Published : 21 Nov 2021 02:50 PM
Last Updated : 21 Nov 2021 02:50 PM

தேவையற்ற கோபம்: சிக்ஸர் அடித்த ஆத்திரத்தால் வங்கதேச பேட்ஸ்மேன் மீது பந்தை எறிந்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர் அப்ரிடி

கிரிஸுக்குள் இருந்த ஹுசேன் மீது பந்தை எறிந்த அப்ரிடி | படம் உதவி: ட்விட்டர்.

தாக்கா

தனது ஓவரில் வங்கதேச பேட்ஸ்மேன் சிக்ஸர் அடித்துவிட்ட ஆத்திரத்தில் கோபமடைந்த பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி, பந்தை பேட்ஸ்மேன் மீது எறிந்தது சர்ச்சையானது.

இதையடுத்துக் களத்திலேயே வங்கதேச வீரர் ஆபிப் ஹுசேனிடம் அப்ரிடி மன்னிப்பு கோரினார்.

தாக்கா நகரில் நேற்று வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி, 7 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் சேர்த்தது.

109 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்தப் போட்டியில் வங்கதேச அணி பேட்டிங் செய்தபோது, அந்த அணி வீரர் ஆபிப் ஹுசேன் சிக்ஸர் அடித்தமைக்காக பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் அப்ரிடி பந்தை எறிந்தது சர்ச்சையாகியுள்ளது. 3-வது ஓவரை அப்ரிடி வீசினார், களத்தில் இருந்த ஹுசேன் 2-வது பந்தில் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்ரிடி 3-வந்து பந்தை ஷார் பந்தாக வீசினார். ஆனால், பந்தை பேக்ஃபுட்டில் டிபெண்ட் செய்தார் ஹுசேன். பந்தை ஃபீல்டிங் செய்த அப்ரிடி, க்ரீஸுக்குள் இருந்த ஹுசேன் மீது பந்தை வீசி எறிந்தார். ஆனால், கிரீஸை விட்டு வெளியே வந்தால்கூட ஸ்டெம்ப்பை நோக்கி எறியும் வகையில் பந்துவீச்சாளர் அச்சுறுத்தலாம்.

ஆனால், ஹுசேன் க்ரீஸுக்குள் நின்றிருந்தார். பந்தை ஃபீல்டிங் செய்த அப்ரிடி திடீரென பந்தை எடுத்து ஹுசேன் மீது எறிந்தார். இதைச் சற்றும் எதிர்பாராத ஹுசேன் திரும்பிக் கொண்டார். பந்து ஹுசேனின் கால் பகுதியில் பட்டு வலியால் துடித்து க்ரீஸில் சுருண்டு விழுந்துவிட்டார்.

ஹுசேன் வலியால் துடிப்பதைப் பார்த்த பின்புதான் அப்ரிடி தனது தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கோரினார். அதன்பின் அணியின் மருத்துவர் குழு வந்து ஹுசேனுக்கு முதலுதவி அளித்து பேட்டிங் செய்ய வைத்தனர்.

ஒரு பேட்ஸ்மேன் தனது ஓவரில் சிக்ஸர் அடித்துவிட்டார் என்பதற்காகத் தேவையில்லாமல் கோபப்பட்டு, ஆத்திரப்பட்டு அப்ரிடி நடந்துகொண்ட விதத்தை வர்ணனையாளர்களும் கண்டித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x