Last Updated : 14 Dec, 2021 11:43 AM

 

Published : 14 Dec 2021 11:43 AM
Last Updated : 14 Dec 2021 11:43 AM

ரோஹித் சர்மாவுடன் ‘ஈகோ’வா? தெ.ஆப்பிரிக்க ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகல்?

ரோஹித் சர்மா, விராட் கோலி | கோப்புப் படம்.

புதுடெல்லி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தான் விலகிக்கொள்வதாக பிசிசிஐ அமைப்பிடம் விராட் கோலி கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் ஆப்பிரிக்காவுக்கு வரும் 17-ம் தேதி புறப்படும் இந்திய அணி அங்கு சென்று 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக விராட் கோலியும், துணை கேப்டனாக ரோஹித் சர்மாவும் நியமிக்கப்பட்டனர். ஆனால் ஒருநாள் தொடருக்கு கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். கோலியிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தொடைப் பகுதியில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இதை பிசிசிஐ நேற்று முறைப்படி அறிவித்தது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ அமைப்பிடம் விராட் கோலி கேட்டுக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விராட் கோலி, அனுஷ்கா தம்பதியின் மகள் வாமிகா முதலாவது பிறந்த நாள் 2022, ஜனவரி 9-ம் தேதி வருகிறது. தன்னுடைய மகளின் முதல் பிறந்த நாளில் குடும்பத்தாருடன் இருக்க விரும்புவதால், ஒருநாள் தொடரிலிருந்து விலக்கு அளிக்கும்படி பிசிசிஐ அமைப்பிடம் கோலி கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், “விராட் கோலி தன்னுடைய மகளின் பிறந்த நாள் 2022 ஜனவரி மாதம் வருவதால், அந்த நேரத்தில் குடும்பத்தாருடன் செலவிட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலக்கு அளிக்கும்படி வாரியத்திடம் கோலி கேட்டுக் கொண்டிருக்கிறார்’’ எனத் தெரிவிக்கின்றன.

இந்திய அணிக்குள் மும்பை, டெல்லி என இரு பிரிவுகள் அதாவது கோலி ஆதரவாளர்கள், ரோஹித் சர்மா ஆதரவாளர்கள் என இரு பிரிவினர் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ரோஹித் சர்மாவைப் பற்றி விராட் கோலி புகழ்ந்து வெளியுலகில் பேசுவதும், கோலியைப் புகழ்ந்து ரோஹித் சர்மா பேசுவதும் ஒருமுறைக்காகவே இருந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோலியிடம் இருந்து ஒருநாள் கேப்டன்ஷி திடீரென பறிக்கப்பட்டது அவருக்கும், அவரின் ஆதரவாளர்களுக்கும் பெரிய அதிர்ச்சியை அளித்திருக்கிறது. இது தொடர்பாகப் பல்வேறு ஊகச் செய்திகள் வந்த நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெளிவான விளக்கத்தை அளித்தார். அதில், “விராட் கோலியை டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டேன்.

ஆனால், அவர் கேட்கவில்லை. பணிச்சுமை பற்றி நானும் அறிவேன். நான் இதுபோன்ற நெருக்கடிகளைச் சந்தித்ததால் அறிவேன் எனத் தெரிவித்தேன். ஆனால், ஒருநாள், டி20 போட்டிகளுக்குத் தனித்தனி கேப்டன் என்பதைத் தேர்வாளர்களும், பிசிசிஐ அமைப்பும் ஏற்காது என்பதால்தான் கோலி நீக்கப்பட்டார். இந்த முடிவை கோலியிடம் தெரிவித்துவிட்டுதான் எடுத்தோம்” எனத் தெரிவித்தார்.

ஆனால், ரோஹித் சர்மா, விராட் கோலி இருவருமே தற்போதைய இந்தியக் கிரிக்கெட்டில் ஜாம்பவான்கள், தவிர்க்கமுடியாத ஆளுமைகள், வெற்றி நாயகர்கள் என்பதை மறுக்க முடியாது. இருவருக்கும் இடையே உள்ளுக்குள் இருக்கும் நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற மனமோதல் காரணமா எனத் தெரியவில்லை. கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பின் கோலி (தோனி தவிர) யார் தலைமையின் கீழும் விளையாடியதில்லை.

இப்போது ரோஹித் சர்மா தலைமையின் கீழ் விளையாடும்போது, ஈகோ பிரச்சினை எழுவதால் விலகுகிறாரா என்பதே கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ள கேள்வியாகும். ஆனால், இந்திய கிரிக்கெட்டின் இரு ஜாம்பவான்கள் ஈகோ பிரச்சினையில் மோதுவது உறுதியானால், இருவரையுமே அமர்த்தி வைத்து, இளம் வீரரை கேப்டனாக நியமிப்பதுதான் பிரச்சினைக்குத் தீர்வாக இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x