Published : 31 Oct 2021 10:51 AM
Last Updated : 31 Oct 2021 10:51 AM

முதுகெலும்பில்லாதவர்கள் நாங்கள் அல்ல; ஷமியை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை: விராட் கோலி ஆவேசத்துடன் ஆதரவு

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முகமது ஷமி | கோப்புப்படம்

நாங்கள் ஒரு நல்ல காரணத்துக்காக கிரிக்கெட்டை மைதானத்தில் விளையாடுகிறோம். முதுகெலும்பு இல்லாத சிலர்போல், அடையாளத்தை மறைத்துக் கொண்டு சமூக வலைத்தளத்தில் கருத்துக்களைக் கூறவில்லை. ஷமி மட்டுமல்ல யாரையும் மதரீதியாக விமர்சி்க்க அவர்களுக்கு எந்தத்தகுதியும் இல்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆவேசமாகத் தெரிவித்தார்.

துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி முதல் தோல்வியைச் சந்தி்த்தது.

இந்த தோல்வியைத் தாங்க முடியாத ரசிகர்கள், நேற்றைய ஆட்டத்தில் மோசமாகப் பந்துவீசிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை அவதூறாக சமூக ஊகடங்களில் விமர்சித்தனர். முகமது ஷமி குறித்தும் அவரின்குடும்பத்தினர், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மோசமாக ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவமானப்படுத்தினர். ஷமியை டேக் செய்து ட்ரால் செய்தனர்.

இந்நிலையில் முகமது ஷமிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த இந்திய அணியும் பின்னால் இருக்கிறதுஎன்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். கிரிக்இன்போ தளத்துக்கு கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாங்கள் மைதானத்தில் விளையாடுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆனால், முதுகு எலும்பில்லாத சிலர், சமூக ஊடகங்களில் தங்களின் உண்மையான அடையாளத்தை மறைத்துக் கொண்டு தனிப்பட்ட நபர்களை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை. எந்த தனிநபரையும் நேருக்கு நேர் சந்தித்துப்பேசவும் துணிச்சல் இல்லாதவர்கள்.

தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு சமூக ஊடகங்களில் பேசும்பேசுவோர் நகைப்புக்குரியவர்கள் இன்றைய உலகத்தில் சிறந்த பொழுதுபோக்கு அம்சத்துக்குரியவர்கள். இவர்களின் செயல்பாடு துரதிர்ஷ்டமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. ஏனென்றால் மனித ஆற்றல் மிகப்பெரியது அதை இவ்வளவு தரம்தாழ்ந்து பயன்படுத்துகிறார்களே என்றுதான் பார்க்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை ஒருவரை மதரீதியாகத் தாக்குதவது என்பது மனிதர்கள் செய்யும் பரிதாபத்துக்குரிய செயல். சில சூழல்களில் ஒருவர் என்ன நினைக்கிறார் என்பதைக் கூறுவதற்கும், கருத்துக்களைத் தெரிவிக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது.

ஆனால், என்னுடைய தனிப்பட்ட ரீதியில், ஒருபோதும் யாரையும் மதரீதியாக வேறுபாடு செய்ததில்லை. மதம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் புனிதமானது, தனிப்பட்ட ரீதியானது, அதை அங்கேயே விட்டுவிட வேண்டும்.

முகமது ஷமிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த அணியும் பின்னால் இருக்கிறது. எங்கள் அணியின் கலாச்சாரம் வலிமையாக இருக்கிறது. இதுபோன்ற தாக்குதல்கள் எல்லாம் அணியை எந்த விதத்திலும் பாதிக்காது, அதற்கு வாய்பில்லை.

தனிநபர்களாக நாம் என்ன செய்கிறோம் என்பது பற்றிய புரிதல் இல்லாததால் மக்கள் விரக்தி அடைகிறார்கள். நாங்கள் களத்தில் எவ்வளவு முயற்சி செய்கிறோம் என்பது அவர்களுக்கு புரியவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக முகமது ஷமி போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு எத்தனை போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்பது பற்றியபுரிதலும் அவர்களுக்கு இல்லை. ஜஸ்பிரித் பும்ராவுடன் சேர்ந்து ஷமியும் எங்களின் பிரதான பந்துவீச்சாளர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷமியின் பங்களிப்பு, தாக்கமும் அதிகமாக இருக்கும்.

முகமது ஷமியின் தேசபக்தி, தேசத்தின் மீதான அக்கறை ஆகியவற்றை சிலர் புறக்கணிக்க முயன்றால், நான் நேர்மையாகக் கூறுகிறேன் என்னுைடய வாழ்ககையில் ஒரு நிமிடத்தைக் கூட அந்த நபர்களுக்காக செலவிடவோ கவனிக்கவோ வீணாக்கமாட்டேன்.

ஷமிக்கு முழுமையாக, 200 சதவீதம் ஆதரவு தருகிறோம். ஷமியை மதரீதியாக விமர்சித்தவர்கள், தாக்கியவர்கள் விரும்பினால் இன்னும் வேண்டுமானால் அதிகபலத்துடன்வரட்டும். எங்கள் அணியில் உள்ள சகோதரத்துவம், நட்பு, எதையும் அசைத்துக்கூடப் பார்க்க முடியாது. இந்திய அணியின் கேப்டனாக உறுதி கூறுகிறேன், அணிக்குள் நாங்கள் உருவாக்கியுள்ள கலாச்சாரத்தை இதுபோன்ற விஷயங்கள் .0001 சதவீதம் கூட ஊடுருவமுடியாது. இதற்கு முழுமையாக உத்தரவாதம் அளிக்கிறேன்.

தனிநபர்களாகிய நாங்கள், களத்தில் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதையும், எங்களிடம் உள்ள குணாதிசயம் மற்றும் மன உறுதியின் வலிமையையும் புரிந்துகொண்டு, களத்தில் நாங்கள் செய்வதை துல்லியமாகச் செய்கிறோம்.

நாங்கள் செய்வதை கற்பனை செய்து பாரக்கக்கூட எங்களை விமர்சிப்பவர்களுக்கு துணிச்சலோ அல்லது முதுகெலும்போ இல்லை. ஒரு சிலரின் வெறுப்பால் அடிப்படையில், தன்னம்பிக்கை இல்லாமல், இரக்கமில்லாமல் உருவாக்கப்படும் நாடகமாகவே இதைப் பார்க்கி்றேன்.

ஒரு குழுவாக, நாம் எவ்வாறு ஒன்றாக இருக்க வேண்டும், எப்படி தனி நபர்களை ஆதரிக்க வேண்டும், நமது பலத்தில் எப்படி கவனம் செலுத்த வேண்டும் என்பதை புரிந்துகொள்கிறோம். வெளிேய எங்களை எவ்வாறு சித்தரிக்கிறார்கள். ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலும் இந்தியா தாங்காது என்பதெல்லாம் எங்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று. நாங்கள் விளையாட்டை விளையாடுகிறோம்.

விளையாட்டை எவ்வாறு விளையாடுவது எனப் புரிந்து கொண்டு விளையாடுகிறோம். எங்களுக்கு வெளியே இருந்து சிலர் எப்படி சிந்தித்தாலும் அதற்கு எங்கள் குழுவில் மதிப்புகிடையாது. அதில் ஒருபோதும் கவனம் செலுத்தமாட்டோம்.
இ்வ்வாறு விராட் கோலி தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x