Published : 11 Dec 2021 05:35 PM
Last Updated : 11 Dec 2021 05:35 PM

கேப்டன்ஷி நீக்கத்தில் வெளிப்படைத் தன்மையில்லை: கோலியின் சிறுவயதுப் பயிற்சியாளர் ஆதங்கம்

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, விராட் கோலி | படம் உதவி: ட்விட்டர்.

மும்பை

இந்திய அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டதில் வெளிப்படைத் தன்மையில்லை என்று கோலியின் சிறுவயதுப் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை படுதோல்விக்குப் பின் உடனடியாகவே கோலியின் கேப்டன்ஷி பதவிப் பறிப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தென் ஆப்பிரிக்கத் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டபோதுதான், கோலியின் கேப்டன் பதவி நீக்கம் அறிவிக்கப்பட்டது.

கோலியின் பதவி நீக்கம் குறித்து இதுவரை பிசிசிஐகூட முறைப்படி அறிவிக்கவில்லை. கோலியின் கேப்டன்ஷி பறிப்பை, பிசிசிஐ ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.

கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் அணிக்கு கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டதிலிருந்தும் சரி, அதன்பின் டி20, ஒருநாள் அணிக்கு கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டதிலிருந்தும் தன்னுடைய பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார். ஒரு கேப்டனாக, பேட்ஸ்மேனாக கோலியின் பங்களிப்பு அளப்பரியது. அளவுக்கும் அதிகமானது.

ஒருநாள் போட்டிகளின் கேப்டனாக கோலியின் வெற்றி சராசரி 70.43 சதவீதம். 95 ஒருநாள் போட்டிகளுக்குத் தலைமை ஏற்ற கோலி 27 தோல்விகளையும், 65 வெற்றிகளையும் ஈட்டியுள்ளார்.

இந்திய அணி கோலி தலைமையில் 19 பைலேட்டரல் சீரிஸில் 4 மட்டுமே இழந்திருக்கிறது, 15 தொடர்களை வென்றுள்ளது. உள்நாட்டில் 9 தொடர்களில் விளையாடி ஒரு தொடரை மட்டுமே இழந்தது இந்திய அணி.

கோலியின் தலைமையில் இந்திய அணி இருதரப்பு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் தொடரை வென்றுள்ளது.

கேப்டனாக மட்டுமல்லாமல் பேட்ஸ்மேனாகவும் கோலியைக் குறைகூற முடியாது. 95 போட்டிகளில் கோலியின் சராசரி 72.65 வைத்துள்ளார். இதுவரை எந்த கேப்டனும் வைத்திராத சராசரியாகும். கேப்டனாக இருந்தபோதுதான் கோலி 21 சதங்களை விளாசி, ஏறக்குறைய 5 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதில் ரிக்கி பாண்டிங் மட்டும்தான் கேப்டனாக 22 சதங்கள் அடித்துள்ளார். அவருக்கு அடுத்தாற்போல் கோலி மட்டுமே உள்ளார்.

ஆனால், கோலியின் கேப்டன் பறிப்பு மிகவும் சாதாரணமாக நடந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த பிசிசிஐ தலைவர் கங்குலியும், ''கோலியிடம் பேசினோம். டி20 கேப்டன் பதவியிலிருந்து இறங்காதீர்கள் என்று கூறினோம். அவர் மறுத்துவிட்டார். ஒருநாள், டி20 போட்டிகளுக்குத் தனித்தனி கேப்டன்கள் இருக்க முடியாது என்பதால் அவர் நீக்கப்பட்டார்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் கோலியின் சிறுவயதுப் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “கோலி ஏன் ஒருநாள் அணி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பதற்கு சரியான விளக்கத்தை அளிக்கவில்லை. அதன் பின்னணி குறித்தும் ஏதும் தெரிவிக்கவில்லை. பிசிசிஐ, தேர்வுக் குழுவினரின் தேவை என்ன என்பது எங்களுக்குத் தெரியாது. எந்த விளக்கமும் இல்லை, வெளிப்படைத் தன்மையும் இல்லை.

ஒருநாள் போட்டிகளில் அணியைச் சிறப்பாக வழிநடத்திச் சென்றவர் கோலி என்பதை மறுக்க முடியாது. அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது அற்பமானது. எவ்வாறு திறமையான கேப்டனைப் பதவியிலிருந்து திடீரென நீக்க முடியும்?

கங்குலியின் விளக்கத்தை ஊடகங்களில் படித்து அதிர்ச்சியடைந்தேன். டி20 கேப்டன் பதவியிலிருந்து இறங்காதீர்கள் என கோலியிடம் கேட்டுக்கொண்டோம் என கங்குலி தெரிவித்தார். நான் எதையும் மறுபடியும் கூற விரும்பவில்லை. கங்குலியின் பேச்சு வியப்பாக இருக்கிறது. இருவிதமான கருத்துகள் வருகின்றன.

இதுவரை நான் கோலியிடம் பேச முயன்று வருகிறேன். ஆனால், அவரிடம் பேசமுடியவில்லை. கோலி டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகிய உடன், ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து விலகிவிடுங்கள் என்று கோலியிடம் தேர்வாளர்கள் கேட்டிருப்பார்கள் என நினைக்கிறேன் அல்லது டி20, ஒருநாள் இரண்டிலும் கேப்டனாகத் தொடருங்கள் எனக் கேட்டிருப்பார்கள் என நினைக்கிறேன்''.

இவ்வாறு ராஜ்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x