Last Updated : 25 Oct, 2021 08:42 AM

 

Published : 25 Oct 2021 08:42 AM
Last Updated : 25 Oct 2021 08:42 AM

ஒரு போட்டியில் பாகிஸ்தான் .வென்றுவிட்டதால் எனக்கு உலகம் முடிந்துவிடவில்லை: விராட் கோலி ஆவேசம்

இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டி அளித்த காட்சி | படம் உதவி ட்விட்டர்

துபாய்

ஒரு போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றுவிட்டதால் எனக்கும், இந்திய அணிக்கும் இந்த உலகம் முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லைஎன்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆவேசமாகத் தெரிவித்தார்

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, வி்க்கெட் இழப்பின்றி, 17.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதுவரை 50 ஓவர்கள், டி20 உலகக் கோப்பையில் 12 முறை இந்திய அணியை எதிர்கொண்டு தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, 13-வது முறையாக வென்றுள்ளது. ஏறக்குறைய 29 ஆண்டுகளுக்குப்பின் , கடந்த 1992ம் ஆண்டிலிருந்து இந்திய அணியை உலகக் கோப்பைப் போட்டியில் சந்தித்துவரும் பாகிஸ்தான் இதுவரை ஒருமுறைகூட வெல்லமுடியாமல் பெரும் சுமையாக சுமந்துவந்தது. அந்த பிரச்சினை பாபர் ஆஸம் மூலம் தீர்க்கப்பட்டது.

அதிலும் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்குக் கிடைத்த வெற்றியே பிரமாண்ட வெற்றியாக 10 விக்கெட் வித்தியாசத்தில் கிடைத்துள்ளது.

இந்த போட்டிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இந்திய அணிக்கு அதீதமான தன்னம்பிக்கையுடன் இருந்ததும் பாகிஸ்தான் அணியின் திறமை குறித்தும் ஆலோசி்க்காமல் இருந்தது, தோல்விக்கு காரணமாக என்று பாகிஸ்தான் ஊடகத்தினர் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஆவேசமாக பதில் அளித்த கோலி, “ இன்று நடந்த போட்டி மிகச்சிறந்தது என உங்களுக்குத் தெரியும். வெளியிலிருந்து யார் வேண்டுமானாலும் ஆலோசனைகள் தரலாம். என்னுடைய விருப்பமெல்லாம் களத்துக்கு வாருங்கள், பேட், பேட், ஹெல்மெட் அணிந்து விளையாடிப் பாருங்கள் என்ன அழுத்தம் இருக்கிறது எனத் தெரியும்.

எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது, குறிப்பாக பாகிஸ்தானை எளிதாக எடுக்க முடியாது. இன்றுள்ள சூழலில் உலகில் எந்த அணியையும் வீழ்த்தும் திறமை கொண்டது. இந்த ஆட்டத்துக்கு நாங்கள் மதிப்பளிக்க வேண்டும். இந்த ஒரு போட்டியில் கிடைத்த வெற்றியால் இந்த உலகமே எனக்கும், இந்திய அணிக்கும் முடிந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை.

நாங்கள் எங்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. வெற்றிக்குத் தகுதியானவர்கள் பாகிஸ்தான் அணியினர், எங்களைவிட அவர்கள் அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டார்கள். பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு தொடக்கத்திலேயே 3 விக்கெட்டை வீழ்த்தினர். 20 ரன்களுக்கு நாங்கள் 3 விக்கெட்டை இழந்தது சரியான தொடக்கம் அல்ல. நாங்கள் பந்துவீசும்போது விரைவாக விக்கெட் வீழ்த்த திட்டமிட்டோம் முடியவில்லை.

இந்த ஆட்டம் போட்டித் தொடரின் முதல் ஆட்டமேத் தவிர கடைசி ஆட்டம் கிடையாது”

இவ்வாறு கோலி தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x