Published : 24 Jun 2014 08:44 AM
Last Updated : 24 Jun 2014 08:44 AM

கேமரூனை ஊதித் தள்ளினார் நெய்மார்; பிரேசிலுக்கு 4-1 வெற்றி

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் பிரேசில் அணி கேமரூன் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் நொறுக்கியது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது பிரேசில்.

பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மார் 2 அபாரமான கோல்களை அடித்ததோடு இந்த உலகக் கோப்பை போட்டியின் 100வது கோலை அடித்த பெருமையையும் பெற்றார்.

ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் கேமரூன் கோல் அருகில் இடது பக்கத்திலிருந்து பிரேசில் வீரர் ஒரு ஷாட்டை பெனால்டி பகுதிக்குள் அடிக்க நெய்மார் அதனை தன் வலது காலால் கோலுக்குள் அடித்தார். பிரேசில் முன்னிலை பெற்றது.

இது ஒரு சுலபமான கோல்தான், நெய்மார் கோல் பகுதியில் மார்க்கர் ஒருவரும் இல்லாமல் தனித்து விடப்பட்டார். அல்லது அவர் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார் என்றே கூற வேண்டும்.

ஆனால் சற்றும் எதிர்பாராவிதமாக கேமரூன் ஒரு அபாரமான மூவில் பிரேசிலை இடது புறமாகத் தாக்குதல் தொடுக்க ஜோயெல் மாடீப் ஒரு கோலை அடித்து சமன் செய்து அதிர்ச்சி அளித்தார். ஆனால் மீண்டும் நெய்மார் இடைவேளைக்கு முன்பு ஒரு அபார கோலை அடிக்க பிரேசில் 2-1 என்று முன்னிலை பெற்றது.

ஃபிரெட்டின் ஃபார்ம் குறித்து இருந்த கவலைகளை அவர் பிரேசிலின் 3வது கோலை அடித்ததன் மூலம் தீர்த்து வைத்தார். கடைசியாக பதிலி வீரர் ஃபெர்னாண்டோ 4வது கோலை அடித்தார்.

ஆட்டத்தின் துவக்கக் கணங்களில் கேமரூன் தன்னம்பிக்கையுடன் ஆடியது. வின்செண்ட் அபுபாக்கர் பிரேசில் அணிக்கு தொல்லை கொடுத்தார். இவரது கோல் முயற்சியை மார்செலோ முறியடித்தார். ஆயினும் பிரேசிலை இந்த கோல் முயற்சி சிந்திக்க வைத்தது.

பிறகே பிரேசிலின் ஆட்டத்தில் ஆக்ரோஷம் கூடியது 17வது நிமிடத்தில் லூயி குஸ்தாவோ ஒரு பந்தை அபாரமாக கேமரூன் வீரர் பெஞ்சமின் மூகாண்ட்ஜோவிடமிருந்து பிடுங்கி இடப்புறம் சில கேமரூன் வீரர்களைச் சமாளித்து சரியான இடைவெளி கிடைத்தபோது நெய்மாரிடம் அடிக்க அதனை அவர் வலது காலால் கோலுக்குள் தள்ளினார்.

இந்த உலகக் கோப்பையில் பிரேசில் முதலில் கோல் அடிப்பது இதுவே முதல் முறை. பிறகு நெய்மார், ஃபிரெட் இருவரும் ஒரு பந்தை எடுத்துச் செல்ல கடைசியில் பாலின்ஹோவிடம் பாஸ் செய்ய அவர் மீண்டும் ஃபிரெட்டிடம் பந்தை அடிக்க அவரது கோல் முயற்சி கைகூடவில்லை.

