Last Updated : 03 Nov, 2021 09:35 AM

 

Published : 03 Nov 2021 09:35 AM
Last Updated : 03 Nov 2021 09:35 AM

வெற்றி தொடர்கிறது: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்: நமிபியாவை நசுக்கியது


ரிஸ்வான், பாபர் ஆஸமின் அதிரடி ஆட்டத்தால், அபு தாபியில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தி்ல நமிபியா அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி.

முதலி்ல் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. 190 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நமிபியா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் குரூப்-2 பிரிவில் முதல் அணியாக அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியது. இந்தப் பிரிவில் அடுத்ததாக நியூஸிலாந்து தகுதி பெறுமா அல்லது ஆப்கானிஸ்தானுக்கு வாய்ப்பிருப்பு இருக்கிறதா என்பது இன்று நடக்கும் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிடும்.

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து ரசிகர் வைத்திருந்த பதாகை

ஒருவேளை ஆப்கானிஸ்தானிடமும் இந்திய அணி தோல்வி அடைந்தால், ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லும் போட்டியில், நியூஸிலாந்துக்கு கடும் போட்டியளிக்கக்கூடும்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மிரட்டலான ஃபார்மில் இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு நமிபியாவுடனான ஆட்டம் பெரிதாக சவாலாக இருக்காது என்பது அனைவருக்கும் தெரியும். அந்தவகையில் இந்த ஆட்டம் ஒருதரப்பாகவே இருந்தது.

நமிபியா அணியின் பந்துவீச்சாளர்கள் எந்தவிதத்திலும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு ரன் சேர்க்க தடையாக இல்லை, சிரமத்தையும் அளிக்கவில்லை. அனுபவமற்ற நமிபியா அணியின் பந்துவீச்சு, ஃபார்மில் இருக்கும் பாகிஸ்தான் பேட்ஸமேன்களுக்கு அல்வா சாப்பிட்டதுபோல் இருந்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் பாகிஸ்தான் அணி 71 ரன்கள் சேர்த்தது.நமிபியா தரப்பில் பந்துவீச்சாளர்கள் அனைவருமே ஓவருக்கு சராசரியாக 9 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் 50 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்து(4சிக்ஸர்,8பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார்.
நிதானமாகத் தொடங்கிய ரிஸ்வான் முதல் 21 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார், ஆனால், அடுத்த 29 பந்துகளில்அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 67 ரன்களை சேர்த்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பாபர் ஆஸம் 49 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த தொடரில் பாபர் ஆஸம் அடிக்கும் 3-வது அரைசதம் இதுவாகும். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 113ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

ஒரு காலண்டர் ஆண்டில் டி20 போட்டிகளி்ல் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற வரிசையில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் 1,661 ரன்கள் குவித்து விராட் கோலியை (1,614) முந்தியுள்ளார்.
கிறிஸ் கெயில்(1,665) தற்போது முதலிடத்தில் உள்ளார், அவரை முறியடிக்க இன்னும் ரிஸ்வானுக்கு 4 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் அடுத்தப் போட்டியில் கெயிலின் சாதனையையும் ரிஸ்வான் முறியடித்துவிடுவார்.

அதுமட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் சதம் அடித்த தொடக்க ஜோடி என்ற வரிசையில் ரிஸ்வான், பாபர் ஆஸம் ஜோடி 5-வது முறையாக சதம் அடித்துள்ளனர். இதற்கு முன் ரோஹித் சர்மா, தவண் கூட்டணி 4 முறை சதம் கண்டிருந்தது, அதை பாகிஸ்தான் ஜோடி முறியடித்துவிட்டனர் . மேலும் ஒரு காலாண்டர் ஆண்டில் 1,000 ரன்களுக்கு மேல் குவித்த ஜோடியாகவும் ரிஸ்வான்,பாபர் ஜோடி சிறப்பு பெற்றுள்ளனர்். இந்த ஆண்டில் மட்டும் இருவரும் சேர்ந்து 1,041 ரன்கள் சேர்த்துள்ளனர்.

முகமது ஹபீஸ் 16 பந்துகளில் 32 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 3-வது வி்க்கெட்டுக்கு ஹபீஸ், ரிஸ்வான் ஜோடி 67 ரன்கள் சேர்த்தனர். கடைசி 5 ஓவர்களில் மட்டும் பாகிஸ்தான் அணி 71 ரன்கள் சேர்த்தது.

190 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நமிபாயை 144 ரன்களில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். நமிபியா அணியில் அதிகபட்சமாக டேவிட் வீஸ் 43 ரன்களும், கிரேக் வில்லியம்ஸ் 40 ரன்களும் சேர்த்தனர். தொடக்க வீரர் ஸ்டீபன் பார்ட் 29 ரன்கள் சேர்த்தார்.

நமிபியா பேட்ஸ்மேன்களும் ரன் சேர்க்க மிகுந்த சிரமப்பட்டனர். 20 ஓவர்கள் முழுமையாக பேட் செய்த நமிபியா பேட்ஸ்மேன்கள் 48 டாட்பந்துகளைவிட்டுள்ளனர். அதாவது 8 ஓவர்களில் ரன் ஏதும் அடிக்கவில்லை. மீதமுள்ள 12 ஓவர்களில்தான் 145 ரன்களைச் சேர்த்துள்ளனர். நமிபியா போன்ற கத்துக்குட்டி அணி 12 ஓவர்களில் இந்த ஸ்கோரை அடிப்பது என்பது பாராட்டுக்குரியதாகவே பார்க்க வேண்டும். மற்ற வகையில் நமிபியா அணியில் வேறு எந்த பேட்ஸ்மேன்களும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

பாகிஸ்தான் தரப்பில் ஹசனஅலி 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும், இமாத் வாசிம் 3ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். மற்றவகையில் அப்ரிடி, சதாப்கான் இருவரும் அதிகமாகவே ரன்களை வழங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x