Published : 17 Dec 2021 03:57 PM
Last Updated : 17 Dec 2021 03:57 PM

தெ.ஆப்பிரிக்கா தொடர் வரை காத்திருப்பு; கோலி மீது எந்த நடவடிக்கையும் இருக்காது: காரணம் என்ன?

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி | கோப்புப்படம்

புதுடெல்லி: பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்த இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி மீது எந்த நடவடிக்கையும் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் முடியும் வரை பிசிசிஐ சார்பில் இருக்காது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் ஆப்பிரிக்காவுக்குப் புறப்படும் முன் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை அறிவித்தபோது பிசிசிஐ சார்பில் யாரும் என்னிடம் பதவியை விட்டுச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளவில்லை” எனத் தெரிவித்தார்.

ஆனால், பிசிசிஐ தலைவர் கங்குலி அளித்த பேட்டியில், “டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகும் முன் தானும், தேர்வுக் குழுவினரும் கோலியிடம் பதவியிலிருந்து விலக வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டோம்” எனத் தெரிவித்தார். இருவரின் பேச்சிலும் முரண்பாடு இருந்ததால், பிசிசிஐ அமைப்புடன் நேரடியாக மோதலில் கோலி ஈடுபடுகிறாரா என்ற கேள்வி எழுந்தது.

விராட் கோலியின் பேச்சு குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கேட்டபோது, கருத்து கூற மறுத்துவிட்டார். ஆனால், பிசிசிஐ இதை முறைப்படி அணுகும் என்று தெரிவித்தார்.

ஆனால், பிசிசிஐ வட்டாரங்கள் இதுகுறித்துக் கூறுகையில், “விராட் கோலி தென் ஆப்பிரிக்கா புறப்படும் முன் அளித்த பேட்டி குறித்து பிசிசிஐ நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்கா சென்றபின் கோலி எந்தவிதமான பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தக்கூடாது என பிசிசிஐ சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

தென் ஆப்பிரிக்கா பயணத்தில் இந்திய அணி இருக்கும்போது ஏதேனும் நடவடிக்கை விராட் கோலிக்கு எதிராக எடுத்தால் அது அணியின் நலனுக்கும் உகந்தது அல்ல. வீரர்களின் நம்பிக்கையைக் குலைத்துவிடும்.

அதேசமயம், விராட் கோலி பேட்டிக்குப் பின், பிசிசிஐ நிர்வாகிகள், தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் ஜூம் மீட்டிங் மூலம் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, இது தொடர்பாக எந்தவிதமான அறிக்கையும் விடக்கூடாது, யாரும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கக் கூடாது, ஒட்டுமொத்தமாக ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தைக் கவனமாக அணுக வேண்டும் என்பதால், வல்லுநர்களிடம் கருத்து கேட்டு நிதானமாக முடிவு எடுக்கவும் பிசிசிஐ பேசியுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரையும் அழைத்து, பிசிசிஐ தலைவர், செயலாளர் பேச்சு நடத்துவது சரியானதாக இருக்கும். கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க முடியும் என்று பேசப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை கங்குலி அல்லது ஜெய் ஷா இருவருமே கோலியிடம் ஏதும் பேசவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக மத்திய ஊதிய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூற மாட்டார்கள். ஆனால், அதையும் மீறி கோலி பேட்டியளித்துள்ளதால் எளிதாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடாது.

மேலும், கடந்த 13 ஆண்டுகளாக கோலி, ஊடகத்தினரைக் கையாண்டு வருகிறார். ஊடகத்தினர் எதைக் கேட்பார்கள், எப்போது பதில் அளிக்கலாம் என்பதை நன்கு அறிந்தவர். அதனால்தான், முன்கூட்டியே தயாராகி ஊடகங்களைச் சந்தித்தார். மேலும், முதலில் தனக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.

அதன்பின்புதான் ஒருநாள் கேப்டன்ஷிப் நீக்கத்தையும், டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகியபோது பிசிசிஐ சார்பில் யாரும் மறுக்கவில்லை என்றும் கோலி தெரிவித்துள்ளார். கோலியின் முழுமையான பேட்டியைக் கவனித்தால் அவர் எந்த ஒரு இடத்திலும் பிசிசிஐ மீது அதிருப்தியையோ, கங்குலி மீது அதிருப்தியையோ தெரிவிக்கவில்லை. ஆனால், தனக்கு எதிராக காய் நகர்த்தப்பட்டதை மட்டும் தெளிவுபடுத்திவிட்டார்.

இதனால் கோலியின் பக்கம் வலுவாக இருப்பதால் கோலி மீது எந்த நடவடிக்கையையும் பிசிசிஐ அவசரப்பட்டு எடுக்க வாய்ப்பில்லை. அதேநேரம், விராட் கோலி தென் ஆப்பிரிக்காவில் இரு சதங்கள் அடித்தோ அல்லது டெஸ்ட் தொடரை வென்றோ நாடு திரும்பினால், கோலி மீது எந்த நடவடிக்கையும் இருக்காது.

இதை பிசிசிஐ “ஜஸ்ட் பாஸ்” என்ற ரீதியில் கடந்துவிடும். ஆதலால், தென் ஆப்பிரிக்கத் தொடர் முடியும் வரை கோலி மீது எந்த நடவடிக்கையும் இருக்காது. விளக்கமும் கேட்கப்படாது” எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x