Last Updated : 20 Oct, 2021 07:13 AM

 

Published : 20 Oct 2021 07:13 AM
Last Updated : 20 Oct 2021 07:13 AM

தரமான கிரிக்கெட்டை விளையாடமுடியாமல் தடுமாறும் வங்கதேசம்: ஓமனை போராடி வீழ்த்திய வங்கப்புலிகள்: தண்ணிகாட்டிய ஜதிந்தர் சிங்

ஓமன் அணிக்கு எதிராக விக்கெட் வீழ்த்தியமகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட வங்கதேச வீரர் சஹிப்அல் ஹசன் | படம் உதவி ட்விட்டர்

அல் அமீரத்


சஹிப் அல்ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மானின் பந்துவீச்சு, முகமது நயிமின் அரைசதம் ஆகியவற்றால், அல் அமீரத்தில் நேற்று நடந்த டி20உலகக் கோப்பைக்கான பி பிரிவு தகுதிச்சுற்றில் ஓமன் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது வங்கதேசம்.

முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 154 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஓமன்20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் சேர்த்து 26 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றி மூலம் வங்கதேச அணி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்த நிலையில் இந்தப் போட்டியிலும் ஓமனை கடும் போராட்டத்துக்குப் பின்புதான் வென்றுள்ளது.

வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் சஹிப் அல் ஹசன் 42 ரன்களும், பந்துவீ்ச்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதையடுத்து, ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

வங்கதேசத்தைப் பொறுத்தவரை தங்கள் நாட்டில் தரமற்ற, எதற்கும் உதவாத ஆடுகளத்தை அமைத்துவிட்டு ஜாம்பவான் அணிகளான ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளை டி20 போட்டிகளில் வென்று மார்தட்டியது. அப்போது உலக கிரிக்கெட் விமர்சகர்கள், வங்கதேசத்தின் ஆடுகளத்தை கடுமையாக விமர்சித்தனர்.

இதுபோன்ற ஆடுகளத்தை எதற்காக அமைக்கிறார்கள், யாருக்கு என்ன பயன், உலகக் கோப்பைக்கு இந்த ஆடுகளத்தின் மூலம் பயிற்சி பெற முடியுமா என்று வங்கதேச அணி முன் விமர்சனம் வைத்தனர். மிகவும் மட்டமான ஆடுகளத்தில் ஆஸ்திரேலியாவையும், நியூஸிலாந்தையும் தங்கள் நாட்டில் வைத்து வீழ்த்தினோம் என்று மட்டுமே வங்கதேசத்தால் பெருமைப்பட்டுக்கொள்ள முடியும்.

ஆனால், பொதுவான இடத்தில் நடக்கும் போட்டியில், ஐசிசி சார்பி்ல் நடக்கும் ஆட்டத்தில் அமைக்கப்படும் ஆடுகளத்தில் வங்கதேச அணியால் தரமான கிரிக்கெட்டை விளையாட முடியாது என்பது முதலாவது ஆட்டத்திலேயே ஸ்காட்லாந்திடம் தோல்வி அடைந்தபோதே வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

தரமான ஆடுகளத்தை அமைத்து நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவை அழைத்து டி20 போட்டியை நடத்தியிருந்தால், உள்நாட்டில் தொடரை இழந்த அவப்பெயரை வங்கதேசம் பெற்றிருக்கும். அந்த அவமானத்தை தவிர்க்கவே தங்களுக்குச் சாதகமான ஆடுகளத்தை அமைத்தார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒருபோட்டியில்கூட 150 ரன்களை எட்டவில்லை என்றால் ஆடுகளத்தின் தரத்தை அறியலாம்.

இதுபோன்ற ஆடுகளத்தில் கிரிக்கெட் ஆடியதால்தான் ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளைக் கூட வீழ்த்த முடியாமல் வங்கதேசம் திணறுகிறது.

வங்கதேசத்தின் வெற்றி நேற்றைய ஆட்டத்திலும் 13வது ஓவர் வரை நிச்சயமற்றதாகவே இருந்தது. ஓமன் அணியின் ஜதிந்தர் சிங் களத்தில் இருந்தவரை ஓமனைவெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார். ஆனால் ஜதிந்தர் சிங் ஆட்டமிழந்தபின் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது.

சஹிப் அல்ஹசன் வீசிய 17வது ஓவரில் 2 விக்கெட்டுகளும், முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய 18-வது ஓவரில் 2 விக்கெட்டுகளும் வீழ்ந்ததையடுத்து, ஆட்டம் வங்கதேசம் பக்கம் திரும்பியது.

