Published : 25 Oct 2021 01:22 PM
Last Updated : 25 Oct 2021 01:22 PM

இந்திய அணிக்கு எதிரான வெற்றி: பாகிஸ்தானில் பட்டாசுகள் வெடித்து உற்சாகக் கொண்டாட்டம்; சாலைகளில் திரண்ட ரசிகர்கள் 


டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி்க்கு எதிராக பாகிஸ்தான் அணி முதல்முறையாக வென்றதை அந்நாட்டு மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தான்.

50 ஓவர்கள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த 1992ம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடி வருகிறது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வி அடைந்திருந்திருந்தது. ஆனால், பாகிஸ்தான் அணி முதல் முறையாக நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியை வென்றது.

12 முறை முயன்று 13-வது முறையாக கேப்டன் பாபர் ஆஸம் தலைமையிலான இளம் அணிக்கு கிடைத்த வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். 2 ஆண்டு இடைவெளிக்குப்பின் இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடப்பதால், இரு நாட்டு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

பாகிஸ்தானில் கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் போன்ற நகரங்களில் சாலைகளில் மிகப்பெரிய திரை அமைக்கப்பட்டு இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நேற்று ஒளிபரப்பப்பட்டன. பாகிஸ்தான் அணி, பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி பெற்றதையடுத்து, அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்குச் சென்றனர்.

கார் ஒலிபெருக்கியை ஒலிக்கவிட்டும், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடினர். பல நகரங்களில் மக்கள் சாலைகளில் திரண்டு வெற்றியை கொண்டாடத் தொடங்கினர்.

இதையடுத்து, கராச்சி, இஸ்லாமாபாத் நகரங்களில் மக்கள் கொண்டாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கலைத்தனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் நாட்டு தேசிய கீதத்தை காரில் ஒலிக்கவிட்டும், தேசியக் கொடியை பறக்விட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பல்கலைக்கழக மாணவரான பர்ஹான் கூறுகையில் “ பல கட்ட முயறச்சிக்கு பின் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றுள்ளது. அதுதான் மகிழ்ச்சிக்குரிய விஷயம்”எனத் தெரிவித்து காரில் தேசியக் கொடியை பறக்கவிட்டு சென்றார்.

உயரமான கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மக்கள் இரவுநேரத்தில் ஏறி நின்று பாகிஸ்தானை வாழ்த்தி கோஷமிட்டும், கொடியை பறக்கவிட்டும் மகிழச்ச்ியை வெளிப்படுத்தினர்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைத்த இந்த நேரத்தில் இரு நாடுகளின் உறவும் மோசமான நிலையி்ல் இருக்கிறது. பாக் முன்னாள் வீரர் இக்பால் காசிம் கூறுகையில் “ டி20 போட்டியில் பாகிஸ்தானின் முதல் வெற்றி இதுவாகும். ஒருதரப்பாக நடந்த இந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x