Last Updated : 16 Oct, 2021 07:46 AM

 

Published : 16 Oct 2021 07:46 AM
Last Updated : 16 Oct 2021 07:46 AM

சொன்னதை நிரூபிச்சுட்டாங்க:4-வது முறையாக சிஎஸ்கே சாம்பியன்: 34 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்; நிலைகுலைந்த கொல்கத்தா தோல்வி

ஐபிஎல் டி20 தொடரில் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி | படம் உதவி ட்விட்டர்

துபாய்


"வலுவாகத் திரும்பிவருவோம்"- என்று கடந்த முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு கூட முதல்மமுறையாகத் தகுதிபெறாமல் சிஎஸ்கே வெளியேறியபோது கேப்டன் தோனி வருத்தத்தோடு கூறியவை. ஆனால், அவர் சொன்ன வார்த்ைகளை நேற்று நிரூபித்துவிட்டார்.

ஆம், 14-வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று, வலுவாகத் திரும்பிவந்துட்டோம் என்று ரசிகர்களிடம் தங்களை நிரூபித்துள்ளது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது 4-வது பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

டூப்பிளசிஸ், கெய்ட்வாட் ஆட்டம், பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலி்ல் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களி்ல் 3 விக்கெட் இழப்புக்கு 192ரன்கள் குவித்தது. 193 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்து 27 ரன்களில் தோல்வி அடைந்தது.

சிஎஸ்கே அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்த டூப்பிளசிஸ்(86) ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வளர்ந்து வரும் வீரருக்கான விருது 635 ரன்கள் சேர்த்த சிஎஸ்கே தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வழங்கப்பட்டது. ஃபேர் ப்ளை விருது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது.

சிறந்த கேட்ச் பிடித்தவருக்கான விருத பஞ்சாப் கிங்ஸ் வீரர் ரவி பிஷ்னாய்க்கு வழங்கப்பட்டது.

இந்த சீசனிந் கேம் சேஞ்சர் விருதையும், அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் தொப்பியையும் ஆர்சிபி வீரர் ஹர்ஸல் பட்டேல் பெற்றார். அதுமட்டுமல்லாமல் இந்த சீசனின் மதிப்பு மிக்க வீரருக்கான விருதும் ஹர்சல் படேலுக்கு வழங்கப்பட்டது.

இந்த சீசனில் 635 ரன்கள் குவித்த சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆரஞ்சு தொப்பியை வென்றார். கடந்த சீசனில் அறிமுகமாகி, இந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியை கெய்க்வாட் வென்றிருக்கிறார்.

ஐபிஎல் 14-வது சீசனில் கோப்பையை வென்ற சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனியிடம் ரூ.20 கோடிக்கான காசோலோ பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வழங்கினார்.

சிஎஸ்கே அணியைப் பொருத்தவரை வலுவாகத் திரும்பிவருவோம் என்று கூறிவிட்டு அதேபோல வந்து தங்களை நிரூபித்துள்ளது. கடந்த முறை இருந்த அணியில் பெரிய அளவில் மாற்றங்களைச் செய்யாமல் உத்தப்பா இன்னும் சில இளம் வீரர்கள்எடுக்கப்பட்டனர். இதில் உத்தப்பா தன்னை ஏலம் எடுத்தது சரி என்ற ரீதியில் முதல் தகுதித்சுற்றிலும், பைனலிலும் தன்னுடைய இருப்பை வெளிப்படுத்திவிட்டார்.

மற்றவகையில் எந்த வீரர்களையும் மாற்றாமல் வந்து சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்டது வீழ்ச்சிஅல்ல, சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்ட சறுக்கல்தான். நாங்கள்தான் சாம்பியன்ஷிப்புக்கு தகுதியானவர்கள் என்பதை தோனி படை நிரூபித்துள்ளது.

பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்துப் பிரிவுகளிலும் சிஎஸ்கே அணி தங்களை சாம்பியன் பட்டம் வெல்வதற்கு தயார் செய்ததது. சிஎஸ்கே அணியில் ஒருவீரராக தோனி பெரிய அளவில் இந்த சீசனில் பங்களிப்பு செய்யவில்லை என்றாலும், அணியை திறமையாக வழிநடத்தி கோப்பையைப் ெபற்றுக்கொடுத்து தன்னை வெற்றிக் கேப்டனாக தோனி மீண்டும் நிரூபித்துள்ளார். தன்னுடைய 300-வது டி20 போட்டியில் இந்த வெற்றி தோனிக்கு மறக்க முடியாத பரிசாக அமைந்துள்ளது.

இந்த சீசனில் இளம் வீரர்கள் பலர் உருவாகி, மெருகேறி இருந்தாலும், சிலர் அனைவரையும் கவனிக்கவைத்தனர். அதில் குறிப்பாக வெங்கடேஷ் ஐயர், ஷிவம் மாவி, ருதுராஜ் கெய்க்வாட், வருண் சக்ரவர்த்தி போன்றோர் இந்திய அணிக்காக அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இந்திய அணியில் இவர்கள் நிரந்திரமான இடத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை இந்தியாவில் நடந்த ஐபிஎல் முதல் சுற்று ஆட்டத்தில் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றியை போராடிப் பெற்றனர், பல போட்டிகளில் வெற்றியை கோட்டைவிட்டனர். ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் வந்தபின் கொல்கத்தா அணியின் அணுகுமுறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது.

கொல்கத்தா அணி அக்ரஷிவ் ஆட்டத்தைக் கையில் எடுத்து விளையாடத் தொடங்கினர். அணியில் உள்ள கடைசி வீரர் வரை களத்தில் இருக்கும் முறை காட்டடி அடிப்போம், ரன்வந்தால் வரட்டும், விக்கெட் போனால் போகட்டும் என்ற ரீதியில் விளையாடியதற்கு பைனல் வரை வருவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.

7 ஆண்டுகளுக்குப்பின் இறுதிப்போட்டி வரை முன்னேறிய கொல்கத்தா அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் லீக் ஆட்டங்களிலும், குவாலிஃபயர் ஆட்டங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு, பைனலில் கோட்டைவிட்டது.

இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரை கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கல் வெங்கடேஷ், கில் இருவர் மட்டுமே நிலைத்து ஆடி நம்பிக்கையை ஏற்படுத்தினர். இருவரும் தொடக்கத்தில் அடித்த அதிரடி ஆட்டத்தைப் பார்த்து சிஎஸ்கே அணியினருக்கு சற்று கலக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் சேர்த்தது கொல்கத்தா அணி.

வெங்கடேஷ் 31 பந்துகளில் அரைசதத்தையும், கில் 40 பந்துகளில் அரைசதத்தையும் எட்டினர். 91 ரன்கள் வரை கொல்கத்தா அணி விக்கெட்டை இழக்காமல் வலுவாக இருந்தது. தொடக்கத்திலேயே வெங்கடேஷ் ஆட்டமிழந்திருக்க வேண்டும் ஆனால், தோனி கேட்சை தவறவிட்டால் அரைசதம் அடிக்கும் அளவுக்குச் சென்றார். அதேபோல, கில் அடித்த பந்து கேமிராவின் கயிற்றில் பட்டு ராயுடுவிடம் கேட்ச் ஆனது. ஆனால், நடுவர் அதை டெட் பால் என அறிவித்ததால் அதிலிருந்து கில் தப்பினார்.

முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்து இருவரும் பிரிந்தபின் கொல்கத்தா அணியின் சரிவு தொடங்கியது. வெங்கடேஷ் 32பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து(3சிக்ஸர்,5பவுண்டரி) தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த 34 ரன் சேர்ப்பதற்குள் 8 விக்கெட்டுகளை கொல்கத்தா அணி இழந்தது.

அடுத்து வந்த ராணா(0),நரேன்(2), மோர்கன்(4), தினேஷ் கார்த்திக்(9), சஹிப் அல்ஹசன்(0) திரிபாதி(2) கில்(51)என வரிசையாக வெளிேயறினர்.

