Published : 24 Nov 2021 09:58 AM
Last Updated : 24 Nov 2021 09:58 AM

ரஹானே கேப்டனாக இருப்பதால்தான் அணியிலேயே நீடிக்கிறார்: கவுதம் கம்பீர் விளாசல்

அஜின்கயே ரஹானே | கோப்புப்படம்

மும்பை


அஜின்கயே ரஹானே கேப்டனாக இருப்பதால்தான் அணியிலேயே நீடிக்கிறார். இந்த வாய்ப்பையாவது அவர் பயன்படுத்திக்கொண்டு ரன் சேர்க்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2- போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை கான்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் டிசம்பர் 3-ம் தேதி தொடங்குகிறது.

இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியல் கேப்டன் விராட் கோலி தலைமைக்குப் பதிலாக துணைக் கேப்டன் ரஹானே தலைமையில் களமிறங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குப்பின் இந்திய அணி நியூஸிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பங்கேற்றார். அவர் பேசியதாவது:

இந்திய அணியின் கேப்டன் ரஹானேயின் பேட்டிங் ஃபார்ம் மிக மோசமாக இருந்து வருகிறது. ஏதோ அதிர்ஷ்டத்தால் மட்டுமே அவர் அணியில் நீடிக்க முடிகிறது. ஒருவேளை ரஹானே அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டதால்தான் அணியில் நீடிக்கிறார் என நினைக்கிறேன்.

இங்கிலாந்து தொடரிலேயே ரஹானே நீக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் லார்ட்ஸ்மைதானத்தில் அரைசதம் அடித்ததால் தப்பித்தார். இந்த டெஸ்ட் தொடரை சரியான வாய்ப்பாகப் பயன்படுத்தி ரஹானே ரன் சேர்க்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை அணியில் தொடக்க ஆட்டக்காரராக மயங்க் அகர்வால் ராகுலுடன் சேர்ந்து களமிறங்க வேண்டும். 4-வது வீரராக ஷுப்மான் கில் களமிறங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான் பேசுகையில் “ ரஹானேயின் பேட்டிங் ஃபார்மை தேர்வுக்குழுவினர்இந்தத் தொடரில் தீவிரமாகக் கண்காணிப்பாளர்கள், இந்தத் தொடரில் சிறப்பாக ஆடினால்தான் தென் ஆப்பிரிக்கத் தொடருக்கு தேர்வு செய்யப்படுவார்.

கடந்த ஓர் ஆண்டாக ரஹானேயின் ஃபார்ம் மோசமாகத்தான் இருந்து வருகிறது. நடுப்பகுதி ஓவர்களில் நியூஸிலாந்து டெஸ்டில் யார் சிறப்பாக விளையாடுகிறார்கள் என கவனிக்கப்படுவார்கள். அந்த வீரரைத்தான் தென் ஆப்பிரிக்கத் தொடருக்கும் தேர்வு செய்யப்படுவார். ஷுப்மான் கில் 4-வது வீரராகக் களமிறங்கலாம் “ எனத் தெரிவித்தார்

இங்கிலாந்து தொடருக்குச் சென்ற ரஹானே 7 இன்னிங்ஸில் 109 ரன்கள் மட்டுமே சேர்த்து 15.57 சராசரிவைத்துள்ளார். அதிகபட்சமாக 61 ரன்களை ரஹானே சேர்த்தார். ஆனால், ரஹானேவைவிட ரவிந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பும்ராவின் சராசரி இந்தத் தொடரில் அதிகமாக இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x