Published : 12 Dec 2021 07:59 AM
Last Updated : 12 Dec 2021 07:59 AM

பாக் பயணம்: 2 தடுப்பூசி செலுத்தியும் மே.இ.தீவுகள் அணியில் 3 முக்கிய வீரர்களுக்கு கரோனா தொற்று

கோப்புப்படம்

லாகூர்


பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணியில் 3 வீரர்களுக்கும், ஒரு ஊழியருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

மே.இ.தீவுகள் அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரெல், ரஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ் ஆகியோரும், ஒரு ஊழியரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கராச்சியில் வீரர்களுக்கு நடத்தப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் இவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது.

பாகிஸ்தான் அணியுடன் 3 ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக மே.இ.தீவுகள் அணி கடந்த வியாழக்கிழமை கராச்சி நகரம் வந்தனர். முதல் டி20 போட்டி நாளை கராச்சியில் தொடங்குகிறது. வீரர்களுக்கு பயோ-பபுள் உருவாக்கும் வகையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் காட்ரெல், ரஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ் ஆகியோரும், ஒரு ஊழியர் என 4 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.

இது தொடர்பாக மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவி்ப்பில், “ பாகிஸ்தானுக்கு ேம.இ.தீவுகள் சென்றபின் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதில் வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரெல், ஆல்ரவுண்டர் ரஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ் மற்றும் பயிற்சிப்பிரிவில் இல்லாத ஊழியர் ஒருவர் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் அடுத்துவரும் பாகிஸ்தான் தொடரில் விளையாடமாட்டார்கள்.இந்த 4 பேருமே முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். இவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை இருப்பினும் தொற்று இருக்கிறது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 வீரர்கள் ஊழியர் ஒருவரும் தனித்தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த 3 வீரர்கள் பாதிக்கப்பட்டாலும் அணயின் திட்டத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

ரஸ்டன் சேஸ்

பாகிஸ்தானுக்கு வந்தபின் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மற்ற வீரர்களுக்கு நெகட்டிவ் உறுதியானது.கரீபியன் கிரிக்கெட் லீக் தொடங்கும் முன்பாகவே வீரர்கள் பெரும்பாலும் பயோ-பபுள் சூழலுக்குள்தான் இருக்கிறார்கள்.

இந்த கரோனா தொற்றால் எங்களின் பாகிஸ்தான் பயணம் பாதிக்கப்படாது. இருப்பினும் 3 வீரர்கள் விளையாடமுடியாதது பெரும் இழப்புதான், எங்கள் முன்னேற்பாடுகளை, போட்டிக்கு தீவிரமாகத் தயாராகுவதை பாதிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 வீரர்கள், ஊழியர் ஒருவரும் அடுத்த 10 நாட்கள் அறையில் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால், ஒருநாள், டி20 தொடரில் முழுமையாகப் பங்கேற்க முடியாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x