Last Updated : 08 Oct, 2021 07:07 AM

 

Published : 08 Oct 2021 07:07 AM
Last Updated : 08 Oct 2021 07:07 AM

ப்ளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா: அதிசய வெற்றியால் மட்டுமே மும்பைக்கு வாய்ப்பு: ராஜஸ்தானை நசுக்கிய பந்துவீச்சாளர்கள்

கொல்கத்தா அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த வெங்கடேஷ், கில் கூட்டணி | படம் உதவி ட்விட்டர்

ஷார்ஜா


பெர்குஷன், ஷவம் மாவி, வருண் ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 54-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்க்ததா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது . 172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி 16.1 ஓவர்களில்85 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 86 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 14 போட்டிகளில் 7 வெற்றி, 7 தோல்விகளுடன் 14 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் 0.587 ஆக இருக்கிறது. ஏறக்குறைய ப்ளே ஆஃப் சுற்றை கொல்கத்தா அணி உறுதி செய்துவிட்டது என்றாலும் இன்று நடக்கும் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அதை முடிவு செய்யும்.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிரமாண்ட வெற்றி தேவை. அதாவது முதலில் பேட் செய்து மும்பை இந்தியன்ஸ் அணி 250 ரன்கள் குவிக்க வேண்டும், அதன்பின் பந்துவீசி சன்ரைசர்ஸ் அணியை 80 ரன்களில் சுருட்ட வேண்டும்.

இவை நடந்தால் நிகர ரன்ரேட்டில் கொல்கத்தாவை மிஞ்சி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லலாம். ஒருவேளை டாஸில் மும்பை அணி தோற்று சேஸிங் செய்தாலே ப்ளே ஆஃப் சுற்று கொல்கத்தாவுக்கு உறுதியாகிவிடும். எப்படியானாலும் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி முதலில் பேட் செய்து 250 ரன்கள் அடிப்பதை இலக்காக வைத்து பேட் செய்தால் வாயப்பிருக்கிறது. ஏதாவது மாயஜாலம் நடந்தால்தான் இவை நடக்கும்.

ஆனால், ஐபிஎல் டி20 தொடரைப் பொறுத்தவரை இது நடக்கும், நடக்காது என்ற நிச்சயமற்ற தன்மை கொண்டவை என்பதால் இன்றைய போட்டி முடிவில்தான் மும்பையின் நிலைமை தெரியவரும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள்தான் பிரதான காரணமாகும்.

குறிப்பாக பெர்குஷன், ஷிவம் மாவி, வருண் ஆகிய மூவரும் சிறப்பாகப் பந்துவீசினர். ஷார்ஜா ஆடுகளம் மெதுவானது என்பதால் அதற்கு ஏற்றார்போல் ஸ்விங் செய்து, இன்னர்கட், அவுட்ஸ்விங் என சிறப்பாகப் பந்து ராஜஸ்தான் பேட்டிங் வரிசையைக் குலைத்தனர்.

3.1 ஓவர்கள் வீசி 21 ரன்கள் 10 டாட்பந்துகளுடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷிவம் மாவி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். பெர்குஷனும் சிறப்பாகப் பந்தவீசினார், 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் 17 டாட்பந்துகளுடன் 3 விக்கெட்டுகளைச்ச சாய்த்தார். வருண் 4 ஓவர்கள் வீசி 14ரன்கள் 16 டாட்பந்துகளுடன் ஒருவிக்கெட்டை வீழ்த்தினார். ஏறக்குறைய 10 ஓவர்களை கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் டாட்பந்துகளாக வீசினர்.

ஐபிஎல் டி20 2-வது சுற்று தொடங்கியதிலிருந்து ஃபார்ம் இல்லாமல் தவித்து வந்த ஷுப்மான் கில் தொடர்ந்து 2-வது அரைசதத்தை இந்தப் போட்டியில் அடித்து 56 ரன்களில் ஆட்டமிழந்தார். வளர்ந்து வரும் இளம் வீரரான வெங்கடேஷ் 35 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். கொல்கத்தா அணிக்கு நீண்ட காலத்துக்குப்பின் கிடைத்த சிறந்த தொடக்க ஜோடியாக இருவரும் அமைந்துள்ளனர்.

ராகுல் திரிபாதி(21), தினேஷ் கார்த்திக்(14நாட்அவுட்), மோர்கன்(13நாட்அவுட்) ஆகியோரும் சிறந்த பங்களிப்புச் செய்து அணியின் ஸ்கோர் 171 ரன்களை எட்ட உதவினர்.

கடந்த 2 சீசன்களாக இளம் வீரர்கள் மீது செய்த முதலீட்டை எல்லாம் இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அறுவடை செய்து வருகிறது. ஒவ்வொரு விதமான திறமையுடன் இளம் வீரர்கள் அணியில் இருப்பது கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

அதிலும் இந்த சீசனின் முதல் சுற்றில் கொல்கத்தா அணி டிபென்ஷிப் ப்ளே மட்டும் ஆடி வந்ததால், வெற்றிகளைப் பெற போராட வேண்டியிருந்தது. ஆனால், பயிற்சியாளர் மெக்கலத்தின் ஆலோசனைப்படி அட்டாக்கிங் கேம் பிளான் சரியாக வரும் என்று அதை பரிசோதிக்க வெற்றி மேல் வெற்றி கிடைத்துவருகிறது.

