Last Updated : 01 Nov, 2021 09:49 AM

 

Published : 01 Nov 2021 09:49 AM
Last Updated : 01 Nov 2021 09:49 AM

பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் துணிச்சலாக செயல்படவில்லை: தோல்விக்குப்பின் விராட் கோலி ஆதங்கம்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டி அளித்த காட்சி | படம் உதவி ட்விட்டர்

துபாய்


பந்துவீச்சிலும் துணிச்சல் இல்லை, பேட்டிங்கிலும்துணிச்சலோடு செயல்பட வில்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தோல்விக்குப்பின்ஆதங்கத்தோடு தெரிவித்தார்.

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் குவித்தது. 111 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 33 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை அடைந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்புக்கான கதவு திறக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் நியூஸிலாந்து வென்றுவிட்டால் அரையிறுதி ஏறக்குறைய உறுதியாகிவிடும்.

அதேசமயம், இந்திய அணியை தாயகத்துக்கு டிக்கெட் போட வைத்துள்ளது வில்லியம்ஸன் படை. இந்திய அணிக்கு அடுத்து 3 போட்டிகள் இருந்தாலும் அதில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்டது. ஏறக்குறைய இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேறிவிட்டது. கடந்த 2007ம் ஆண்டு 50 ஓவர்கள் உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் இந்திய அணிக்கு மோசமான வெளிேயற்றமாக அமைந்துள்ளது.

இந்த தோல்விக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அளி்த்த பேட்டியில் கூறியதாவது:

இந்த தோல்வி ரொம்பவமே விச்திரமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. நேர்மையாகச் சொல்லப் போனால், ரொம்ப கொடூரமாக இருக்கிறது. பந்தவீச்சிலும், பேட்டிங்கிலும் நியூஸிலாந்துக்கு எதிராக நாங்கள் துணி்ச்சலாகச் செயல்படவில்லை.

பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை. குறைந்த ஸ்கோரை எடுத்ததால் களத்தில் நுழைந்தபோது எங்களால் போதுமான துணிச்சலுடன் செல்லவில்லை. ஆனால், நியூஸிலாந்து அணியினர் தீவிர உணர்ச்சியுடன், நல்ல நம்பிக்கையான உடல்மொழியுடன் இருந்தனர். எங்கள் மீது முதல் ஓவரிலிருந்து நெருக்கடியையும், அழுத்தத்தையும் அளித்தனர். அது கடைசிஓவர் வரை தொடரவும் செய்தது.

பேட்டிங் செய்தபோது, ஒவ்வொருமுறையும் இந்த பந்தை அடித்துவிடலாம், அடுத்த பந்தை அடித்துவிடலாம் என்று நினைத்தோம். ஆனால், விக்கெட்டை இழந்துவிட்டோம். இது டி20 கிரிக்கெட்டில் நடக்கும். ஆனால் பெரும்பாலும் ஷாட்களை அடிக்கும்போதெல்லாம் விக்கெட்டை இழப்பது வெறுப்பை ஏற்படுத்தும்.

உலகளவில் அதிகமான ரசிகர்களைக் கொண்டுள்ள நாங்கள், உலகக் கோப்பை கோப்பைபோன்ற சர்வதேச போட்டியில் விளையாடும்போது எப்போதுமே எதிர்பார்ப்பு குறித்த அழுத்தம் இருக்கும். ஆனால், எங்களால் பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளுக்கு எதிராக அழுத்தத்தை கடந்து வரமுடியவில்லை.

இந்திய அணிக்காக விளையாடும்போது, ஏராளமான எதிர்பார்ப்புகள் இருக்கும், ரசிகர்களிடம் இருந்து மட்டுமல்ல, வீரர்களிடமும் எதிர்பார்ப்புகள் இருக்கும். எங்கு நாங்கள் விளையாடினாலும், நாங்கள் பார்க்கப்படுகிறோம், மக்கள் அரங்கிற்கு வந்து எங்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.

நாங்கள் குழுவாக இருக்கும்போது கடினமான சூழல்களில் அந்த அழுத்தத்தை கடந்து வந்திருக்கிறோம். ஆனால், கடந்த 2 போட்டிகளிலும் அந்த அழுத்தத்தை கடக்க முடியவில்லை, போட்டிகளில் வெல்லவும் முடியவில்லை. டி20 போட்டிகளில் இதை கடந்து வர ஒரேவழி எப்போதும் நேர்மறையாகச் சிந்திக்க வேண்டும், எந்தவிதமான ரிஸ்க் எடுக்கிறோமோ அதைக்கணக்கிட வேண்டும். இதுதான் இந்தப் போட்டிக்கு உகந்தது.
இ்வ்வாறு கோலி தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x