Last Updated : 14 Oct, 2021 09:05 AM

 

Published : 14 Oct 2021 09:05 AM
Last Updated : 14 Oct 2021 09:05 AM

சேஸிங்கில் எங்கள் தொடக்கம் எளிதான வெற்றியைக் கொடுக்கும் என நம்பினேன்: மோர்கன் பேட்டி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கன்| படம் உதவி ட்விட்டர்

ஷார்ஜா


டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான சேஸிங்கில் எங்களின் தொடக்கம் எளிதான வெற்றியைக் கொடுக்கும் என நம்பினோம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கன் தெரிவித்தார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் குவாலிஃபயர்-2 ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்குள் சென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது. 136 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்து 3 விக்ெகட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் கடந்த 2014-ம் ஆண்டுக்குப்பின் மீண்டும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. துபாயில் நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் சென்னைசூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது.

கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வெங்கடேஷ் 55 ரன்களும்,கில் 46 ரன்களும் சேர்த்து வலுவான அடித்தளத்தை அமைத்தனர்.123 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை இழந்து வெற்றிக்கு அருகே சென்ற கொல்கத்தா அணி சற்று சறுக்கியது, ஆனால், கடைசி இரு பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டபோது, திராபாதி சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். எளிதாகப் பெற வேண்டிய வெற்றியை கொல்கத்தா அணி கடைசி நேரத்தில் போராடிப் பெற்றது.

இந்தப் போட்டியின் வெற்றிக்குப்பின் கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

சேஸிங்கில் எங்களுக்கு கிடைத்த தொடக்கத்தைப் பார்த்தபோது வெற்றி எளிதாக இருக்கும் என நம்பினோம். வெங்கடேஷ், கில் நல்ல அடித்தளம் அமைத்தனர். பனியின் தாக்கமும் இருந்தது. பல சோதனைகளைக் கடந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளோம்.

டெல்லி கேபிடல்ஸ் அணியும் சிறந்த அணி ,அந்த அணியை வீழ்த்தியது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் அடிக்க வேண்டியநிலையில் இருந்தோம், அது நிச்சயம் டெல்லி அணிக்குத்தான் சாதகமான சூழலைக் கொடுத்தது. ஆனால், திரிபாதி கடைசி நேரத்தில் அடித்த சிக்ஸர் அருமையானது.

இளம் வீரர்கள் தாமாகமுன்வந்து பொறுப்பெடுத்து ஆடுவதும், கருத்துக்களைக் கூறுவதும் நல்ல விஷயம். அதற்கான சூழலை அணியில் உள்ள ஊழியர்கள் உருவாக்கிக் கொடுத்துள்ளனர். வெங்கடேஷைக் கண்டுபிடித்து தொடக்க வீரராக அறிமுகப்படுத்திய பயிற்சியாளர் முடிவு அற்புதமானது. இதே வேகத்தில் செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம், சிஎஸ்கே அணியுடனும் இதே மனப்போக்கில் விளையாட வேண்டும். நிச்சயமாக எதுவேண்டுமானாலும் நடக்கலாம்

இவ்வாறு மோர்கன் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x