Last Updated : 15 Dec, 2021 05:11 PM

 

Published : 15 Dec 2021 05:11 PM
Last Updated : 15 Dec 2021 05:11 PM

உண்மையைச் சொல்வது யார், கங்குலியா-கோலியா; யாருடன் யார் மோதல்?

சவுரவ் கங்குலி, விராட் கோலி | கோப்புப் படம்.

ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து முன்னறிவிப்பின்றி கோலியை நீக்கியது, டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று கோலி கூறியபோது கங்குலி சமாதானம் செய்தது, இதில் எது உண்மை, யார் சொல்வதில் உண்மை இருக்கிறது என்பது குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் உண்மையில் மோதல் விராட் கோலிக்கும், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்குமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. ரோஹித் சர்மாவுக்கும், தனக்கும் மோதல் இல்லை என்று விராட் கோலி தெளிவுபடுத்திவிட்டார்.

ஆனால், கோலியின் பேட்டிக்குப் பின் பிசிசிஐ தலைவர் கங்குலி கூறிய கூற்றுக்கும், கோலியின் பேச்சுக்கும் பல்வேறு முரண்பாடுகள் எழுகின்றன.

டி20 கேப்டன் பதவி குறித்த விஷயத்தில் கோலி இன்று அளித்த பேட்டியில், “டி20 உலகக் கோப்பை போட்டியுடன் நான் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் என முடிவைத் தெரிவித்தபோது, பிசிசிஐ எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, நல்லமுறையில் ஏற்றுக்கொண்டனர், வேண்டாம், ராஜினாமா செய்யாதீர்கள் என்று கூறவில்லை, தயக்கமும் காட்டவில்லை.

ஆனால், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாகத் தொடர விரும்புகிறேன் என பிசிசிஐயிடம் தெரிவித்தேன். என்னுடைய தரப்பிலிருந்து தகவலைத் தெளிவாகத் தெரிவித்தேன். நான் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாக நீடிக்க விரும்பவில்லை என பிசிசிஐ நிர்வாகிகளும், தலைவர்களும் விரும்பினாலும் பரவாயில்லை எனவும் தெரிவித்திருந்தேன்.

நான் ஏன் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன், காரணங்கள் என்ன என்பதையும், என் கண்ணோட்டத்தையும் தெரிவித்தேன். அதைப் புரிந்துகொண்டார்கள். ஒரு முறை கூட நீங்கள் டி20 கேப்டன் பதவியை விட்டு விலகக்கூடாது என்று என்னிடம் கூறப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

ஆனால், டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகியது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி சமீபத்தில் அளித்த பேட்டியில், “டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகப்போகிறேன் எனத் தெரிவித்தவுடன் பிசிசிஐ தரப்பிலிருந்து பேசி கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், கேப்டன் கோலி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், இரு ஒயிட்பால் போட்டிக்கு இரு கேப்டன்கள் இருக்க முடியாது எனத் தேர்வுக் குழுவினர் விரும்பியதால் நீக்கப்பட்டார்” எனத் தெரிவித்தார்.

டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவு எடுத்த விராட் கோலியிடம் பேசி சமாதானம் செய்ய முயன்றதாக பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியதும், பிசிசிஐ பேசியதாவதும் கூறியது முரணாக இருக்கிறது:

ஒருநாள் கேப்டன் பதவி நீக்கத்தில் முரண்பாடுகள்

விராட் கோலி இன்று அளித்த பேட்டியில், “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அணித் தேர்வு நடக்கும் போதுதான் என்னை ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது எனக்குத் தெரியும். எனக்கு முன்கூட்டியே கேப்டன் பதவி நீக்கம் குறித்து பிசிசிஐ சார்பில் யாரும் என்னிடம் பேசவில்லை, முன்னறிவிப்பு ஏதும் கொடுக்கவில்லை.

தேர்வுக்குழுக் கூட்டம் நடந்து வீரர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன் என்னைத் தேர்வுக்குழுத் தலைவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது டெஸ்ட் அணி விவரங்களைத் தெரிவித்தார். பேசி முடிக்கும்போது, நாங்கள் தேர்வுக் குழுவில் உள்ள 5 பேரும், உங்களை ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்குவதாக முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். இதுதான் நடந்தது. எனக்கு முன்கூட்டியே தகவல் ஏதும் இல்லை” எனத் தெரிவித்தனர்.

ஆனால், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக விராட் கோலியும், ஒருநாள் அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவும் நியமிக்க தேர்வுக் குழுவினர் முடிவெடுத்தார்கள். பிசிசிஐ தலைவராகிய நான் தனிப்பட்ட முறையில் விராட் கோலியிடம் பேசினேன். தேர்வுக்குழுத் தலைவரும் கோலியிடம் பேசினார்” எனத் தெரிவித்தார்.

விராட் கோலி, "நான் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படும் முடிவே தனக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்புதான் தெரியும். முன்கூட்டியே யாரும் பேசவில்லை, தன்னிடம் ஆலோசிக்கவில்லை" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

விராட் கோலியிடம் பேசினோம், தேர்வுக்குழுத் தலைவர் பேசினார் என கங்குலி கூறியுள்ளார்.

இதில் பிசிசிஐ தலைவர் கங்குலியின் பேச்சு, விராட் கோலியின் பேச்சுக்கு முரணாக இருப்பதால், யார் கூறியதில் உண்மை இருக்கிறது எனத் தெரியவில்லை. யாருடன் யாருக்கு மோதல் என்பதும் வரும் காலங்களில் தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x