Published : 26 Oct 2021 05:03 PM
Last Updated : 26 Oct 2021 05:03 PM

விளையாட்டு மக்களை ஒன்றிணைக்க வேண்டும்; பிரிக்கக் கூடாது: ஷமிக்கு பாக். வீரர் ரிஸ்வான் ஆதரவு

விளையாட்டு மக்களை ஒன்றிணைக்க வேண்டும். பிரிக்கக் கூடாது என்று முகமது ஷமிக்கு ஆதரவாக பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் கருத்து தெரிவித்துள்ளார்.

துபாயில் நேற்று முன்தினம் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி முதல் தோல்வியைச் சந்தித்தது.

இந்தத் தோல்வியைத் தாங்க முடியாத ரசிகர்கள், நேற்றைய ஆட்டத்தில் மோசமாகப் பந்துவீசிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை அவதூறாக சமூக ஊடங்களில் விமர்சித்தனர். முகமது ஷமி குறித்தும், அவரின் குடும்பத்தினர், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் மோசமாக ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவமானப்படுத்தினர்.

ஷமியை டேக் செய்து தொடர்ந்து ட்ரால் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஷமி மீதான தாக்குதலுக்கு எதிராக இந்திய வீரர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் சிறப்பாக விளையாடி பாகிஸ்தானுக்கு வெற்றியைத் தேடித் தந்த ரிஸ்வான், ஷமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரிஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு வீரர் தனது நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் எதிர்கொள்ளும் அழுத்தம், போராட்டங்கள், தியாகங்கள் ஆகியவை அளவிட முடியாதவை. முகமது ஷமி ஒரு ஸ்டார். உலகின் சிறந்த பந்து வீச்சாளர். உங்கள் வீரர்களுக்கு மதிப்பளியுங்கள். விளையாட்டு மக்களை ஒன்றிணைக்க வேண்டும். பிரிக்கக் கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x