Published : 29 Oct 2021 01:39 PM
Last Updated : 29 Oct 2021 01:39 PM

2022 ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவைத் தக்கவைக்க வாய்ப்பு இல்லை?

மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்திக் பாண்டியா | கோப்புப்படம்

2022-ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவைத் தக்கவைக்க வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022-ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. வழக்கமாக இருக்கும் 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ, அகமதாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு 2 அணிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்துக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களைத் தக்கவைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 உள்நாட்டு வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 உள்நாட்டு வீரர்கள் ஒரு வெளிநாட்டு வீரர்கள் என்ற கணக்கில் தக்கவைப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது.

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் 3 வீரர்கள் தக்கவைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வெளிநாட்டு வீரர்களில் கெய்ரன் பொலார்ட் ஆகியோர் தக்கவைக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியில் நீண்டகாலமாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பு இருக்காது. அவரைத் தக்கவைக்கும் நிலையில் நிர்வாகம் இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறே ஹர்திக் பாண்டியா தக்கவைக்கப்பட்டாலும் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே வாய்ப்புள்ளது. 4-வது வீரராக சூர்யகுமார் அல்லது இஷான் கிஷன் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக ஐபிஎல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேபோல டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் பதவியிலிருந்து ஸ்ரேயாஸ் அய்யரைக் கழற்றிவிடும் என்று தெரிவிக்கப்பட்டாலும், உறுதியற்ற தகவலின்படி அடுத்த ஆண்டு ஏலத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் டெல்லி கேபிடல்ஸ் அணியில் நீடிக்கமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரேயாஸ் அய்யரைவிட, ரிஷப் பந்த் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டார் என்பதால்தான் ஸ்ரேயாஸ் அய்யர் காயத்திலிருந்து திரும்பி வந்தபோதிலும் அவரிடம் மீண்டும் கேப்டன்ஷிப் பதவி கொடுக்கப்படவில்லை.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் வந்தபின் ஒருமுறை ஃபைனல்வரை அணி சென்றுள்ளது, இருமுறை ப்ளே ஆஃப் வரை சென்றது. ஒருவேளை அடுத்த சீசனில் ஸ்ரேயாஸ் அய்யரை டெல்லி அணி கழற்றிவிட்டால் அவரைத் தேர்ந்தெடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் பஞ்சாப் அணிகள் காத்திருக்கின்றன.

ஏனென்றால், இந்த இரு அணிகளுக்கும் கடந்த பல சீசன்களாக நல்ல கேப்டன் இல்லாமல் தடுமாறி வருவதால், ஸ்ரேயாஸ் அய்யரைத் தேர்வு செய்யக்கூடும். இது தவிர ஆர்சிபியின் கேப்டன் பதவியிலிருந்தும் விராட் கோலி விலகிவிட்டதால், நல்ல கேப்டனை ஆர்சிபி அணி நிர்வாகமும் தேடி வருகிறது. ஆதலால், ஸ்ரேயாஸ் அய்யருக்கு கேப்டன் பதவி வழங்க 3 அணிகள் வாய்ப்புள்ளது என நம்பலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x