Last Updated : 11 Nov, 2021 02:34 PM

 

Published : 11 Nov 2021 02:34 PM
Last Updated : 11 Nov 2021 02:34 PM

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான், ஷோயப் மாலிக் விளையாடுவது சந்தேகம்?

பாகிஸ்தான் வீரர்கள் முகமது ரிஸ்வான், ஷோயப் மாலிக் | கோப்புப்படம்

துபாய்

துபாயில் இன்று நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான், மூத்த வீரர் ஷோயப் மாலிக் இருவரும் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

இருவருக்கும் லேசான காய்ச்சல் இருந்ததால், பயிற்சியிலும் பங்கேற்கவில்லை, அவர்களின் உடல்நிலையும் தேறவில்லை என்பதால் இருவரும் களமிறங்கமாட்டார்கள் எனத் தெரிகிறது.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நேற்று நடந்த முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நியூஸிலாந்து அணி தகுதி பெற்றது.

இந்நிலையில் துபாயில் இன்று நடக்கும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியஅணி. ஆனால், பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், அனுபவ வீரர் ஷோயப் மாலிக் இருவருக்கும் லேசான காய்ச்சல் இருந்ததால், இருவரும் பயிற்சியில் பங்கேற்கவில்லை. உடல் அளவிலும் இருவரும் சோர்வாக இருப்பதால், இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவார்களா என்பது சந்தேகம்தான்.

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருக்கும் மேத்யூ ஹேடன், தனது தாய்நாடான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தானை பட்டை தீட்டி களமிறக்குகிறார். ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரும், ஹேடனும் சகவீரர்களாக ஆஸி அணியில் இருந்தவர்கள். இரு அணிகளுக்கு இடையிலான போட்டி என்றாலும், இரு பயிற்சியாளர்களுக்கு இடையிலான ஆட்டமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த அரையிறுதி ஆட்டம் பாகிஸ்தானை விட ஆஸ்திரேலியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாரக்கப்படுகிறது. இதுவரை ஆஸ்திரேலிய அணி ஒருமுறை கூட டி20 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிப்போட்டிக்குச்சென்றதும் இல்லை, கோப்பையை வென்றதும் இல்லை. ஆதலால் இந்த அரையிறுதி ஆட்டத்தில் வென்று பைனலுக்குச் செல்ல ஆஸி. அணியினர் தீவிரமாக முயல்வார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x