Last Updated : 04 Nov, 2021 03:18 PM

 

Published : 04 Nov 2021 03:18 PM
Last Updated : 04 Nov 2021 03:18 PM

அஸ்வின் எப்போதுமே ப்ளேயிங் லெவனில் அவசியம்; பந்துவீச்சின் தரத்தை ஒவ்வொருவரும் பார்த்தார்கள்: ரோஹித் சர்மா புகழாரம்

இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் | படம் உதவி: ட்விட்டர்.

அபு தாபி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சின் தரத்தை அனைவரும் பார்த்தார்கள் என ரோஹித் சர்மா புகழாரம் சூட்டினார்.

அபுதாபியில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

இந்திய அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை, கடந்த 2 போட்டிகளாகத் தன்னை ஒதுக்கிவைத்தது தவறு என்பதை அஸ்வின் நேற்று நிரூபித்தார். 4 ஓவர்கள் வீசிய அஸ்வின் 14 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 12 டாட் பந்துகள் ஏறக்குறைய 2 ஓவர் மெய்டன். அஸ்வினை விட நேற்று இந்திய அணியில் பந்துவீசிய அனைவரும் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல்தான் விட்டுக் கொடுத்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பின் வொய்ட் பால் ஃபார்மட்டுக்குத் திரும்பிய அஸ்வின் தன்னுடைய ஃபார்மை நிரூபித்தார். ஆனால், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அழைத்துச் சென்று ஒரு போட்டியில்கூட அஸ்வினைக் களமிறக்கவில்லை, பாகிஸ்தான், நியூஸிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்திலும் அஸ்வினைக் களமிறக்கவில்லை என்பது இப்போது தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது.

அஸ்வினின் பந்துவீச்சு குறித்து துணை கேப்டன் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:

''அஸ்வின் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் அணிக்குள் வந்து தன்னை நிரூபித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அஸ்வினின் பந்துவீச்சு தரம் என்ன என்பதை அனைவரும் பார்த்தனர். அஸ்வின் தரமான பந்துவீச்சாளர் என்பதில் சந்தேகமில்லை. ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளார், ஏராளமான விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார், இந்தியாவுக்கு ஒரு நாள், டி20 போட்டிகளிலும் அதிகமாகப் பங்கேற்றுள்ளார்.

4 ஆண்டுகளுக்குப் பின் விளையாடுவதால், அஸ்வினுக்கு இது சவாலான காலகட்டம் என்பது தெரியும். ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அஸ்வின் விளையாடி வருவதால், அவரின் பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது. அஸ்வின் சிறந்த விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர். எந்த நேரத்திலும் அவரைப் பந்துவீச அழைத்தாலும் விக்கெட் வீழ்த்திக் கொடுப்பார்.

ஓவருக்கு 6 பந்துகளை எப்படியாவது வீசிவிட்டுச் செல்லும் பந்துவீச்சாளர் அஸ்வின் அல்ல. எப்போதுமே அஸ்வின் விக்கெட் எடுக்கக்கூடியவர். அஸ்வின் போன்ற பந்துவீச்சாளர் ப்ளேயிங் லெவனில் எப்போதும் இருக்க வேண்டும். ஆட்டத்தின் நடுப்பகுதியில் விக்கெட் வீழ்த்த அஸ்வின் போன்ற பந்துவீச்சாளர்களால்தான் முடியும். அதற்குரிய தகுதி அஸ்வினிடம் இருக்கிறது.

அஸ்வின் தனது பந்துவீச்சு என்ன என்பதைப் புரிந்து பந்துவீசுகிறார் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாகச் செயல்பட்டார் என்பதால், இந்தப் போட்டியிலும் சிறப்பாகச் செயல்பட முடிந்தது. அடுத்த போட்டிகளிலும் இதேபோன்று அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசுவார் என நம்புகிறேன்''.

இவ்வாறு ரோஹித் சர்மா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x