்த பயணத்தின்போதுஇந்திய அணியோடுஇருந்தேன். அப்போது ரவி சாஸ்திரி பேசியபோதுகூட உடன் இருந்தேன்.

ரவி சாஸ்திரி கூறியது என்னவென்றால், நம்முடைய அணியில் வெளிநாடுகளில் பந்துவீசுவதில் குல்தீப் யாதவ் சிறப்பாகப் பந்துவீசுகிறார். காரணமென்றால் அவரின் பந்துவீ்ச்சு ஸ்டைல் வித்தியாசமாக இருக்கிறது என்றார். ஆனால், இதை அஸ்வின் தவறாக எடுத்துக்கொண்டார். சாஸ்திரி பேசியதுசரிதான். அவரின் வேலை வெண்ணை தடவிப் பேசுவது அல்ல

சரண்தீப் சிங்

அஸ்வின் சிறந்த பந்துவீச்சாளர் ஆப்பிரிக்க நாடுகளின் சூழலுக்கு ஏற்ப நன்றாக பந்துவீசக்கூடியவர். போட்டியை எந்தநேரத்திலும் திருப்பும் வல்லமை அஸ்வினுக்கு உண்டு. அஸ்வினுக்கு நிச்சயம் இது கடைசி பயணாக இருக்காது, அவர் சிறப்பாக செயல்பட வாய்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்தார்

விராட் கோலி குறித்து சரண்தீப் சிங் கூறுகையில் “ மனரீதியாக கோலி தகுதியாகஇருக்கிறார், டெஸ்ட் தொடரில் எந்தவிதமான குழப்பமின்றி விளையாடுவார். கேப்டன்பதவி தொடர்பான எந்த சர்ச்சையும் அவரைப் பாதிக்காது. கடந்தகாலத்தைப் போல் இயல்பான பேட்டிங்கில் கோலி விளையாடுவார். கோலியிடம் இருந்து ஒரு டெஸ்ட் சதத்தை எதிர்பார்க்கலாம்.இந்த முறை சமநிலை கொண்ட அணி தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x