வேகப்பந்துவீச்சுக்கும் நரேனுக்கும் ஆகாது என்ற தெரிந்து கொண்ட தோனி, நரேன் களமிறங்கியதும் ஹேசல்வுட்டை பந்துவீசச் செய்தார். பவுன்ஸரை தூக்கி அடிக்க முற்பட்ட நரேன்(2) ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஜடேஜா தனது கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் விக்கெட்டையும், சஹிப் அல் ஹசன் விக்கெட்டையும் வீழ்த்தினார். காயம் காரணமாக திரிபாதிதொடக்கத்திலேயே களமிறங்காமல் கடைசி நிலையில் விளையாடியது கொல்கத்தா அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. கேப்டன் இந்தப் போட்டியிலாவது பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரை நம்பி இங்கிலாந்து அணி உலகக கோப்பையில் களமிறங்குகிறது என்ன ஆகப் போகிறதோ தெரியவில்லை.

சிஎஸ்க தரப்பில் தொடக்கத்தில் அனைத்துப் பந்துவீ்ச்சாளர்களும் ரன்களை வாரி வழங்கினர். வெங்கடேஷ், கில் இருவரும் இருக்கும் வரை சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்துக் கட்டினர். ஆனால், தங்களுக்கான சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை மளமளவென எடுக்கத் தொடங்கினர். சிஎஸ்கே தரப்பில் தாக்கூர் 3 வி்க்கெட்டுகளையும், ஹேசல்வுட், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முன்னதாக சிஎஸ்கே அணி முதலில் பேட் செய்தது. கெய்க்வாட், டூப்பிளசிஸ் அருமையான தொடக்கத்தை அளித்தனர். பெர்குஷன், நரேன், வருண் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறக்கவிட்டனர். லீக் ஆட்டங்களில் சிறப்பாகப் பந்துவீசிய பெர்குஷன் இந்தப் போட்டியில் ஸ்டெம்பைவிட்டு விலகி வீசி நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டார். பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி சிஎஸ்கே 50 ரன்கள் சேர்த்தது.

கெய்க்வாட் 32 ரன்னில் நரேன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 61 ரன்கள் சேர்தனர். அடுத்துவந்த உத்தப்பா, டூப்பிளசியுடன் சேர்ந்தார். கடந்த போட்டியிலேயே அதிரடியால் அசத்திய உத்தப்பா, இந்தப் போட்டியிலும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டார்.

3 சிக்ஸர் உள்பட 15 பந்துகளில் 31 ரன்கள் கொடுத்து நரேன் பந்துவீச்சில்உத்தப்பா ஆட்டமிழந்தார். டூப்பிளசி 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். டூப்பிலசிஸ் 2 ரன் சேர்த்திருந்தபோதே ஆட்டமிழந்திருக்க வேண்டும். தினேஷ் கார்த்திக் ஸ்டெம்பிங்கை தவறவிட்டது பெரிய தவறாக முடிந்தது.

2வது விக்கெட்டுக்கு உத்தப்பா, டூப்பிளசி இருவரும் 63 ரன்கள் சேர்த்தனர். 3-வது விக்கெட்டுக்கு வந்த மொயின் அலியும் தன்னுடைய பங்கிற்கு சிக்ஸர்,பவுண்டரி என சாத்தினார். மொயின் அலி 37 ரன்களுடன்(3சிக்ஸர், 2பவுண்டரி) என ஆட்டமிழக்காமல் இருந்தார். டூப்பிளசிஸ் 59 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து(3சிக்ஸர்,7பவுண்டரி) என கடைசிப்பந்தில் ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை அந்த அணியி்ன் பந்துவீச்சாலர்கள் பெர்குஷன், வருண் பந்துவீச்சு நேற்று சுத்தமாக எடுபடவில்லை. பெர்குஷன் 4ஓவர்கள்வீசி 56 ரன்களும், வருண் 4 ஓவர்கள் வீசி 38 ரன்களும், சஹிப் 3ஓவர்கள் வீசி 33 ரன்களும் வாரி வழங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x