Last Updated : 20 Dec, 2021 09:47 AM

 

Published : 20 Dec 2021 09:47 AM
Last Updated : 20 Dec 2021 09:47 AM

யார் இந்த கிடாம்பி ஸ்ரீகாந்த்? தனது ராக்கெட்டால் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த சாதனை வீரர்

கிடாம்பி ஸ்ரீகாந்த் | படம் உதவி ட்வி்ட்டர்


இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு இருக்கும் பிரபலம், ரசிகர்கள் பட்டாளம், ஆதரவு போன்றவை பிற விளையாட்டுகளுக்கு இல்லை என்ற ஆதங்கம், கவலை, அவதானிப்பு நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.

ஆனால், உலகளவில் பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்கள் சாதனைப் படைத்தபோது மட்டும் அவர்கள் கொண்டாடப்பட்டு இருக்கிறார்களே தவிர அதன்பின் அந்த விளையாட்டு ரசிகர்கள், மக்கள் மனதில் மறைந்துவிடுகிறது.

தொடர்ந்து ரசிகர்களை கவனிக்க வைக்க, அதிரடி வெற்றிகளையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்துவது அவசியம். அந்த வகையில் கிரிக்கெட்டுக்கு அடுத்தார்போல் ஆர்வத்தை அதிகமாகத் தூண்டிய விளையாட்டுகளில் முக்கியமானது பாட்மிண்டன்.

பாட்மிண்டன் என்றாலே கோபிசந்த் மட்டுமே அறியப்பட்ட காலத்தில் அவரின் ஓய்வுக்குப்பின் அவரின் பட்டறையில்செதுக்கப்பட்டு பல வீரர்கள் அடுத்தடுத்து உருவாகினர். சாய்னா நேவால், பி.வி.சிந்து, பருப்பள்ளி காஷ்யப், கிடாம்பி ஸ்ரீகாந்த், அஸ்வினி பொன்னப்பா என பல வீரர், வீராங்கனைகள் உருவாகினர்.

அந்தப் பட்டறையிலிருந்து வெளிவந்து பல பட்டங்களையும், பதக்கங்களையும் வென்றிருந்தாலும் பெரும்பாலான ரசிகர்களால் அதிகம் அறியப்படாத, வீரராக இருந்தவர் கிடாம்பி ஸ்ரீகாந்த். வெளிச்சத்துக்கு வராத, தன்துறை சாரந்தவர்களால் மட்டுமே அறியப்பட்டவராக கிடாம்பி ஸ்ரீகாந்த் இருந்து வந்தார்.

ஆனால், ஸ்பெயின் நேற்று நடந்த உலக பாட்மிண்டன் டூர் பைனலில் வெள்ளி வென்றதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்க வைத்த வீரராக ஸ்ரீகாந்த் மாறிவிட்டார். உலக பாட்மிண்டனில் இதுவரைஅதிகபட்சமாக இந்திய வீரர்களில் கோபிசந்த் மட்டுமே வெண்கலம் வென்றிருந்தார். ஆனால், இதில் வெள்ளிப் பதக்கத்தை வென்று ஸ்ரீகாந்த் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இறுதிப்போட்டி வரை முன்னேறிய முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும் ஸ்ரீகாந்த் பெற்றார்.

ஸ்பெயினில் நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் சிங்கப்பூர் வீரர் லோ கீனிடம் 20-15 , 22-20 என்ற போராடி தங்கப் பதக்கத்தை ஸ்ரீகாந்த் தவறவிட்டார்.

யார் இந்த ஸ்ரீகாந்த் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழக்கூடும்… அதற்கான பதில்கள்.

ஆந்திர மாநிலம், ராயுலபள்ளம் நகரில் 1993ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி பிறந்தவர் ஸ்ரீகாந்த் நம்மாள்வார் கிடாம்பி. தந்தை கே.விஎஸ். கிருஷ்ணா விவசாயி. விவசாயக் குடும்பத்தில் ஸ்ரீகாந்த் பிறந்தாலும், தனது மூத்த சகோதரர் கே.நந்தகோபால் பாட்மிண்டன் ஆடுவதைப்பார்த்துதான் தானும் அதேபோன்றுவீரராக மாற ஸ்ரீகாந்த் விரும்பினார்

பாட்மிண்டன் வீரராக மாறிய ஸ்ரீகாந்த் தனது 18-வயதில் 2011ம் ஆண்டு நடந்த இளைஞர்களுக்கான காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளியையும், ஆடவர் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

அதேஆண்டில் புனேயில்நடந்த அனைத்து இந்திய ஜூனியர்களுக்கான சர்வதேச பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்போட்டியில் ஆடவர் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றார்.

