Last Updated : 09 Oct, 2021 09:05 AM

 

Published : 09 Oct 2021 09:05 AM
Last Updated : 09 Oct 2021 09:05 AM

கடைசிப்பந்தில் சிக்ஸர்: ஆர்சிபி த்ரில் வெற்றி: 2011ம் ஆண்டை நினைவூட்டிய  பரத்: போராடிய டெல்லிக்கு தோல்வி


பரத், மேக்ஸ்வெலின் பொறுப்பான ஆட்டத்தால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 56வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 14 போட்டிகளில் 9 வெற்றி, 5 தோல்வி என 18 புள்ளிகளுடன் 3 இடம் பெற்று ப்ளே ஆஃப் சுற்றில் களமிறங்குகிறது. 11ம் தேதி நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் ஆர்சிபி அணி மோதுகிறது. கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றியுடன் முடித்து நம்பிக்கையுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் ஆர்சிபி அணி நுழைகிறது.

அதேநேரம், 14 போட்டிகளில் 10 வெற்றி, 4 தோல்விகள் என 20 புள்ளிகளுடன் முலிடத்தை டெல்லி அணி பெற்றுள்ளது. நாளை நடக்கும் முதல் ப்ளே ஆஃப் சுற்றில் சிஎஸ்கே அணியுடன் மோதுகிறது டெல்லி அணி.
52 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வழிகாட்டி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரீகர் பரத் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு துணையாக ஆடிய மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி பெங்களூரில் நடந்த சாம்பியன்ஸ லீ்க் டி20 போட்டியில் சவுத் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆர்சிபி அணி 2 விக்கெட்டில் வென்றது. இந்த ஆட்டத்தில் கடைசிப்பந்தில் 6 ரன்கள் அடிக்க வேண்டியதிருந்தது. ஆர்சிபி விக்கெட் கீப்பர் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்தார். அந்த நினைவலையை இந்த ஆர்சிபி விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் கடைசிப்பந்தில் சிக்ஸர் அடித்து கிளறிவிட்டார்.

ஆர்சிபி அணியின் வெற்றிக்கு மேக்ஸ்வெல், பரத் கூட்டணியையே சேரும். இருவரும் ஜோடி சேரும்போது, 10 ஓவர்களில் 110 ரன்கள் வெற்றி்க்குத் தேவைப்பட்டது. இருவரும் விக்கெட்டை இழக்காமல், ஆட்டத்தை மெல்ல வெற்றிக்கு அழைத்து வந்து கடைசி நேரத்தில் அருமையான ஃபினிஷிங்கை வழங்கினர்.

கடைசி 3 ஓவர்களில் ஆர்சிபி அணி வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. 18ஓவரை வீசிய ஆவேஷ் கான் ஓவரில் மேக்ஸ்வெல், பரத் இருவரும் சேர்ந்து 12 ரன்கள் சேர்த்தனர். நோர்க்கியா வீசிய 19-வது ஓவரில் 4 ரன்கல் மட்டுமே எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை ஆவேஷ் கான் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட மேக்ஸ்வெல் பவுண்டரி அடித்தார், 2-வது பந்தில் ரன்னும், 3-வது பந்தில் லெக்பையும் கிடைத்தது. 4-வது பந்தில்பரத் ரன் ஏதும் எடுக்கவி்ல்லை. 2 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை ஆவேஷ்கான் சற்று ஆஃப்திசையில் விலக்கி வீச அதை தட்டிவிட்டு பரத் 2 ரன்கள் சேர்த்தார். கடைசிப்பந்தை ஆவேஷ் காந் ஃபுல்டாஸாக வீச அதை பரத் சிக்ஸருக்கு தூக்கி அடிக்க ஆர்சிபி வெற்றியுடன் ஆட்டத்தை முடித்தது. பரத், மேக்ஸ்வெல் இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்தனர்.

