Published : 27 Oct 2021 08:43 AM
Last Updated : 27 Oct 2021 08:43 AM

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு முறைப்படி ராகுல் திராவிட் விண்ணப்பம்

ராகுல் திராவிட் | கோப்புப்படம்

புதுடெல்லி


இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் திராவிட் முறைப்படி விண்ணப்பித்துள்ளார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் திராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வருவாரா அல்லது தேசிய கிரிக்கெட் அகாடெமி இயக்குநராக தொடர்வாரா என்ற ஊகங்கள் எழுந்தநிலையில் அதற்கு பதில் கிடைத்துள்ளது.

ராகுல் திராவிட் தவிர்த்து தேசிய கிரிக்கெட் அகெடமியில் அவருக்கு உதவியாக இருந்த முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பராஸ் மாம்பரே, முன்னாள் விக்கெட் கீப்பர் அஜெய் ரத்ரா ஆகியோரும் பந்துவீச்சுப் பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

டி20 உலகக் கோப்பை முடிந்தவுடன் இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிறச்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர் ஆகியோரின் ஒப்பந்தம் முடிவதால் புதிதாக இருவரும் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்கள் தவிர தேசிய கிரிக்கெட் அகாடெமியில் திராவிட்டுடன் இணைந்து பணியாற்றியவரும், இந்தியா-ஏ மற்றும் மகளிர் அணியோடு பணியாற்றியவருமான அபெய் சர்மா பீ்ல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.

பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில் “ இந்திய அணியின் தலைமைப்பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் திராவிட் முறைப்படி விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பம் செய்ய இன்று(நேற்று) கடைசிநாளில் திராவிட் விண்ணப்பம் அளி்த்தார். தற்போது என்சிஏ இயக்குநராக இருக்கும் திராவிட்டுக்கு கீழ் பணியாற்றும் மாம்பரே, அபெய் சர்மா ஆகியோரும் பந்துவீச்சுப்பயிற்சியாளர், பீ்்ல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தனர். இவர்கள் விண்ணப்பம் ஒருமுறைக்காகத்தான்” எனத் தெரிவித்தனர்.

துபாயில் நடந்த சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, பிசிசிஐ தலைவர் கங்குலியை, ராகுல் திராவிட் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்து தெரியவில்லை. ஆனால், இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர், என்சிஏ இயக்குநர் பதவி ஆகியவை குறித்து பேசப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து கங்குலி அளி்த்த பேட்டியில்கூட, “ திராவிட் இ்ந்திய அணியின் பயிற்சியாளராக வரப்போகிறார் என்பது நாளேடுகளைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்திய அணிக்கு ராகுல் திராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அவ்வாறு திராவிட் பயிற்சியாளராகினால், நவம்பர் 17ம் தேதி தொடங்கும் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து திராவிட் பணியைத் தொடங்குவார். டி20 உலகக் கோப்பையோடு விராட் கோலியும், கேப்டன் பதவியிலிருந்து விலகிவிடுவார் என்பதால் புதிய கேப்டனுடன் திராவிட் பணியாற்றுவார்.

என்சிஏ இயக்குநர் பதவியிலிருந்து திராவிட் விலகும்பட்சத்தில் புதிய இயக்குநரை பிசிசிஐ நியமிக்கும்.
இந்தியா ஏ மற்றும் 19வயதுக்கு கீழ்பட்ட அணிகளுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மாம்பரேவுக்கு அதிகம் உண்டு. சிறந்த வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்கு வழங்கியதில் திராவிட்டுடன், மாம்பரேவுக்கும் பங்கு உண்டு.

49வயதாகும் மாம்பரே இந்திய அணிக்காக 1996-98ம் ஆண்டுகளில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன்பின் பெரும்பாலும் மும்பை அணிக்காகவே மாம்பரே களமிறங்கியுள்ளார். 91 முதல்தரப்போட்டிகளில் 284 விக்கெட்டுகளையும், 81 ஏ போட்டிகளில் 111 விக்கெட்டுகளையும் மாம்பரே வீழ்த்தியுள்ளார். மேற்கு வங்க அணிக்கு மாம்பரே பயிற்சியாளராக இருந்து 2006-2006ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையை வெல்லவைத்தார், பரோடா அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x