Published : 15 Mar 2016 04:00 PM
Last Updated : 15 Mar 2016 04:00 PM
ரசிகர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக ஒரு ‘பாசிட்டிவ் மெசேஜ்’ என்பதாகவே நான் அவ்வாறு கூறினேன் என்று ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை விட பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவில்தான் அதிகம் அன்பு காட்டப்படுகிறது என்று அப்ரிடி கூறியதையடுத்து பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மூத்த வழக்கறிஞர் ஒருவர் நோட்டீஸ் வரை சென்றார். முன்னாள் வீரர் ஜாவேத் மியாண்டட் “ஷேம் ஆன் யூ” என்று சாடினார்.
இந்நிலையில் அப்ரிடி இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக, “நான் பாகிஸ்தான் அணியின் கேப்டன் மட்டுமல்ல, நான் இங்கு அனைத்து பாகிஸ்தானிய மக்களின் பிரதிநிதியாகவே இருக்கிறேன். என்னுடைய கூற்றை நேர்மறையாக எடுத்துக் கொள்பவர்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள் நான் பாகிஸ்தான் ரசிகர்களை விட மற்ற எந்த ரசிகர்களும் சிறந்தவர்கள் என்று நான் கூறவில்லை என்பதை. என்னுடைய ஒட்டுமொத்த அடையாளமும் பாகிஸ்தான் கொடுத்ததே.
நிருபர் ஒருவர் கேள்வி ஒன்றைக் கேட்டார், அவரது கேள்விக்கு நான் நேர்மறையாக பதில் அளிக்க வேண்டும், எனவே, நான் என்ன கூறினாலும் அது உலகம் முழுதும் எதிரொலிக்கும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். எனவே இந்தியாவில் விளையாடும் போது நாங்கள் உண்மையில் மகிழ்ச்சியாக விளையாடுகிறோம் என்ற பாசிட்டிவ் மெசேஜை அளிக்க முயற்சி செய்தேன்.
வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இன்சமாம் உல் ஹக் ஆகியோரும் இங்கு அதிகம் மதிக்கப்படுகின்றனர் என்பதை தெரிவித்தேயிருப்பார்கள் ஏனெனில் கிரிக்கெட் இங்கு ஒரு வழிபாட்டு பொருளாகவே உள்ளது. இம்ரானையும் வேண்டுமானால் கேளுங்கள், கிரிக்கெட் என்பது இங்கு ஒரு மதம்” என்றார்.
புதன்கிழமை (நாளை) வங்கதேசத்துக்கு எதிராக தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் மோதுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT