Published : 30 Nov 2021 05:11 PM
Last Updated : 30 Nov 2021 05:11 PM

கிரிக்கெட்டில் எழுதப்படாத விதி; கோலிக்கு பலிகடா ஸ்ரேயாஸ்: விவிஎஸ் லட்சுமண் வேதனை

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் | கோப்புப் படம்.

மும்பை

நியூஸிலாந்துக்கு எதிராக மும்பையில் நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு பதிலாக அணியிலிருந்து நீக்கப்படும் வாய்ப்பு ஸ்ரேயாஸ் அய்யருக்கு அதிகமிருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் தெரிவித்துள்ளார்.

கான்பூர் டெஸ்ட் போட்டிக்கு, இந்திய அணிக்கு கேப்டன் பதவி ஏற்ற ரஹானே இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 39 ரன்கள்தான் எடுத்தார். மயங்க் அகர்வால் 30 ரன்கள் எடுத்தார். அனுபவ வீரர் புஜாரா 26, 22 என இரு இன்னிங்ஸிலும் சொதப்பலாக பேட் செய்தார். அதிலும் ரஹானே ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து டெஸ்ட் போட்டியில் அதிர்ஷ்டத்தில் ஒட்டிக்கொண்டு வருகிறார்.

மும்பை போட்டிக்கு விராட் கோலி அணிக்குள் வரும் நிலையில் அவருக்கு பதிலாக இந்த 3 பேரில் யாரை வேண்டுமானாலும் அமரவைக்கலாம். ஆனால், முதல் இன்னிங்ஸில் சதம், 2-வது இன்னிங்ஸில் அரை சதம் அடித்த ஸ்ரேயாஸ் அய்யர்தான் பலிகடா ஆக்கப்படுவார் என லட்சுமண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விவிஎஸ் லட்சமண் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“மும்பையில் யாராவது ஒருவர் நல்ல ஃபார்மில் இருப்பவர் ஆட வேண்டும். இது எழுதப்படாத விதி. ஓய்வு அல்லது காயம் காரணமாக சீனியர் வீரர் ஆடாத இடத்தில் புது வீரர் ஆடினால் காயத்திலிருந்து மீண்டு சீனியர் வீரர் மீண்டும் வரும்போது புதிய வீரர் அல்லது ஜூனியர் வீரர் வழிவிட வேண்டும். ரஹானேவுக்கு இன்னுமொரு வாய்ப்பு மும்பையில் வழங்கப்படும். ராகுல் திராவிட்டும், கோலியும் ரஹானேவை நீக்குவார்கள் என்று நான் நம்பவில்லை.

இதனால் அருமையான அறிமுக டெஸ்ட் கண்ட ஸ்ரேயாஸ் அய்யர் தலையில்தான் கத்தி விழும். இது துரதிர்ஷ்டம்தான். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் இதுதான் எழுதப்படாத விதி”.

இவ்வாறு லட்சுமண் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக ரஹானே வருகிறார் என்பதற்காக நல்ல ஃபார்மில் இருந்த கருண் நாயர் அமரவைக்கப்பட்டார். 2016, டிசம்பரில் சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் முச்சதம் விளாசி ஃபார்மில் இருந்தும் சீனியர் வீரருக்காக பலி கொடுக்கப்பட்டார். அதோடு கருண் நாயர் டெஸ்ட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x