Last Updated : 30 Oct, 2021 08:53 AM

 

Published : 30 Oct 2021 08:53 AM
Last Updated : 30 Oct 2021 08:53 AM

4 சிக்ஸர்கள்; அற்புதமான ஃபினிஷிங் ஆசிப் அலி; பாகிஸ்தானுக்கு ஹாட்ரிக் வெற்றி: வெற்றியைக் கோட்டைவிட்ட ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றிக்கு காரணமாக இருந்த ஆசிப் அலி, ஒரே ஓவரில் 4 சிக்ஸர்களை விளாசிய காட்சி | படம் உதவி ட்விட்டர்

துபாய்


ஆசிப் அலியின் அற்புதமான ஃபினிஷிங், கேப்டன் பாபர் ஆஸமின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த டி20உலகக் கோப்பைப் போட்டியின் குரூப்-2 பிரிவில் நடந்த சூப்பர்-12 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகி்ஸ்தான் அணி.

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது. 148 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துக்கு இருந்த ரசிகர்கள் கூட்டத்தைவிட ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணியின் ஆட்டத்துக்கு ரசிகர்கள் கூட்டம் அரங்கை நிரப்பியது. கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் மான்செஸ்டரில் நடந்த இரு அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையில் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் வெளியே ரகளையில் ஈடுபட்டனர். அதேபோன்று நேற்றும் நடந்து விடுமோ என்று அஞ்சும் அளவுக்கு அரங்கிற்கு வெளியே ரசிகர்கள் கூட்டம் நிரம்பி இருந்தது.

பாகிஸ்தான் அணி சர்வதேச அளவில் அச்சுறுத்தக்கூடிய அணி என்றாலும், பாகிஸ்தானை அச்சுறுத்தும் அளவுக்கு ஆப்கானிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சும், பேட்டிங்கும் இருந்தது. சபாஷ்! போட்டினா இப்படி இருக்கனும் என்ற ரீதியில் ஸ்வாரய்ஸம் குறையாமல் ஆப்கானிஸ்தான் ஒவ்வொரு ஓவரையும் நகர்த்திச் சென்றனர். 19-வது ஓவர் மட்டும் வேறு நல்ல அனுபவமான பந்துவீச்சாளர் வீசியிருந்தால், ஆட்டம் நிச்சயம் ஆப்கானிஸ்தான் வசமாக மாறியிருக்கும்.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இரு அணி வீரர்களும் களத்தில் எதிரணி போன்று விளையாடவில்லை. இரு அணி வீரர்களும் முகத்தில் புன்னகையுடன், கிண்டலுடன் விளையாட்டை விளையாட்டாக விளையாடியது ஆகச்சிறந்த ஸ்போப்ர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்தியது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி ஏறக்குறைய அரையிறுதிச் சுற்றை உறுதி செய்துவிட்டது என்ற கூறலாம். இனி அடுத்ததாக நமிபியா, ஸ்காட்லாந்து அணிகளை பாகிஸ்தான் அணி எளிதாக வென்றுவிடு் என்பதால், பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துவிட்டது. 3 வெற்றி, 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என 2 புள்ளிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் 2-வது இடத்தில் இருக்கிறது.

சூப்பர்-12 சுற்றில் இன்னும் ஒரு அணி மட்டுமே அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு உண்டு அது நியூஸிலாந்தா அல்லது இந்திய அணியா என்று நாளை தெரிந்துவிடும். இதில் எந்த அணி தோல்வி அடைகிறதோ அந்த அணி தாய்நாட்டுக்கு டிக்கெட் போட்டுவிட வேண்டியதுதான்.

பாகிஸ்தான் வெற்றி நேற்றைய ஆட்டத்தில்ல மதில்மேல் பூனை என்ற ரீதியில்தான் இருந்தது. 18-வது ஓவர் முடிவு வரை பாகிஸ்தான் வெற்றி அதன் கையில் இல்லை. ஆனால், ஜனத் வீசிய 19-வது ஓவர்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. களத்தில் இருந்த ஆசிப் அலி மிட்விக்கெட், லாங் ஆஃப், எக்ஸ்ட்ரா கவர் திசையில் 4 சிக்ஸர்களை அடித்து ஆட்டத்தைவெற்றியுடன் முடித்தார்.

நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் இதேபோன்ற இக்கட்டான தருணத்தில் களமிறங்கிய ஆசிப் அலி, டிம் சவுதி பந்துவீச்சிலும், போல்ட் பந்துவீச்சிலும் சிக்ஸர் விளாசி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தார். 2-வது முறையாக பாகிஸ்தானுக்கு அருமையான ஃபினிஷிங் டச்சை ஆசிப் அலி வழங்கியுள்ளார். 7 பந்துகளில் 25 ரன்கள் சேர்்த்த ஆசிப் அலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை இதுவரையில்லாத வகையில் அந்த அணியில் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் நிலைத்தன்மை(கன்சிஸ்டன்ஸி) நிலவுகிறது. இதற்கு முன் நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் ஸ்டார் பேட்ஸ்மேன்களை மட்டுமே நம்பி இருந்த பாகிஸ்தான் அணியில் இன்று இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் ஜொலிக்கிறார்கள்.

