

புதுடெல்லி: 2022-ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடருக்கான ஏலம் எந்த நகரில் நடக்கப் போகிறது என்ற உறுதியான தகவல் தெரியாமல் பல்வேறு நகரங்கள் ஊகத்தில் பேசப்படுகின்றன.
முதலில் சென்னை, கொல்கத்தா என்று கூறப்பட்ட நிலையில் இப்போது பெங்களூரு அல்லது கொச்சியில் நடக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022-ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடர் சற்று புதுவிதமானது, வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் புதிதாக இணைகின்றன. அகமதாபாத் மற்றும் லக்னோ நகரங்களைத் தலைமையாக வைத்து இரு அணிகள் வருகின்றன.
ஏற்கெனவே இருக்கும் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் குறித்த பட்டியலை அறிவித்துவிட்டது. இதில் 19 உள்நாட்டு வீரர்கள் 8 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். புதிதாக இடம் பெறும் இரு அணிகளும் 3 வீரர்களைத் தக்கவைக்கலாம்.
வீரர்கள் தக்கவைப்பு முடிந்த நிலையில் அடுத்ததாக மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள், வீரர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எந்த அணிக்கு எந்தெந்த வீரர்கள் செல்வார்கள், அணியின் பலம், பலவீனம் குறித்து அறிய பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஆனால், ஐபிஎல் மெகா ஏலம் எங்கு நடக்கும் என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் இல்லை. கொல்கத்தா அல்லது சென்னையில் ஐபிஎல் மெகா ஏலம் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், இப்போது பெங்களூரு அல்லது கொச்சி நகரில் நடக்கலாம் எனவும், பிப்ரவரி முதல் வாரம் அல்லது 2-வது வாரத்தில் நடக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒமைக்ரான் பரவலால் ஐபிஎல் இந்தியாவில் நடத்த முடியாமல் போனால், பி பிளான் ஏதும் இருக்கிறதா என்று பிசிசிஐ நிர்வாகியிடம் நிருபர் கேட்டபோது, இப்போதே அதுகுறித்துப் பேசுவது சரியல்ல எனத் தெரிவித்தார்.
இதில் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சுனில் நரேன், ஆன்ட்ரூ ரஸல், க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தங்கள் அணியிலேயே தொடர்கின்றனர்.