Last Updated : 12 Oct, 2021 09:49 AM

 

Published : 12 Oct 2021 09:49 AM
Last Updated : 12 Oct 2021 09:49 AM

நரேன் வெற்றியை எளிதாக்கிவிட்டார்; உலகத்தரமான சுழற்பந்துவீச்சாளர்களுடன் விளையாடுவது எனக்கு கவுரவம்: மோர்கன் புகழாரம்


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றியை சுனில் நரேன் அவரின் அற்புதமான பந்துவீச்சு, தகுந்தநேரத்தில் அடித்த சிக்ஸர்கள் மூலம் வெற்றியை எளிதாக்கிவிட்டார் என்று கேப்டன் மோர்கன் தெரிவித்தார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்தது. 139 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் 2-வது தகுதிச்சுற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் நாளை மோதுகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணி. இதில் வெல்லும் அணி ஃபைனலில் சிஎஸ்கே அணியுடன் கோப்பைக்காக கோதாவில் ஈடுபடும்.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன் மட்டும்தான். சுனில் நரேன் வீழ்த்திய 4 விக்கெட்டுகள், கிறிஸ்டியன் ஓவரில் அவர் அடித்த 3 சிக்ஸர்கள்தான் ஆட்டத்தின் போக்கையே கொல்கத்தா பக்கம் திருப்பியது. 4 விக்கெட்டுகள், 15 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்த சுனில் நரேனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த போட்டியின் வெற்றி குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

எங்களின் வெற்றியை நரேன் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் எளிதாக்கிவிட்டார். சிறப்பாகப் பந்துவீசி தொடர்ந்து விக்ெகட்டுகளை வீழ்த்தினார். தொடக்கத்திலிருந்தே பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாகவே பந்துவீசினர். சேஸிங் செய்யும்போதும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

உலகத் தரம்வாய்ந்த நரேன், வரும், சஹிப் ஆகிய 3 பேருடன் சேர்ந்து விளையாடுவது என்பது கவுரவம். இதை நான் விரும்புகிறேன். இது இன்னும் சிறப்பாகத் தொடர வேண்டும்.

எங்களுடைய பேட்டிங் வரிசை ஆழமானது, பலமானதாக இருக்கிறது. குவாலிஃபயர் 2-ல் இதே ஷார்ஜா மண்ணில் டெல்லி கேபிடல்ஸ் அணியைச் சந்திக்கிறோம். அந்தசூழலுக்கு ஏற்றார்போல் மீண்டும் எங்களை தகவமைத்துக் கொள்வோம், அதைஎதிர்பார்த்திருக்கிறோம்.

நாங்கள் ஐக்கிய அரபு அமீரகம் வந்தபின் எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது, ஆனால், கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒவ்வொருவரையும் வியப்படையவைக்கவே விளையாடுகிறோம். ஒவ்வொருவரும் சிறப்பாக விளையாடவே வந்தார்கள். அதில் நரேன் எப்போதும் கூலாக நடந்துகொள்ளக் கூடியவர். டி20 போட்டியில் நரேன் இன்றைய ஆட்டம் சிறப்பானது. சிறப்பாக ஒரு வீரர் விளையாடினால், நிச்சயம் அந்த அணி வெற்றியை நோக்கி தள்ளப்படும்.
இவ்வாறு மோர்கன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x