Published : 11 Dec 2021 06:33 PM
Last Updated : 11 Dec 2021 06:33 PM

விராட் கோலிக்கு பிசிசிஐ மரியாதை கொடுக்கவில்லை: பாகிஸ்தான் வீரர் ஆவேசம்

ரோஹித் சர்மா, விராட் கோலி | கோப்புப்படம்

லாகூர்

இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலியைப் பதவியிலிருந்து நீக்கி பிசிசிஐ நடந்து கொண்டவிதம் அவருக்கு மரியாதை அளிக்கும் விதத்தில் இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை படுதோல்விக்குப் பின் உடனடியாகவே கோலியின் கேப்டன்ஷி பதவிப் பறிப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தென் ஆப்பிரிக்கத் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டபோதுதான், கோலியின் கேப்டன் பதவி நீக்கம் அறிவிக்கப்பட்டது.

கோலியின் பதவி நீக்கம் குறித்து இதுவரை பிசிசிஐகூட முறைப்படி அறிவிக்கவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் அணிக்கு கேப்டனாக விராட் கோலி 95 ஒருநாள் போட்டிகளுக்குத் தலைமை ஏற்ற கோலி 27 தோல்விகளையும், 65 வெற்றிகளையும் ஈட்டியுள்ளார்.

இந்திய அணி கோலி தலைமையில் 19 பைலேட்டரல் சீரிஸில் 4 மட்டுமே இழந்திருக்கிறது. 15 தொடர்களை வென்றுள்ளது. உள்நாட்டில் 9 தொடர்களில் விளையாடி ஒரு தொடரை மட்டுமே இழந்தது இந்திய அணி.

விராட் கோலியின் பதவிப் பறிப்பு குறித்து ரசிகர்கள் மத்தியில் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா கோலிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டேனிஷ் கனேரியா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''விராட் கோலிக்கு எதிராக பிசிசிஐ எடுத்த நடவடிக்கை சரியானதா? என்னைப் பொறுத்துவரை கோலிக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை. சிறிது சிந்துத்துப் பாருங்கள். கோலி போன்ற பெரிய வீரருக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.

இந்திய அணிக்குத் தலைமை ஏற்று ஒருநாள் போட்டிகளில் 65 வெற்றிகளை அவர் பெற்றுக் கொடுத்திருக்கிறார், சிறந்த 4-வது இந்திய கேப்டன் என்ற பெருமைக்குரியவர். கேப்டனாக இருந்துகொண்டே அணிக்காக ஏராளமான ரன்களை கோலி அடித்துள்ளார். அவரின் சாதனைக்காகவே கோலி மதிக்கப்பட வேண்டும். இப்படி ஒரு சிறப்பான கேப்டனுக்கு பிசிசிஐ கொடுத்த மரியாதை மிகவும் மோசமானது.

அவரால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை என்றாலும் இந்திய அணியைச் சிறப்பாக வழி நடத்தியுள்ளார். பிசிசிஐ தலைவர் கங்குலி, கோலியிடம் முன்பே பேசி, ரோஹித் சர்மாவை கேப்டனாகக் கொண்டுவர விரும்புகிறோம் எனத் தெரிவித்து நிலைமையைப் புரியவைத்து இருக்க வேண்டும். அதை விடுத்து இவ்வாறு அதிரடியாகப் பதவியில் இருந்து நீக்குவது சரியல்ல''.

இவ்வாறு டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x