Last Updated : 23 Oct, 2021 12:32 PM

 

Published : 23 Oct 2021 12:32 PM
Last Updated : 23 Oct 2021 12:32 PM

ராகுல் திராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராகப் போகிறார் என்பது நாளேடுகளைப் பார்த்துதான் எனக்கே தெரியும்: கங்குலி கலகலப்பு

பிசிசிஐ தலைவர் கங்குலி, என்சிஏ இயக்குநர் ராகுல் திராவிட் | கோப்புப்படம்

புதுடெல்லி

இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் திராவிட் நியமிக்கப்படப் போகிறார் என்பது நாளேடுகளில் வந்த செய்தியைப் பார்த்துதான் எனக்கே தெரியும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

தனியார் சேனல் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பங்கேற்றார். அப்போது அவரிடம் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக ரவி சாஸ்திரிக்குப் பின் ராகுல் திராவிட் நியமிக்கப்படப்போவதாகத் தகவல் எழுந்துள்ளதே என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கங்குலி அளித்த பதிலில், “ராகுல் திராவிட் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக இருக்கிறார். அவர்தான் அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்திய கிரிக்கெட்டுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதில் என்சிஏவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்பதாக நாங்கள் நம்புகிறோம். என்சிஏ அமைப்பு அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களை உருவாக்குகிறது.

இதுபற்றிப் பேசத்தான் ராகுல் திராவிட் துபாய் வந்திருந்தார். என்சிஏ குறித்தும், எதிர்காலம் குறித்தும் நானும், திராவிட்டும் பேசினோம். நானும், திராவிட்டும் ஏராளமாக விளையாடி இருக்கிறோம். ஆனால், ஒருமுறை கூடப் பயிற்சியாளராக திராவிட் வருவதற்கு விருப்பம் இருப்பதாகக் கூறவில்லை. குறிப்பாக சீனியர் அணிக்குப் பயிற்சியாளராக திராவிட் விரும்புவதாகத் தெரியவில்லை.

என்சிஏவில் எந்த நிலையில் இருக்கிறாரோ அதைத் தொடரவே அவர் விரும்புகிறார். கால அவகாசம் கேட்டுள்ளார், பார்க்கலாம்.

ஆனால், ராகுல் திராவிட் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் போகிறார், ரவி சாஸ்திரிக்குப் பின் திராவிட் தலைமை ஏற்கப்போகிறார் என்று நாளேடுகளைப் பார்த்த பின்புதான் எனக்கே தெரியும்” என்று கங்குலி தெரிவித்தார்.

இந்திய அணிக்கு ஆலோசராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் உள்ள பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும் தோனிக்கும் ஏதேனும் உரசல் வருமா என்று கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கங்குலி பதில் அளிக்கையில், “மகேந்திர சிங் தோனி தன்னுடைய பணி என்ன என்பதை அறிந்தவர். நானும், ஜெய் ஷாவும் நீண்டகாலம் ஆலோசித்து இந்த முடிவை எடுத்தோம். இன்னும் தோனி கிரிக்கெட் போட்டித் தொடரை விட்டு விலகவில்லை. நீண்ட காலமாக அதில் இருக்கிறார். 3 உலகக் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் தோனி. ஆதலால், அவரை அணிக்கு ஆலோசகராக நியமிப்பது நிச்சயம் பலன் அளிக்கும் என்று கருதினோம். இதில் தவறு ஏதும் இல்லை.

ரவி சாஸ்திரிக்கும், தோனிக்கும் எந்தவிதத்திலும் மோதல், உரசல் வராது. தோனி கூல் மனிதர், முதிர்ச்சியானவர். எங்கு நிறுத்த வேண்டும், எங்கு தொடங்க வேண்டும் என்பது தெரியும். தோனி அணிக்குள் செல்லும் முன் அனைத்தும் ஆலோசிக்கப்பட்டன'' என்று கங்குலி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x