Published : 08 Nov 2021 04:44 PM
Last Updated : 08 Nov 2021 04:44 PM

பயந்துபயந்து விளையாடினால் தோற்கத்தான் வேண்டும்: இந்தியஅணி குறித்து நாசர் ஹூசைன் சாடல்

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நசீர் ஹூசைன் | கோப்புப்படம்

துபாய்


இந்திய அணியினர் பயந்துகொண்டே டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடியதால்தான் தோல்வி அடைந்து அரையிறுதிக்குள் செல்லாமல் திரும்புகிறார்கள் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் சாடியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த இந்திய அணி, முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 10 விக்கெட்டில் தோற்றது, 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 8 விக்கெட்டில் வீழ்ந்தது. இந்த தோல்விக்குப்பின் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு அருகிப்போனது.

நியூஸிலாந்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்தும்பட்சத்தில் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்புக் கிடைக்கும் என்று காத்திருந்தார்கள். ஆனாலும், அந்த கனவையும் நியூஸிலாந்து கலைத்துவி்ட்டு, ஆப்கனை தோற்கடித்து அரையிறுதி்க்கு தகுதி பெற்றது. இந்திய அணி அரையிறுதிக்குள் செல்லாமல் வெளியேறுகிறது

இந்திய அணியின் நிலை குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்திய அணி வெளியுலகம் சென்று தங்களை வெளிப்படுத்த வேண்டும். இந்திய அணி வீரர்களிடம் ஏராளமான திறமை பொதிந்து கிடக்கிறது. ஆனால், ஒரு விஷயம் , ஐசிசி போட்டிகளில் மட்டும் பின்தங்கிவிடுகிறார்கள்.

உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியினர் பயந்து பயந்துதான் விளையாடியதுதான் தோல்விக்கு காரணம். அச்சமில்லாத கிரிக்கெட்டை விளையாடவில்லை. உலகக் கோப்பையை வெல்ல தகுதியானவர்கள் இந்திய அணிதான் என்று தொடக்கத்தில் கணிக்கப்பட்டது. ஐபிஎல் டி20 தொடரில் விளையாடி வீரர்கள் ஃபார்மில் இருக்கிறார்கள், நட்சத்திர வீரர்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது.

ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே இந்திய அணி தோற்று பின்னடைவு ஏற்பட்டது. பவர்ப்ளே ஓவரில் ஷாகின் அப்ரிடி இரு அருமையான பந்துகளில் ரோஹித் சர்மா, ராகுலை வெளியேற்றினார்.

இந்திய அணியில் சில நேரங்களில் ஒரு பிரச்சினை எழும். டாப் ஆர்டர் சிறப்பாக ஆடினால், நடுவரிசை சிறப்பாக பேட் செய்யமாட்டார்கள்.இதுபோன்ற நேரத்தில் நமக்கு பி பிளான் அவசியமாகும். அது இந்திய அணியிடம் இல்லை.

இந்திய அணி திறமையான வீரர்களைக் கொண்டிருக்கிறது . ஆனால் வீரர்கள் தேர்வில் உடற்தகுதியில்லாத ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்தது, நியூஸிலாந்துக்கு எதிராக ரோஹித் சர்மா, ராகுல் கூட்டணியைப் பிரித்தது சரியானது உத்தி அல்ல. உலகத் தரம் வாய்ந்த இரு வீரர்களையும் பிரித்திருக்கக் கூடாது” இவ்வாறு நாசர் ஹூசைன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x