Published : 23 Oct 2021 10:34 AM
Last Updated : 23 Oct 2021 10:34 AM

விராட் கோலியும் மனிதர்தான்; எந்திரம் அல்ல; பழைய கோலி திரும்பி வருவார்: கங்குலி நம்பிக்கை

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கேப்டன்ஷிப்பை விட்டு விலகியதற்கு பிசிசிஐ காரணம் இல்லை. பிசிசிஐ எந்த அழுத்தமும் தரவில்லை. அது அவரின் சொந்த முடிவு என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பி்ல், டி20 உலகக் கோப்பை போட்டி முடிந்தபின், டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுகிறேன் எனத் தெரிவித்தார்.

விராட் கோலி தலைமையில் இந்திய அணி பல்வேறு ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்களை வென்றிருந்தாலும், ஐசிசி சார்பில் எந்தக் கோப்பையையும் வெல்ல முடியவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. அதனால் பிசிசிஐ அளித்த அழுத்தத்தால் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியிருக்கலாம் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் தனியார் சேனல் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பங்கேற்றார். அப்போது அவரிடம் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியதற்கு பிசிசிஐ காரணமா எனக் கேட்கப்பட்டது.

அதற்கு கங்குலி அளித்த பதிலில், “விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியதில் எந்தவிதமான அதிர்ச்சியும், வியப்பும் இல்லை. இங்கிலாந்து தொடர் முடிந்த பின்பிருந்தே இதுபற்றிப் பேசப்பட்டது. அவர் அப்போதே இந்த முடிவு குறித்துப் பேசிவிட்டார்.

ஆனால், இதுவரை பிசிசிஐ சார்பில் எந்தவிதமான அழுத்தமோ அல்லது நெருக்கடியோ விராட் கோலிக்குக் கொடுக்கவில்லை. நாங்களும் பதவி விலகல் குறித்து ஏதும் பேசவில்லை. யாரையும் பிசிசிஐ எந்த நெருக்கடிக்கும் ஆளாக்காது. நானும் ஒரு வீரராக இருந்திருக்கிறேன், இதுபோன்று ஒருபோதும் செய்யமாட்டேன்.

முன்பிருந்ததைவிட அதிகமான போட்டித் தொடர்களில் விளையாடுகிறார்கள். இதில் 3 பிரிவுகளுக்கும் ஒரு வீரர் கேப்டனாகத் தொடர்வது கடினமானது. நானும் 5 ஆண்டுகள் கேப்டனாக இருந்திருக்கிறேன்.

வெளியிலிருந்து பார்ப்போருக்கு தேசிய அணியை வழிநடத்திச் செல்கிறோம் எனத் தெரியும். ஏராளமான புகழ், மரியாதை கிடைக்கும். ஆனால், உள்ளார்ந்து பார்த்தால், கேப்டனுக்கு ஏராளமான மன அழுத்தம், உடல்ரீதியான உளைச்சல், பிரச்சினை இருக்கும். இந்தப் பிரச்சினைகள் எனக்கு மட்டுமல்ல, தோனிக்கும் இருந்தது, விராட் கோலிக்கும் இருந்தது. எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக வருவோருக்கும் இந்தச் சிக்கல் ஏற்படும். இது கடினமான பணி.

விராட் கோலி சிறந்த வீரர், நீண்ட காலம் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். ஆனால், ஒவ்வொரு வீரருக்கும் ஃபார்ம் இல்லாத சூழல், மோசமான காலம் வரத்தான் செய்யும். விராட் கோலி 13 ஆண்டுகள் விளையாடியுள்ளார். ஒவ்வொரு சீசனும் ஒரே மாதிரியாக இருக்காது. விராட் கோலியும் மனிதர்தானே, எந்திரம் கிடையாது. ரன்கள் வந்து குவிதற்கு விராட் கோலி எந்திரம் இல்லை, விராட் கோலி மனிதர். அவரும் களத்தில் கால்களை நகர்த்தி, உடலை அசைத்து விளையாட வேண்டுமே.

விராட் கோலிக்கான வரைபடக் கோடு மேலே உயர்ந்து ஒரு காலத்தில் சென்றது. தற்போது கீழே சரிந்துள்ளது. இனிமேல் மீண்டும் மேலே உயரும், பொறுத்திருங்கள். பழைய விராட் கோலியைப் பார்ப்பீர்கள்''.

இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x