Published : 15 Dec 2021 04:29 PM
Last Updated : 15 Dec 2021 04:29 PM

டி20 உலகக் கோப்பையில் அஸ்வினைச் சேர்க்கக் கூறியதே அவர்தான்: உண்மையை உடைத்த கங்குலி 

ரவிச்சந்திரன் அஸ்வின் | கோப்புப்படம்

மும்பை: டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டதற்கு யார் காரணம் என்பதை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கியுள்ளார்.

ஒருநாள், டி20 போட்டியின் காலம் முடிந்துவிட்டது, டெஸ்ட் போட்டியில் மட்டும்தான் பந்துவீச முடியும் என்று ஒதுக்கிவைக்கப்பட்ட தமிழக சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், டி20 உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டதும் அதிர்ச்சியாக இருந்தது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஸ்வின் 4 போட்டிகளாக வாய்ப்பு கொடுக்காமல் அமரவைக்கப்பட்ட நிலையில், டி20 போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசிய ரெக்கார்ட், விக்கெட் வீழ்த்தியது, அனுபவம் அனைத்திலும் சிறப்பான நிலையில் இருக்கும் அஸ்வினை கேப்டன் விராட் கோலி ப்ளேயிங் லெவனில் தேர்வு செய்யாமல் இருக்க கிரிக்கெட்டைத் தாண்டிய காரணம் இருக்கும் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக சுனில் கவாஸ்கர், திலீப் வெங்சர்கார் உள்ளிட்ட பலரும் அஸ்வின் தேர்வு செய்யப்படாதது குறித்துக் கேள்வி எழுப்பினர்.

ஆனால், டி20 உலகக் கோப்பை போட்டிக்கு அதாவது ஒயிட் பால் ஃபார்மெட்டுக்கு ஏறக்குறைய 2017-ம் ஆண்டுக்குப் பின் அஸ்வின் தேர்வானது அதிர்ச்சியாக இருந்தது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு அளிக்காததால் கண் துடைப்புக்காகத் தேர்வு செய்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்தது.

டி20 உலகக் கோப்பை போட்டியில் அஸ்வின் அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கு யார் காரணம் என்பதை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கியுள்ளார். போரியா மஜும்தார் நடத்தும் “பேக்ஸ்டேஜ் வித் போரியா” நிகழ்ச்சியில் சவுரவ் கங்குலி அளித்த பேட்டியில் கூறியதாவது:

''ரவிச்சந்திரன் அஸ்வின் ஒயிட்பால் ஃபார்மெட்டுக்குள் வருவாரா என்று எனக்கே உறுதியில்லாமல் இருந்தது. ஆனால், டி20 உலகக் கோப்பைக்கான அணித் தேர்வில் கடைசி நேரத்தில் அஸ்வின் அணிக்குள் தேவை என்று விரும்பியது கேப்டன் விராட் கோலிதான். அஸ்வினைப் பொறுத்தவரை சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதை இறுகப் பிடித்துச் சிறப்பாகச் செயல்படுவார்.

அஸ்வின் டெஸ்ட் ரெக்கார்டைப் பார்த்தால் அவரை அணியிலிருந்து நீக்குவது சுலபமான காரியமல்ல. அற்புதமான சாதனைகளை அஸ்வின் வைத்துள்ளார். அஸ்வின் சிறந்தவர் என்று நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை, அவரின் சாதனைகள்தான் பேசுகின்றன. இதுபோன்ற வீரர்களை நாம் எளிதில் புறக்கணிக்க முடியாது. சும்மா பார்த்துவிட்டு, இவர்களைக் கடந்துவிட முடியாது.

ஒவ்வொருவரும் அஸ்வினைப் பற்றிப் பேசுகிறார்கள். கான்பூர் டெஸ்ட்டில் அஸ்வின் பந்துவீச்சைப் பார்த்து திராவிட் புகழ்ந்தார். டெஸ்ட் போட்டியில் ஜாம்பவான், மேட்ச் வின்னராக இருந்த திராவிட், அஸ்வினைப் புகழ்ந்தார். அஸ்வினின் திறமையைப் புரிந்துகொள்ள பெரிய நிபுணத்துவம் தேவையில்லை.

நான் பார்த்ததில் இருந்துதான் அவருக்கான பாராட்டை அளிக்கிறேன். அஸ்வின், ஸ்ரேயாஸ் அய்யர், ரோஹித், விராட் அனைவரையும் பார்த்து விளையாட்டை கவனித்தவுடன் என் கருத்தைக் கூறிவிடுவேன். இதில் பெரிதாக ஏதும் இருக்காது.

கடந்த காலங்களில் அஸ்வின் டெஸ்ட், ஐபிஎல் தொடர் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்டதை அவருக்கான இடத்தை யாரும் பிடிக்க முடியவில்லை. மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார். ஐசிசி போட்டிகள், ஐபிஎல் ஆகியவற்றில் அஸ்வினின் பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் இருக்கிறது.

ஏன் அஸ்வின் அணிக்குள் கொண்டுவரப்பட்டார் என்பதற்கான காரணத்தை நான் தேடவில்லை. கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் இருந்தவர். இந்திய அணி பல வெற்றிகள் பெற்றபோதும் அணியில் இருந்தவர். சாம்பியன்ஸ் டிராபியின்போதும் அணியில் அஸ்வின் இருந்தார். சிஎஸ்கே ஐபிஎல் தொடரை வென்றபோதும் அஸ்வின் இருந்தார். சிஎஸ்கே அணிக்கு முக்கியமான பந்துவீச்சாளராகவும் அஸ்வின் இருந்தார். குறிப்பாக பவர் ப்ளே, கடினமான சூழலில் இருந்து அணியை மீட்டிருக்கிறார்''.

இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x