Published : 01 Dec 2021 08:32 AM
Last Updated : 01 Dec 2021 08:32 AM

கேப்டனாகத் தொடர்வாரா? தோனியைவிட அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்ட சிஎஸ்கே வீரர்

2021 ஐபிஎல் சீசன் கோப்பையுடன் தோனி | கோப்புப்படம்

மும்பை


2022 ஐபிஎல் சீசனில் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலில் சிஎஸ்கே அணியில் எம்எஸ் தோனியை விடஅந்தஅணியைச் சேர்ந்த வீரர் ஒருவர் அதிகவிலைக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

அதிகவிலைக்குத் தக்கவைக்கப்பட்டதால் ஒருவேளை 15-வது ஐபிஎல் சீசனுக்கு கேப்டனாகவோ அல்லது துணைக் கேப்டனாகவோ நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க நேற்று கடைசி நாள் என்பதால் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டன.
புதிதாக வரும் அகமதாபாத், லக்னோ அணிகள் 2இந்திய வீரர்கள், ஒரு உள்நாட்டு வீரருக்கு அதிகமாக தக்கவைக்க முடியாது. இந்த இரு அணிகளும் இந்த மாதம் 30ம் தேதிக்குள் தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை பிசிசிஐயிடம் வழங்க வேண்டும். ஏற்கெனவே இருக்கும் 8 அணிகள் கழற்றிவிட்ட வீரர்களைக்கூட தேர்வு செய்து தக்கவைக்க முடியும்.

ஏற்கெனவே இருக்கும் 8 அணிகளும் அதிகபட்சமாக 3 உள்நாட்டு வீரர்கள், அதிகபட்சமாக 2 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும். இந்த 4 வீரர்களுக்காக ரூ.42 கோடி செலவிடலாம். முதலில் தக்கவைக்கும் வீரருக்கு ரூ.16 கோடி, 2-வது வீரருக்கு ரூ.12 கோடி, 3-வது வீரருக்கு ரூ.8 கோடி, 4-வது வீரருக்கு ரூ.6 கோடி என ரூ.42 கோடி செலவிடலாம். 4 வீரர்களுக்கு குறைவாகவும் தக்கவைக்கலாம்.

அந்த வகையில் சிஎஸ்கே அணியில் 4 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் மொயின் அலி, தோனி, ரவிந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர்.

இதில் முதலில் தக்கவைக்கும் வீரர் என்ற அடிப்படையில் தோனியைக் தக்கவைக்காமல் ரூ.16 கோடிக்கு ரவிந்திர ஜடேஜா தக்கவைக்கப்பட்டுள்ளார். 2-வது தக்கவைப்பு வீரராக ரூ.12 கோடிக்கு எம்எஸ் தோனியும், மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் தலா ரூ.8 கோடியிலும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

சிஎஸ்கே வட்டாரங்கள் கூறுகையில் “ சிஎஸ்கே அணி சார்பில் தோனியைத்தான் முதலில் தக்கவைப்பு வீரராக வைக்க விரும்பம் தெரிவித்துள்ளன. ஆனால், தோனி அதை விரும்பவில்லையாம். அதனால்தான் ரவிந்திர ஜடேஜா முதலில் தக்கவைப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளன.

15-வது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா ஏலத்தில் எடுக்கப்படுவாரா என்பது தெரியாது. ஆனால், தக்கவைப்பு பட்டியலி்ல் ஜடேஜா இருப்பதால் அவரிடம் துணைக் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்படலாம். அல்லது தோனி வெளியிலிருந்து கொண்டு களத்தில் கேப்டனாக ரவிந்திர ஜடேஜா செயல்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனென்றால், கடந்த சீசனில் தோனி பெரிதாக பேட்டிங்கில் ஃபார்மில் இல்லை. தோனியின் வழிகாட்டல் மட்டுமே அணிக்கு பெரிதாகத் தேவைப்படுகிறது, பேட்டிங் என்ற வகையில் அவரின் உதவி பல ஆட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாகஇல்லை என்பதால், முக்கியமான ஆட்டங்களுக்கு மட்டும் தோனி களமிறங்கி மற்ற ஆட்டங்களுக்கு ஜடேஜாவுக்க வழிவிடலாம் எனத் தெரிகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x