பந்துவீச்சில் அப்ரிடி, ராஃப், இமாத் வாசிம்,பேட்டிங்கில் பாபர் ஆஸம், பக்கர் ஜமான், ரிஸ்வான், ஆசிப் அலி, ஷோயப் மாலிக் என எந்த துறையிலும் குறை கூற முடியாத அளவில் சீரான போக்கு காணப்படுகிறது. பாகிஸ்தான் அணியி்ன் இந்த அபாரமான ஆற்றல் நிச்சயம் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை கொண்டு செல்லும் என்பதில் வியப்பில்லை.

148 ரன்களைத் துரத்தி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் 8 ரன்னில் வெளியேறினார். 2-வதுவிக்கெட்டுக்கு கேப்டன் பாபர் ஆஸம், பக்கர் ஜமான் இருவரும் சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர்.

ஆப்கானிஸ்தான் வீரர்கள் கட்டுக்கோப்பாகவும், தவறான பந்துகளைஅதிகம் வீசாமல் லைன் லெத்தில் வீசியதால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ரன்ரேட்டை உயர்த்த மிகவும் சிரமப்பட்டனர். பவர்ப்ளையில் பாகிஸ்தான் ஒரு விக்கெட்இழப்புக்கு 38 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

அதிலும் குறிப்பாக முஜிப்புர் ரஹ்மான், முகமது நபி இருவரும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறவிட்டனர். முஜிபுர் தனது 4 ஓவர்களையும் வீசி பாகிஸ்தாந் அணியை கட்டுக்குள் வைத்திருந்தார். 7ஓவர்கள் வரை பாகிஸ்தான் அணி 48 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. அதன்பின் மிதவேகப்பந்துவீச்சார்கள் நவின், கரீம், ரஷித் கான் மூவரும் மாறி,மாறிப் பந்துவீசினர். கடைசிப் 10 ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றிக்கு 76 ரன்கள் தேவைப்பட்டது.

முகமது நபிபந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஜமான்30 ரன்னில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு பாபர், ஜமான் இருவரும் 63 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த முகமது ஹபீஸ் 12 ரன்னில் ரஷித் கான் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 3-வது விக்கெட்டுக்கு வந்த அனுபவ வீரர் ஷோயப் மாலிக், பாபர் ஆஸத்துடன் சேர்ந்தார்.

இருவரும் மெல்ல, மெல்ல அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினர். பாகிஸ்தான் அணிக்கு வெற்றிக்கு தேவையான ரன்களைவிட பந்துகள் குறைவாக இருந்தது. கடைசி 5 ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ஷோயப் மாலிக், பாபர் ஆஸம் இருந்தனர். ரஷித்கான் வீசிய 17-வது ஓவரில் ஷோயப் மாலிக் ஒரு சி்க்ஸர் விளாசி அழுத்தத்தைக் குறைத்தார்.

அதே ஓவரின் 4-வது பந்தில் பாபர் ஆஸம் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் அடித்த பந்தை நவின் கேட்ச் பிடிக்காமல் தவறவிட்டார். இருப்பினும் மனம்தளராமல் பந்துவீசிய ரஷித்கான் கடைசிப்பந்தில் பாபர் ஆஸமை கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். பாபர் ஆஸம் 51 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து ஆசிப் அலி களமிறங்கி, மாலிக்குடன் சேர்ந்தார்.

18-வது ஓவரை நவீன் வீசினார். பாகிஸ்தான் வெற்றிக்கு 3 ஓவர்களில் 26ரன்கள் தேவைப்பட்டது. அற்புதமாக வீசிய நவீன் இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து ஷோயப் மாலிக்(19) விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து சதாப் கான் களமிறங்கினார். ஆட்டம் ஆப்கானிஸ்தான் பக்கம் மெல்ல சாயத் தொடங்கியது. கடைசிப்பந்தில் சதாப்கான் தட்டிவிட்டு ஒருரன் எடுக்க முற்பட்டபோது மற்றொரு ஸ்ட்ரைக்கில் இருந்த ஆசிப் அலி ரன்ஓடிவர மறுத்துவிட்டார்.

கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. கரீம் ஓவரை டார்கெட் செய்ய ஆசிப் அலி முடிவு செய்தார். அனுபவம் இல்லாத கரீம் பந்துவீச்சில் முதல் பந்து, 3-வது பந்து, 5-வது பந்து, 6வது பந்தில் ஆசிப் அலி சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தார். ஆசிப் அலி 7 பந்துகளில் 25 ரன்களுடனும், சதாப் கான் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

ஆப்கானிஸ்தான் அணியைப் பொறுத்தவரை, பேட்டிங்கில் தொடக்கத்தில் விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. பவர்ப்ளே முடிவதற்கு ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர் ஜஜாய்(0),முகமது ஷேசாத்(8), குர்பாஸ்(10),ஆப்கன்(10) என வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர்.

5-வது விக்ெகட்டுக்கு கரீம்(15), ஜாத்ரன்(22) ஓரளவுக்குத் தாக்குப் பிடித்தனர். 76 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் தடுமாறியது. இதனால் 100 ரன்களுக்குள் ஆப்கானிஸ்தான் சுருண்டுவிடும் என்று கருதப்பட்டது.

ஆனால், 7-வது விக்கெட்டுக்கு நயிப், கேப்டன் நபி இருவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடைசி 5 ஓவர்களில் இருவரும் சேர்ந்து 43 ரன்கள் சேர்த்தனர். முகமது நபி35 ரன்களிலும், நயிப் 35 ரன்களிலும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் இமாத் வாசிம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x