Published : 22 Dec 2021 09:24 AM
Last Updated : 22 Dec 2021 09:24 AM

இந்திய டெஸ்ட் தொடர்: தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு; முக்கிய வீரர் திடீர் விலகல்


ஜோகன்னஸ்பர்க்: இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்க்கியா விலகியுள்ளார்.

வேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா தொடர்்ந்து காயத்தால் அவதிப்படுவதால் அவருக்கு முழுமையான ஓய்வு தேவை என்பதால் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியா,தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்சூரியன் நகரில் வரும் 26ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் நோர்க்கியா விலகியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும். நோர்க்கியாவுக்கு மாற்றாக எந்த வீரரையும் இதுவரை அறிவி்க்கவில்லை.

இதனால் தென் ஆப்பிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சில் காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி ஆகியோர் மட்டுமே உள்ளனர். நோர்க்கியாவுக்கு மாற்றாக டுனே ஆலிவர் அல்லது இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜென்ஸன் சேர்க்கப்படலாம்.

ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த நோர்க்கியா, 2022ம்ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அவரை அனுப்பாமல் டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் அவரை தக்கவைத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் நிச்சயம் தடுமாறுவார்கள், தடுமாறியிருக்கிறார்கள் என்பதற்கான வரலாறு இருக்கிறது. ஆனால், தற்போது தென் ஆப்பிரிக்க அணியில் மணிக்கு 150கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடிய நோர்க்கியா இல்லாதது இந்திய அணிக்கு சாதகமான விஷயம்தான். 2021ம் ஆண்டில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நோர்க்கியா 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x