Published : 01 Dec 2021 12:58 PM
Last Updated : 01 Dec 2021 12:58 PM

 ரஹானேவை நீக்குவதால் அணி்க்கு எந்த பாதிப்பும் இல்லை: தினேஷ் கார்த்திக் வெளிப்படை

இந்திய வீரர் அஜின்ஹயே ரஹானே | கோப்புப்படம்

மும்பை


மும்பையில் நடக்கும் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ரஹானேவை நீக்குவதால் அல்லது அமரவைப்பதால் அணிக்கு எந்தக் கேடும் வரப்போவதில்லை என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு ஆஸ்திேரலியத் தொடரிலிருந்து ரஹானேவின் கழுதை தேய்ந்து கட்டெறும்பு கதையாகவே இருந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் அடிலெய்டில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அந்தப் போட்டியில் ரஹானே 42, 0 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

மெல்பர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்டில் ரஹானே சதம்(112, 27), சிட்னியில் நடந்த போட்டியில் (22, 4), காபா நடந்த டெஸ்டில் ரஹானே 37, 24 என சொல்லிக்கொள்ளும் வகையில் ரன்கள் அடிக்கவில்லை. ஒரே ஒரு சதத்தை மட்டும் அடித்து அணியில்ஒட்டிக்கொண்டார்.

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடந்தடெஸ்ட் தொடரிலும் ரஹானே சொதப்பலாக பேட்டிங் செய்தார். சென்னையில் நடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் ரஹானே முதல் டெஸ்டில்(1,0), 2-வது டெஸ்டில்(67, 10) என அடித்தார்.

அகமதாபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் (7 ரன்கள்) 4-வது டெஸ்டில் 27 ரன்கள் மட்டுமே ரஹானே சேர்த்தார்

இங்கிலாந்து பயணத்தில் டெஸ்ட் போட்டிகளிலும் ரஹானே லாட்ஸில் நடந்த ஒரு போட்டியில் மட்டுமே அரைசதம் அடித்தார். மற்ற டெஸ்ட் போட்டிகளில் 20 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை. நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் (35,4) என ரஹானே கோட்டைவிட்டார். ரஹானே கடந்த 25 இன்னிங்ஸ்களில் 2 அரைசதம், ஒருசதம் மட்டுமே அடுத்துள்ளார். மற்ற இன்னிங்ஸ்களில் எல்லாம் சராசரியாக 20 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை.

ஆனால், ஸ்ரேயாஸ் அய்யர் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே சதம், அரைசதம் அடித்து நியூஸிலாந்துக்கு எதிராக பட்டையை கிளப்பிவிட்டார். ஷுப்மான் கில், ஹனுமா விஹாரி, சூர்யகுமார் யாதவ் என இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.

இந்த சூழலில் விராட் கோலி அணிக்குள் வரும்போது, ஏதாவது ஒரு வீரரையும் வெளியேற்ற வேண்டியதிருக்கும். அவ்வாறு வெளியேற்றப்படும் வீரராக ஸ்ரேயாஸ் அய்யருக்குப் பதிலாக ரஹானேவாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்தாகும்.

இது தொடர்பாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஸ்ரேயாஸ் அய்யர் முதல் போட்டியிலேயே சிறப்பாக பேட் செய்திருக்கிறார். ஸ்ரேயாஸ் அய்யரின் பேட்டிங்கால் அழுத்தம் இப்போது உண்மையில் ரஹானே மீதுதான் திரும்பியிருக்கிறது, மும்பையில் நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் ரஹானே நீக்கப்படவும் வாய்ப்புள்ளது.

தென் ஆப்பிரிக்கப் பயணத்தின்போது, இதேபோன்று ரஹானே ஒரு போட்டியில் அமரவைக்கப்பட்டு மீண்டும் அழைக்கப்பட்டார். ரஹானே ஒருபோட்டியில் அமரவைக்கப்படுவதால், இந்திய அணிக்கு எந்தக் கெடுதலும் வராது.

ஸ்ரேயாஸ் அய்யர் இந்தியாவை முதல் டெஸ்ட் போட்டியில் பல சந்தர்பங்களில் காப்பாற்றிவிட்டார், பேட்டிங்கும் சிறப்பாகத்தான் இருந்தது. கடந்த டெஸ்ட் போட்டிகளில்ரஹானே அடித்த ரன்கள் போல் ஸ்ரேயாஸ் பேட்டிங் இல்லை. ஆதலால், ரஹானேவை ஒரு போட்டியில் நீக்குவதால் எந்த மோசமும் ஏற்படாது, அவ்வாறு அமரவைப்பது ரஹானே மீதான அழுத்தத்தை குறைக்கும்.

இதேபோன்ற அழுத்தம் புஜாரா மீது இருப்பதாக நான் நினைக்கவில்லை. இருப்பினும் புஜாரா சதம் அடித்துநீண்ட இன்னிங்ஸ் ஆகிறது. கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் சதம் அடித்தார், தற்போது சராசரியும் 20 ரன்களாகத்தான் இருக்கும். இரு வீரர்கள் தங்களின் தரத்தை உயர்வாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல் சிறப்பாக விளையாடவி்ல்லை என்பது அவர்களுக்கே தெரியும்
இவ்வாறு தினேஷ் கார்த்திக் தெரிவி்த்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x