Last Updated : 27 Dec, 2021 08:43 AM

 

Published : 27 Dec 2021 08:43 AM
Last Updated : 27 Dec 2021 08:43 AM

வெளிச்சம் விளையாடியது; தினேஷ் கார்த்திக் சதம் வீண்: விஜய் ஹசாரே கோப்பையை முதல்முறையாக வென்றது இமாச்சலப் பிரதேசம்

விஜய் ஹசாரே கோப்பையை வென்ற இமாச்சலப்பிரதேச அணி | படம் உதவி ட்விட்டர்


ஜெய்ப்பூர்:ஷுபம் அரோரோவின் சதம், கேப்டன் ரிஷி தவண் ஆகியோரின் ஆட்டத்தால் ஜெய்பூரில் நேற்று நடந்த விஜய் ஹசாரோ கோப்பைக்கான இறுதிஆட்டத்தில் தமிழக அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாச்சலப் பிரதேச அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

முதலில் பேட் செய்த தமிழக அணி 49.4 ஓவர்களில் 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 315 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இமாச்சலப்பிரதேச அணி களமிறங்கியது. ஆனால், ஆட்டத்தில் போதுமான அளவு வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அப்போது இமாச்சலப்பிரதேச அணியின் வெற்றிக்கு 15 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் மோசமான வானிலை, வெளிச்சக்குறைவு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன்பின் வி.ஜெயதேவன் முறை மூலம் கணக்கீடு செய்யப்பட்டதில் இமாச்சலப்பிரதேச அணி தமிழக அணியைவிட 11 ரன்கள் அதிகமாக இருந்ததால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆட்டம் யாருக்குசாதகமாக முடியும் என்று பரபரப்புடன் நகர்ந்தது ஆனால் வெளிச்சம் ஆட்டத்தில் விளையாடி தமிழக அணியின் முயற்சி்க்குத் தடை போட்டது. ஒருவேளை வெளிச்சம் இருந்திருந்தால், ஆட்டம் தமிழக அணியின் பக்கம் முடிவதற்கும் வாய்ப்பிருந்திருக்கும். ஆனால், இமாச்சலப்பிரதேச பேட்டிங் கடைசி நேரத்தில் அனல்பறக்கும் வகையில் இருந்ததால், கடைசி 10 ஓவர்கள் ரன்ரேட்டிங் அவர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. நடுப்பகுதியில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசிய தமிழக வீரர்கள் கடைசி 10 ஓவர்களில் சொதப்பினர்.

முதலில் பேட் செய்த தமிழக அணி தொடக்கத்திலிருந்தே மளமளவென விக்கெட்டுகளை இழந்து வந்தது. பாபா அபராஜித்(2), ஜெகதீஸன்(9), ஷாய் கிஷோர்(18), முருகன் அஸ்வின்(7) ஆகியோர் விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தமிழக அணி தடுமாறியது.


5-வது விக்ெகட்டுக்கு தினேஷ் கார்த்திக், பாபா இந்திரஜித் ஜோடி சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் 5வது விக்கெட்டுக்கு 202 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். தினேஷ் கார்த்திக் இப்படியெல்லாம் இந்திய அணியில் விளையாடியிருந்தால் அவருக்குரிய இடத்தை யாரும் எடுத்திருக்கமாட்டார்கள், அருமையான ஆட்டத்தை தினேஷ் கார்த்திக் வெளிப்படுத்தினார். சிக்ஸர்,பவுண்டரி எனவிளாசிய தினேஷ் கார்த்திக் அபாரமான சதத்தை நிறைவு செய்தார்.

கார்த்திக்கிற்கு துணையாக ஆடிய இந்திரஜித் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த அதிரடி பேட்ஸ்மேன் ஷாருக்கான் 3 சிக்ஸர் 3 பவுண்டரி உள்ளிட்ட 21 ப ந்துகளில் 42 ரன்கள் சேர்த்துஆட்டமிழந்தார். கேப்டன் விஜய் சங்கர் 22 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
இமாச்சலப்பிரதேசம் தரப்பில் ரிஷி தவண் 3 விக்கெட்டுகளையும், பங்கஜ் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

315 ரன்களை துரத்தி இமாச்சலப்பிரதேச அணி களமிறங்கியது. தொடக்க் வீரர் ஷுப்பாம் அரோரா, பிரசாந்த் சோப்ரா இருவரும் முதல்விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். சோப்ரா 21 ரன்னில் ஷாய் கிஷோர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்த ஓவரில் திக்விஜய் ரங்கியை டக்அவுட்டில் வாஷிங்டன் சுந்தர் வெளியேற்றினார். 3-வது விக்கெட்டுக்கு வந்த நிகில் அதிரடியாக 2 சிக்ஸர்கள் அடித்த நிலையில் 18 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 93ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இமாச்சலப்பிரதேசம் தடுமாறியது
அடுத்துவந்த அமித் குமார், ஷுபம் அரோராவுடன் இணைந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டார். அமித் குமார் 57 பந்துகளில் அரைசதம் அடித்தார், அரோராவும் சதத்தை நோக்கி முன்னேறினார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.

கேப்டன் ரிஷி தவண் களமிறங்கி, அரோராவுடன் சேர்ந்தார். கேப்டன் தவண் தமிழகவீரர்களின் பந்துவீச்சில் சிக்ஸர்,பவுண்டரி என விளாச இலக்கை நோக்கி இமாச்சலம் முன்னேறியது ஆட்டமும் பரபரப்படைந்தது. 6 ஓவர்களில் 38 ரன்கள் இமாச்சலப்பிரதேச வெற்றிக்கு தேவைப்பட்டது. தவண், அரோராவின் அதிரடிஆட்டத்தால் இலக்கை நெருங்கினர். 15 பந்துகளில் இமாச்சலப்பிரதேசம் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டபோது, ஆட்டத்தில் வெளிச்சக் குறைவு ஏற்பட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டது.

தவண் 42 ரன்களுடனும், ஷுபம் அரோரா 136 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். விஜேடி முறையில் இமாச்சலப்பிரதேச அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x