மாறாக 26வது நிமிடத்தில் எழுச்சியுற்றிருந்த பிரேசில் ரசிகர்களை கேமரூன் கோல் மௌனமாக்கியது. இடது புறத்தில் டேனி ஆல்வேசின் இடையூறைப் புறந்தள்ளி ஆலன் நியோம் என்ற கேமரூன் வீரர் இடப்புறம் கோலுக்கு அருகிலிருந்து ஒரு பாஸ் செய்ய அது பிரேசில் தடுப்பு வீரர்கள் தியாகோ சில்வா, டேவிட் லூயிஸ் ஆகியோரை ஏமாற்றியது, அப்போது கேமரூன் விரர் மாடீப் சுலபமாக கோலாக மாற்றினார். கோல் கீப்பர் சீசர் மற்றொரு முனையில் கோலை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

பிரேசில் அணியின் மிகப்பெரிய பலம் என்னவெனில் எதிரணியினர் கோல் அடிக்க அடிக்க மேலும் பலம் பெறும் தன்மை. அதுதான் நடந்தது 34வது நிமிடத்தில் நியோமின் தலையால் ஆடப்பட்ட ஷாட்டிலிருந்து பந்தை பிடித்துக் கொண்ட மார்செலோ அபாரமாக பந்தைக் கடத்தி கேமரூன் கோல் பகுதிக்குள் கொண்டு வந்து ஷாட் ஆட நெய்மார் அதனை அபாரமாக, ஆனால் சுலபமாக கோலாக மாற்றினார். பிரேசில் 2-1 என்று முன்னிலை பெற்றது.

இடைவேளைக்குப் பிறகு பாலின்ஹோவை திரும்ப அழைத்து ஃபெர்னாண்டோவை களத்திற்கு அனுப்பினார் பிரேசில் மேலாளர் ஸ்கொலாரி.

மான்செஸ்டர் யுனைடெட் அணியில் கலக்கியுள்ள ஃபெர்னாண்டோ இறங்கியவுடனேயே தாக்கம் தெரிந்தது. இவர் அபாரமான பாஸ் ஒன்றை டேவிட் லூயிஸிற்கு அளிக்க அவர் இடப்புறத்த்திலிருந்து துல்லியமாக ஒரு பாஸை செய்தார். அதனை ஃபிரெட் தலையால் கோலுக்குள் செலுத்தினார். இவர் அடிக்கும் முதல் கோல் இது.

முதல் போட்டியில் இவர் குரேஷியாவுக்கு எதிராக உத்தரவாதமாக கோல் அடிக்கச் சென்றபோதுதான் குரேஷிய வீரர் ஃபவுல் செய்து பெனால்டி கிக்கில் நெய்மார் கோல் அடித்தார். இந்த ஃபவுல் தீர்ப்பு ஜப்பான் நடுவர் நிஷிமோராவை பெரும் சர்ச்சையில் சிக்க வைத்ததும் நினைவிருக்கலாம்.

அதன் பிறகு இந்தப் போட்டியில்தான் ஃபிரெட் தனது முதல் கோலை அடித்து எண்ணிக்கையைத் துவங்கி உள்ளார். ஃபிரெட்டின் இந்த கோல் குறித்தும் சர்ச்சைகள் இல்லாமலில்லை. ஃபெர்னாண்டோ பந்தை ஃபிரெட் வாங்கும்போது அவர் ஆஃப் சைட் நிலையில் இருந்ததாகத் தெரிகிறது. ஸ்வீடன் நடுவர் கண்டு கொள்ளவில்லை. கேமரூன் அணி வெறுப்படைந்ததே மிச்சம்.

ஆட்டம் முடியும் தறுவாயில் நெய்மார் உள்ளே சென்றார். அப்போது 84வது நிமிடத்தில் கேமரூன் பந்தின் கட்டுப்பாட்டை இழக்க ஃபிரெட், ஆஸ்கார் இருவரும் பந்தை கொண்டு சென்று பந்தை ஃபெர்னாண்டோவிடம் அடிக்க அவர் பிரேசிலின் 4வது கோலாக அதனை மாற்றினார்.

இந்தப் பிரிவில் கோல் வித்தியாச அடிப்படையில்முதலிடம் பிடித்த பிரேசில் இறுதி 16 நாக் அவுட் சுற்றில் முதலில் பலமான சிலி அணியைச் சந்திக்கிறது. இந்தப் போட்டி வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x