Published : 25 Oct 2021 03:07 AM
Last Updated : 25 Oct 2021 03:07 AM

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் 6 மாதங்களுக்கு பின் தங்கத்தேர் வீதியுலா

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் நேற்று நடைபெற்ற தங்கத்தேர் வீதியுலா.

தூத்துக்குடி

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் நேற்று முதல் தங்கத்தேர் வீதியுலா தொடங்கியுள்ளது.

கரோனா பரவல் காரணமாக அரசு உத்தரவுப்படி கோயில்களில் தங்கத்தேர் வீதியுலா நடைபெறவில்லை. தற்போது கரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில், கோயில்களில் தங்கத்தேர் வீதியுலா நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் 6 மாதங்களுக்கு பின் நேற்று தங்கத்தேர் வீதியுலா தொடங்கியது. இக்கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதனைத் தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தங்கத்தேரில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார்.

மாலை 5.30 மணிக்கு கோயில் இணை ஆணையர் அன்புமணி, கோயில் அலுவலக கண்காணிப்பாளர் கோமதி, உள்துறை கண்காணிப்பாளர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோயில் பணியாளர்கள் தங்கத்தேர் இழுத்தனர். தங்கத்தேர் கிரிபிரகாரம் வலம் வந்து மீண்டும் 6.15 மணிக்கு நிலைக்கு வந்தது.

இன்று (அக்.25) பக்தர்கள் பணம் செலுத்தி வழக்கம்போல தங்கத்தேர் இழுக்கலாம். இதற்காக பக்தர்களிடம் ரூ.2,500 கட்டணமாக வசூலிக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோயிலில் பொது தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள், அமர்ந்து செல்லும் வகையில் பக்தர்கள் காத்திருப்பு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இருக்கை வசதி, எல்இடி டிவி, மின்விசிறி , குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காத்திருப்பு கூடம் நேற்று அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x