Last Updated : 15 Nov, 2021 11:34 AM

 

Published : 15 Nov 2021 11:34 AM
Last Updated : 15 Nov 2021 11:34 AM

டேவிட் வார்னரை உசுப்பேற்றிவிட்டீர்கள்; சும்மா இருப்பாரா?- ஆரோன் பின்ச் கலகலப்பு

ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்த டேவிட் வார்னர் | படம் உதவி: ட்விட்டர்.

துபாய் 

பேட்டிங் ஃபார்ம் போய்விட்டது, திறமையில்லாதவர் என டேவிட் வார்னரை உசுப்பேற்றிவிட்டார்கள். அவர் எப்படி சும்மா இருப்பார் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் கலகலப்புடன் தெரிவித்துள்ளார்.

துபாயில் நேற்று நடந்த டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.

50 பந்துகளில் 77 ரன்கள் (4 சிக்ஸர், 6 பவுண்டரி) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மிட்ஷெல் மார்ஷுக்கு ஆட்டநாயகன் விருதும், டேவிட் வார்னருக்கு (53, 38 பந்துகள் 3 சிக்ஸர், 4 பவுண்டரி) தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

டேவிட் வார்னர் இந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக 289 ரன்கள் சேர்த்து தொடர் நாயகன் விருது வென்றார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் சேர்த்த மேத்யூ ஹேடன் (2007), பீட்டர்ஸன் (2010) ஆகியோரின் சாதனையை வார்னர் முறியடித்துவிட்டார். இதுவரை உலகக் கோப்பையில் கோப்பையை வென்ற அணியிலிருந்து ஒருவர் முதல் முறையாகத் தொடர் நாயகன் விருது வென்றுள்ளார் என்றால் அது வார்னர் மட்டும்தான்.

ஆனால், ஐபிஎல் டி20 தொடரின் 2-வது சுற்றில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னரின் திறமைையைக் குறைத்து மதிப்பிட்டு அவருக்கு அழுத்தம் கொடுத்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. சில போட்டிகளில் சொதப்பினார் என்பதற்காக, டேவிட் வார்னருக்கு பேட்டிங் வரவில்லை, ஃபார்மில் இல்லை எனக் கூறி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை ஐபிஎல் தொடரில் அணியிலிருந்து நீக்கி அமரவைத்தது.

ஏறக்குறைய அணியிலிருந்தே நீக்கி, பெஞ்ச்சில் அமரவைத்தது. ஆனால், தன்னுடைய பேட்டிங் ஃபார்ம் எப்போதும் குறையவில்லை, அது சிறிய சறுக்கல் என்பதை உலகக் கோப்பை தொடரில் வார்னர் நிரூபித்துள்ளார்.

டேவிட் வார்னர் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''டி20 உலகக் கோப்பை தொடங்க 2 வாரங்களுக்கு முன் வார்னருக்கு பேட்டிங் திறமையைக் குறைத்து மதிப்பிட்டு செய்த செயல்களை என்னால் நம்பமுடியவில்லை.

அவ்வாறு செய்வது ஒருவரைக் கடும் கோபத்துக்கு உள்ளாக்குவது போலாகும். வார்னரை உசுப்பேற்றிவட்டார்கள். அவர் சும்மா இருப்பாரா? மிகப்பெரிய ஸ்கோரை உலகக் கோப்பையில் அடித்து, அணிக்குப் பெருமை தேடித்தந்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களால் நான் பெருமைப்படுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை தொடர் நாயகன் என்பவர் லெக் ஸ்பின்னர் ஆடம் ஸம்பாதான். ஆட்டத்தின் போக்கை எதிரணியிடம் இருந்து பிடுங்கி தன்வசம் வைத்துக்கொள்பவர் ஸம்பா. சில நேரங்களில் பெரிய பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்யும் சூப்பர் வீரர்.

மிட்ஷெல் மார்ஷ் ஆட்டத்தைத் தொடங்கிய வேகமே, எதிரணிக்குப் பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது. மேத்யூ வேட் காயம் காரணமாக அமர, மார்ஷ் 3-வது வீரராகக் களமிறங்கி, தனது பணியை முடித்தார். அரையிறுதியிலும் ஸ்டாய்னிஷுடன் சேர்ந்து களமிறங்கிய மார்ஷ் சிறப்பாகச் செயல்பட்டார்.

வங்கதேசத்தில் நாங்கள் படுமோசமாக விளையாடியபின் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளது பெருமையாக இருக்கிறது. 2015-ம் ஆண்டில் இங்கிலாந்திடம் நாங்கள் தோல்வி அடைந்தது வேதனையாக இருந்தது. இப்போது நாங்கள் வெல்வதற்குச் சிறந்த வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் துணையாக இருந்தனர். இந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கடந்த 6 வாரங்களாக மிகுந்த மகிழ்ச்சியுடன் நாங்கள் இருந்தோம். இந்தக் குழுவினருடனே செத்துவிடத் தோன்றுகிறது''.

இவ்வாறு ஆரோன் பின்ச் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x