

அர்ப்பணிப்பு மிக்கவர், உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் என்று ஷமிக்கு சச்சின் டெண்டுல்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி முதல் தோல்வியைச் சந்தித்தது.
இந்தத் தோல்வியைத் தாங்க முடியாத ரசிகர்கள், நேற்றைய ஆட்டத்தில் மோசமாகப் பந்துவீசிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை அவதூறாக சமூக ஊடங்களில் விமர்சித்தனர். முகமது ஷமி குறித்தும், அவரின் குடும்பத்தினர், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் மோசமாக ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவமானப்படுத்தினர்.
ஷமியை டேக் செய்து தொடர்ந்து ட்ரால் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஷமி மீதான தாக்குதலுக்கு எதிராக இந்திய வீரர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சச்சின் டெண்டுல்கரும் தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம் இந்திய அணிக்கு ஆதரவு கொடுக்கும்போது இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களையும் ஆதரிக்க வேண்டும்.
ஷமி அர்ப்பணிப்பு மிக்கவர். உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்.மற்ற விளையாட்டு வீரர்களைப் போல அவருக்கு நேற்றைய நாள் சிறந்ததாக அமையவில்லை. ஷமி மற்றும் இந்திய அணிக்கு ஆதரவாக இருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இர்ஃபான் பதான் ஆதரவு
இர்ஃபான் பதான் தனது தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா - பாகிஸ்தான் விளையாடிய போட்டிகளில் நானும் இதற்கு முன்னர் விளையாடி இருக்கிறேன். அப்போது இந்தியா தோல்வி அடைந்தபோது யாரும் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் என்று கூறவில்லை. நான் சில வருடங்களுக்கு முன்னான இந்தியாவைப் பற்றிக் கூறுகிறேன். இந்த முட்டாள்தனம் நிறுத்தப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.