2012ம் ஆண்டில், மாலத்தீவில் நடந்த சர்வதேச பாட்மிண்டன் போட்டியில் மலேசிய வீரர் ஜுல்வாதில் ஜூல்கபியை வீழ்த்தி ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ஸ்ரீகாந்த் பெற்றார்

2013ம் ஆண்டில், தாய்லாந்து ஓபன் கிராண்ட் ப்ரீ பாட்மிண்டனில் உலகின் 8-வது வீரரான தாய்லாந்தின் பான்சகா போன்சனாவை நேர்செட்களில் வீழ்த்தி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். அதேஆண்டில் டெல்லியில்நடந்த அனைத்திந்திய தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஒலிம்பிக் வீரர் பருப்பள்ளி காஷ்யப்பை வீழ்த்தி ஸ்ரீகாந்த் மகுடம் சூடி முதல் சீனியர் பட்டத்தை வென்றார்.

2014ம் ஆண்டு இந்தியன் ஓபன் கிராண்ட் ப்ரீயில் 2-வது இடத்தையும், மலேசிய ஓபனில்காலிறுதிவரை சென்று ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார். 2014ம்ஆண்டு காமென் வெல்த் விளையாட்டுப்போட்டியில் இடம் பெற்றிருந்த ஸ்ரீகாந்த்,அரையிறுதியில்தோல்வி அடைந்தார்

2014-ம் ஆண்டில் சீனாவில் நடந்த சீன ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் லின் டானை வீழ்த்தி முதல்முறையாக சீன ஓபன் சீரிஸில் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்

.2015-ம் ஆண்டில் ஸ்விஸ்ஓபன் கிராண்ட் ப்ரீயில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் விக்டரை வீழ்த்தி முத்லமுறையாக தங்கம் வென்றார். இந்தப்போட்டியில் சாம்பியன்பட்டம்வென்ற முதல் இந்திய வீரர் எனும சிறப்பையும் ஸ்ரீகாந்த் பெற்றார். இந்த ஆண்டில்இந்திய ஓபன் சீரிஸிலும் ஸ்ரீகாந்த் பட்டம் வென்றார்

2016ம் ஆண்டில் சயத்மோடி சர்வதேச பாட்மிண்டன் போட்டியில் ஸ்ரீகாந்த் கோப்ைபயைக் கைப்பற்றினார். அதே ஆண்டில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்ரீகாந்த் 2 தங்கப் பதக்கங்களை வென்றார்.
2017-ம் ஆண்டில் சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் சாய் பிரணித்துடன் சேர்ந்து ஆடியஸ்ரீகாந்த் தங்கப்பதக்கம் வென்றார்.

மேலும் இந்தோனேசிய சூப்பர் சீரிஸ், ஆஸ்திரேலியசூப்பர் சீரிஸ், டென்மார்க் ஓபன், பிரெஞ்சு ஓபன் ஆகியவற்றிலும் கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

2018ம் ஆண்டு ஆஸ்திேரலியாவில் கோல்கோஸ்டில் நடந்த காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியில், கலப்புஇரட்டைர் பிரிவில் ஸ்ரீகாந்த் தங்கமும், ஒற்றையர் பிரிவில் வெள்ளியும் வென்றார். தொடர்ந்து வெற்றிகளைப் பெற்ற ஸ்ரீகாந்த், 2018 ஏப்ரல் மாதம், உலக பாட்மிண்டன் ஆடவர் பிரிவு தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றார். இது தவிர கடந்த 2015ம் ஆண்டில் அர்ஜுனா விருதும், 2018ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் ஸ்ரீகாந்த்துக்கு வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

கிடாம்பி ஸ்ரீகாந்த பல்வேறு போட்டிகளில் சாதனை வெற்றிகளைக் குவித்திருந்தாலும், ஸ்பெயினில் நேற்று நடந்த உலக பாட்மிண்டன் பைனலில் வெள்ளி வென்றது ஸ்ரீகாந்த்துக்கு முத்தாய்ப்பாக அமையும். இந்திய பாட்மிண்டனில் சாதனை வீரராகவும் ஸ்ரீகாந்த் மாறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x