ஆர்சிபி தொடக்க வீரர்கள் கோலி(4) படிக்கல்(0) இருவரும் நோர்க்கியா பந்துவீச்சில் விரைவாக வீழ்ந்தனர். டிவில்லியர்ஸ் 26 ரன்களில் வெளியேறினார். மற்றவகையில் ஆட்டம் அனைத்தும் மேக்வெல், பரத் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை இந்த சீசன் தொடங்கியது முதல் ஓரளவுக்கு அவ்வப்போது சறுக்கினாலும் அதிலிருந்து மீண்டு எழுந்துள்ளது. அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தூண் டி வில்லியர்ஸ் முதல் சுற்றில் அசுரத்தனமான ஃபார்மில் இருந்து 2-வது சுற்றில் ஃபார்மில் தவித்தது பெரும் பின்னடைவு. அதேநேரம், இந்த சீசன் முழுவதும் மேக்ஸ்வெல் வி்ஸ்வரூமெடுத்து பேட் செய்துவருவது ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய பலமாகும்.

மேக்ஸ்வெல் ஃபார்முக்கு வருவது டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மற்ற அணிகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதையும் மறந்துவிடக்கூடாது. இது தவிர 3-வது இடத்தில் யாரை களமிறக்குவது என கேப்டன் கோலி பலமுறை பல வீரர்களை மாற்றிக் களமிறக்கினார்.

ஷான்பாஸ் அகமது, கிறிஸ்டியன், சில நேரங்களில் டிவில்லியர்ஸ் என பலரையும் களமிறங்கியும் பலன் கிடைக்கவில்லை. ஆனால், ஸ்ரீகர் பரத் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி 3-வது இடத்துக்கான பேட்ஸ்மேன் என்பதை நிரூபி்த்துள்ளர்.

பந்துவீச்சில் ஹர்ஸல் படேல், முகமது சிராஜ் இருவரும் ஆர்சிபிக்கு பலமாக அமைந்தனர். யஜுவேந்திர சஹல் 2-வது சுற்றில் ஃபார்முக்குத் திரும்பியது மிகப்பெரிய ப்ளஸ்பாயின்ட். அவ்வப்போது மேக்ஸ்வெலும் பந்துவீச்சில் உதவியதும் ஆர்சிபி அணிக்கு வலுவாக இருந்தது.

அருமையான கூட்டணியுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் கோலி படை நுழைகிறது, இந்த முறை பட்டத்தை வெல்லாவிட்டால், ஆர்சிபி அணிக்கு 8 ஆண்டுகளாக கேப்டனாக இருந்தும் கோலியால் எந்தப்பயனும் இல்லை. இப்போது இல்லாவிட்டால் எப்போதும் இல்லை என்ற ரீதியில் கோலி படை விளையாடுவது அவசியம்

டெல்லி கேபிடல்ஸ் அணியைப் பொறுத்துவரை பீல்டிங்கில் நேற்று படுமோசமாகச் செயல்பட்டனர். இரு முக்கிய கேட்சுகளை அஸ்வினும், ஸ்ரேயாஸ் அய்யரும் கோட்டைவிட்டது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. கேட்சைத் தவறவிடுவது, ஆட்டத்தின் வெற்றியைத் தவறவிடுவது போன்றது என்று சொல்வா்கள்.

ஆர்சிபி அணியின் முக்கிய வீரர்கள் கோலி, படிக்கல், டிவில்லியர்ஸ் ஆகியோரை விரைவாக வீழ்த்தியபின்பும், டெல்லி கேபிடல்ஸ் அணியால் வெல்ல முடியவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. மேக்ஸ்வெல், பரத் ஜோடி டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சாளர்களுக்கு நிச்சயமாக சவாலான ஆட்டத்தையே அளித்தனர்.

நோர்க்கியா 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து கோலி, படிக்கல் ஆகிய2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்ஸர் படேல் 4 ஓவர்கள் வீசி 39ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அஸ்வினுக்கு ஒரு ஓவர் மட்டுமே வழங்கப்பட்டது அதிலும் 11 ரன்கள் கொடுத்ததால் நிறுத்தப்பட்டது.

டெல்லி அணியில் தொடக்க ஜோடி ஷிகர் தவண், பிரித்வி ஷா நல்ல அடித்தளம் அமைத்து 88 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். பவர்ப்ளேயில் டெல்லி விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் சேர்த்தது. 10 ஓவர்களில் 88 ரன்கள் சேர்்த்தனர். பிரித்வி ஷா(48), தவண்(43) ரன்களில் ஆட்டமிழந்தனர். மற்றவகையில் ரிஷப் பந்த்(10), ஸ்ரேயாஸ்(18), ஹெட்மெயர்(29) ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x