வங்தேசத்தின் பந்துவீச்சும் பெரிதாக அச்ச்சுறுத்தும் வகையில் இல்லை. ஐபிஎல் ஆடி அனுபவம் உடைய முஸ்தபிசுர் ரஹ்மான் 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சஹிப் அல்ஹசன் 4ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.முகமது சயிபுதீன், மெஹதி ஹசன் இருவரும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர்.

மற்ற வகையில் சர்வதேச போட்டிகள் விளையாடி ஏராளமான அனுபவம் வைத்திருக்கும் வங்கதேசம் அணிக்கு இந்த வெற்றி எளிதாகக் கிைடக்கவில்லை, எளிதாகவும் அடைவதற்கான வழிகளையும் உருவாக்கவில்லை.

வங்கதேச அணியில் ஆறுதலான விஷயம் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது நயிம் 64 ரன்கள்(4சிக்ஸர்,3பவுண்டரி) சேர்த்ததும், சஹிப் அல் ஹசன் 42 ரன்கள் சேர்த்ததுமாகும். கேப்டன் மகமதுல்லா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த 3 பேட்ஸ்மேன்களைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

தரமற்ற ஆடுகளத்தில் சர்வதேச கிரிக்கெட் என்ற பெயரில் தரமற்ற கிரிக்கெட்டை விளையாடியதால்தான் ஓமன் போன்ற கத்துக்குட்டி அணியின் பந்துவீச்சைக் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் 153 ரன்களுக்கு வங்கதேசம் வீழ்ந்தது.

தரமான கிரிக்கெட்டை விளையாடிப் பழகியிருந்தால், நேர்மையான ஆடுகளங்களில் விளையாடி இருந்தால், பேட்ஸ்மேன்களுக்கும் நிலைத்தன்மை ஏற்பட்டிருக்கும், பந்துவீச்சாளர்களின் திறமையும் மெருகேரியிருக்கும். இந்த இரண்டுமே வங்கதேசத்திடம் இல்லை.

ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 101 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வலுவாகத்தான் இருந்தது. சஹிப் அல்ஹசன், நயிம் இருவரும் 80 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர். இருவரும் ஆட்டமிழந்தபின், அடுத்துவந்த பேட்ஸ்மேன்கள் அதைப் பயன்படுத்த தவறினர். அடுத்த 52 ரன்களுக்குள் மீதமிருந்த 8 விக்கெட்டுகளையும் வங்கதேசம் இழந்தது. ஓரளவுக்கு நிலைத்து நடுவரிசை பேட்ஸ்மேன்கள் பேட் செய்திருந்தால், கூடுதலாக 25 ரன்கள் சேர்த்திருக்க முடியும்.

ஓமன் தரப்பில் வேகப்பந்துவீச்சாளர்கள் பிலால்கான் அருமையாகப் பந்துவீசி 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பியாஸ் பட் 4 ஓவர்கள் வீசி30 ரன்கள் கொடுத்து 3 வி்க்கெட்டுகளை சாய்த்தார். கலிமுல்லா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

154 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடதான் ஓமன் அணி களமிறங்கியது. தொடக்கவீரர் இலியாஸ் 6 ரன்னில் முஸ்தபிசுர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு ஜதிந்தர் சிங், பிரஜாபதி இருவரும் அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினர்.

பிரஜாபதி 21 ரன்னிலும், அடுத்துவந்த கேப்டன் மசூத் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால், ஜதிந்தர் சிங் நிதானமாக ஆடி வங்கதேசத்தின் பந்துவீச்சாளர்களுக்கு தண்ணிகாட்டினார். இவரை ஆட்டமிழக்கச் செய்ய கடுமையாகப் போராடியும் முடியவில்லை. ஓமன் அணி ரன்ரேட்டை 8 ரன்களுக்கு குறையவிடாமல் கொண்டு சென்றனர்.

சஹிப் அல்ஹசன் வீசிய 13-வது ஓவரில் ஜதிந்தர் சிங் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின்புதான் ஆட்டம் வங்கதேசத்தின் கரங்களுக்குள் சென்றது.

சஹிப் அல்ஹசன் வீசிய 17வது ஓவரில் 2 விக்கெட்டுகளும், முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய 18-வது ஓவரில் 2 விக்கெட்டுகளும் வீழ்ந்ததையடுத்து, ஆட்டம் வங்கதேசம் பக்கம் திரும்பியது. 90 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த ஓமன் அணி அடுத்த 22 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டு்களை இழந்து தடுமாறியது. முகமது நதீம் 14 ரன்களிலும், பிலால்கான் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x