Published : 26 Nov 2021 05:32 PM
Last Updated : 26 Nov 2021 05:32 PM

பரவும் புதிய கரோனா வைரஸ்: இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கத் தொடர் ரத்தாகுமா?

தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி அங்கு அடுத்த மாதம் பயணம் செய்வது பெரிய கேள்விக்குறியாக உருவெடுத்துள்ளது.

மத்திய அரசின் அனுமதி பெற்ற பின்புதான் எந்த முடிவும் எடுக்கப்படும் என பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய ஏ அணியினர் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் செய்து விளையாடி வருகிறார்கள்.

வரும் நாட்களில் புதிய கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்தால், இந்திய அணி வீரர்கள் அங்கு செல்வார்களா என்பது மத்திய அரசின் முடிவைப் பொறுத்தே அமையும்.

தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய வகை கரோனா வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இந்த வைரஸ் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். முதன்முதலில் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் கண்டறியப்பட்டது.

இந்தப் புதிய வைரஸ் ஏற்கெனவே அண்டை நாடுகளுக்குப் பரவிவிட்ட நிலையில் மேலும் பல நாடுகளுக்கும் பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக போட்ஸ்வானா நாட்டில் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்குக்கூட இந்தப் புதிய வைரஸ் தாக்கியுள்ளது.

இந்தப் புதிய வகை வைரஸ் குறித்து முழுமையாகத் தெரியாத நிலையில், அறிவியல் வல்லுநர்கள் பெரிதும் அச்சப்படுகிறார்கள். இந்த வகை வைரஸ், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டவை, வேகமாகப் பரவும், கரோனாவின் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் முடிந்தபின், டிசம்பர் 8-ம் தேதியே இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குப் புறப்படத் திட்டமிட்டுள்ளது. டிசம்பர் 17-ம் தேதி முதல் தொடர் தொடங்குவதால் 10 நாட்கள் பயிற்சி எடுக்க வேண்டும் என்பதால், முன்கூட்டியே செல்கிறார்கள்.

ஆனால், தற்போது இந்திய ஏ அணியில் விளையாடிவரும் சில வீரர்களை அங்கேயே தங்கவைத்து, இந்திய அணியில் முக்கியமான வீரர்களை மட்டும் அனுப்பவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தென் ஆப்பிரிக்கப் பயணத்தில் இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 4 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் டிசம்பர் 17-ம் தேதியும், அதன்பின் டிசம்பர் 26-ம் தேதி பாக்ஸிங்டே டெஸ்ட்டாக சென்சூரியனிலும், 2022, ஜனவரி 3்-ம் தேதி கேப்டவுனில் 3-வது டெஸ்ட் போட்டியும் நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x