Last Updated : 16 Oct, 2021 09:04 AM

 

Published : 16 Oct 2021 09:04 AM
Last Updated : 16 Oct 2021 09:04 AM

நான் விளையாடுவது பிசிசிஐ முடிவில் இருக்கு; சிஎஸ்கே நிர்வாகம் பாதிக்கப்படக்கூடாது: மீண்டும் குழப்பிய தோனி

சிஎஸ்கே கேப்டன் தோனி | படம் உதவி ட்விட்டர்

துபாய்


2022்ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் நான் விளையாடுவது என்பது பிசிசிஐ முடிவில் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு எது சிறந்ததோ அந்த முடிவை எடுப்போம், அணி நிர்வாகம் பாதிக்கப்படக்கூடாது என்று சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்தார்.

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த 2018ம் ஆண்டுக்குப்பின் மீண்டும் கோப்பையை வென்று 4-வது முறையாக சாம்பியன்பட்டத்தை சிஎஸ்கே வென்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் முதல்முறையாக 300 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து அணியை வழிநடத்திய முதல் வீரர் எனும் சிறப்பை தோனி பெற்றார். கடந்த ஆண்டு ப்ளே ஆஃப் சுற்றுக்குகூட தகுதி பெறாமல் வெளியேறிய சிஎஸ்கே அணி இந்த முறை வலுவாக களமிறங்கி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

இப்போது அனைத்து சிஎஸ்கே ரசிகர்கள் மனதிலும் எழுந்துள்ள கேள்வி, அடுத்த 2022ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா என்பதுதான். தன்னுடைய பிரியாவிடை போட்டி சென்னையில்தான் நடக்க வேண்டும் என்று தோனி ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இருப்பினும் அணியின் முடிவு, மேலும், மஞ்சள் ஆடை அணிந்தாலும் நான் களத்தில் இருப்பேனா என்பது எனக்குத் தெரியாது என தோனி புதிராகப் பேசினார். இதனால் அடுத்த சீசனிலும் தோனி களமிறங்குவாரா அல்லது மென்ட்டராக இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து போட்டி முடிந்தபின் சிஎஸ்கே கேப்டன் தோனி அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் ஏற்கெனவே உங்களிடம் தெரிவித்துவிட்டேன். அடுத்த ஆண்டு சீசனுக்கு இரு அணிகள் புதிதாக வருகின்றன. ஆதலால், சிஎஸ்கே அணிக்கு எது சிறந்ததாக இருக்கிறதோ அந்த முடிவை எடுப்போம். எந்தக் காரணத்தினாலும் நிர்வாகம் பாதிக்கப்படக்கூடாது.

தக்கவைக்கப்படும் 4 வீரர்களில் நான் இருப்பேனா என்பது தெரியாது. வலிமையான வீரர்களைக் கொண்ட அணி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அணி நிர்வாகம் பாதிக்கப்படக்கூடாது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணிக்கு சிறப்பாகப் பங்களிப்பு செய்யக்கூடிய வலிமையான அணியை உருவாக்க வேண்டும்.

நான் சிஎஸ்கே அணியைப் பற்றி பேசும்முந் கொல்கத்தா அணியைப் பற்றி பேசுவது அவசியம். எந்த அணியாவது ஐபிஎல் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தால், எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதில் முட்டி, மோதி வர வேண்டும் அதற்கு உதாரணமாக இருப்பது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான். அந்த அணியின் பயிற்சியாளர்கள், அணி வீரர்கள், சப்போர்ட் ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். முதல் சுற்று ஐபிஎல் இடைவெளி அவர்களுக்கு நன்கு உதவியிருக்கிறது

இப்போது சிஎஸ்கே அணிக்கு வருகிறேன். நாங்கள் வீரர்களை மாற்றியமைத்தோம். சில போட்டிகளின் வெற்றிக்குப்பின் எங்களுக்கு மேட்ச் வின்னர்கள் கிடைத்தார்கள். ஒவ்வொரு இறுதிப் போட்டியும் சிறப்பானது, புள்ளிவிவரங்களைப் பார்த்தால், லீக் சுற்றிலிருந்து சிறப்பாக ஆடிய அணிகள், நிலைத்தன்மையுடன் ஆடிய அணிகள் கோட்டைவிட்டுள்ளன.

எங்களைப் பொருத்தவரை நாங்கள் அதிகமாக மீட்டிங் போடவில்லை, ஆலோசிக்கவில்லை. பயிற்சியின் போது நாங்கள் என்ன பேசுகிறோமோ அதுதான் எங்களின் மீட்டிங்காகஇருந்தது. ஓய்வறையில் பேசும் விஷயங்கள் வீரர்களுக்கு வித்தியாசமான அழுதத்தை அளிக்கும் என்பதால் முறைப்படியான மீட்டிங் போடமாட்டோம்.

எங்களின் பயிற்சிகள் சிறப்பாகவே இருந்துள்ளன. எங்கு நாங்கள் விளையாடினாலும் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி. தென் ஆப்பிரி்க்காவில் விளையாடியபோதும் சிஎஸ்கே ரசிகர்கள் வந்து ஆதரவு தெரிவித்தார்கள். இதைத்தான் நாங்கள் பெற்றிருக்கிறோம். அனைவருக்கும் நன்றி, நாங்கள் துபாயில் விளையாடினாலும் சென்னையில் விளையாடியதைப் போல் உணர்கிறோம். சென்னை ரசிகர்களுக்காக விரைவில் சென்னை வருவோம் என்றுநம்புகிறேன்

இவ்வாறு தோனி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x