இதை இறுகப்பற்றிக் கொண்ட கொல்கத்தா அணி அட்டாக்கிங் கேமை எந்தப் போட்டியிலும் மாற்றாமல் கடைசி வரிசை வீரர்களைவரை எடுத்துச்செல்வது வெற்றிக்கு முக்கியக் காரணமாகும். இந்த சீசனின் 2-வது பகுதியில் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரின் ஸ்ட்ரைக் ரேட்டும் அதிகரித்திருக்கும், அவர்களின் பேட்டிங்கிலும் ஆக்ரோஷம் இருக்கும் என்பதற்கு விளையாட்டு உத்தி மாற்றியதே காரணம்.

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை அடுத்த ஆண்டு சீசன் இந்த அணிக்கு சிறப்பாக அமையட்டும் என்று வாழ்த்துகளை மட்டும்தான் கூற முடியும். ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லவில்லையே எதற்காக வெற்றி பெற வேண்டும், அடுத்த ஆண்டு சீசனில் எந்த அணியில் இருப்போமோ என்ற ரீதியில் பொறுப்பற்ற பேட்டிங்கை தொடக்க வீரர் முதல் கடைசி வரை வெளிப்படுத்தினர். எந்த பேட்ஸ்மேனின் பேட்டிங்கிலும் நிலைத்தன்மையே இல்லை. களத்துக்கு வந்த பெயரளவுக்கு நின்றுவிட்டு செல்ல வேண்டுமென்றே பேட் செய்தது போல் இருந்தது.

ஷார்ஜா ஆடுகளம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால், பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைக்கும், ஆனால், அதை பயன்படுத்த ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் தவறிவிட்டனர்

15 கோடி செலவு செய்து தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை விைலக்கு வாங்கி கையை சுட்டுக்கொண்டதுதான் மிச்சம். முக்கியமான வெளிநாட்டு வீரர்களான பட்லர், ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் போன்றோர் கடைசி நேரத்தில் அணியிலிருந்து விலகியது ராஜஸ்தான் அணிக்கு பெரிய பலவீனம். இருப்பினும் இளம் வீரர்களை வைத்து கேப்டன் சாம்ஸன் சில வெற்றிகளைப் பெற்றார். 2-வது சுற்றுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன், கிளென் பிலிப்ஸ் உள்ளி்ட்டோரும் ஏமாற்றம் அளித்தனர்.

172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ஜெஸ்வால் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று சஹிப் அல்ஹசன் முதல் ஓவரிலேயே க்ளீன் போல்டாகினார். அடுத்துவந்த கேப்டன் சாம்ஸன் ஒரு ரன்னில் மாவி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

பெர்குஷன் வீசிய 4-வது ஓவரின் 2-வது பந்தில் லிவிங்ஸ்டோன் 6 ரன்னிலும் அதே ஓவரில் 4-வது பந்தில் அனுஜ் ராவத் கால்காப்பில் வாங்கியும் வெளியேறினர். 33 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி திணறியது. பவரப்ளேயில் 4 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் மட்டுமே சேர்த்தது ராஜஸ்தான் அணி. மாவி வீசிய 8-வது ஓவரின் 3-வது பந்தில் பிலிப்ஸ் 8 ரன்னில் க்ளீன் போல்டாகினார், கடைசிப்பந்தில் துபே 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.

15 கோடிக்கு வாங்கப்பட்ட கிறிஸ் மோரிஸ் பேட்டிங்கிலும் சொதப்பி வருண் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி டக்அவுட்டில் வெளிேயறினார். உனத் கத்(6), சக்காரியா(1) ரன்னில்ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் அணிக்கு ஆறுதல் அளிக்கும் வித்ததில் ராகுல் திவேட்டி(44) ரன்னில் மாவி பந்துவீ்ச்சில் வெளியேறினார்.
ராஜஸ்தான் அணி 85 ரன்களில் 16.1 ஓவர்களில் ஆட்டமிழந்தது. இதில் திவேட்டியா சேர்த்த 44 ரன்களை கழித்துப் பார்த்தால் 9 பேட்ஸ்மேன்களும் சேர்ந்து 41 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளனர்.

கொல்கத்தா அணியின் பந்தவீச்சு சிறப்பாக இருந்தது என்று எடுத்துக்கொள்வதா அல்லது ராஜஸ்தான் அணியின் பொறுப்பற்ற பேட்டிங் என்று குறைகூறுவதா. வலிமையான சிஎஸ்கே அணிக்கு எதிராக 189 ரன்களை 17 ஓவர்களில் சேஸிங் செய்த ராஜஸ்தான் அணி 172 ரன்களை சேஸிங் செய்யமுடியாமலா போயிருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவும் இதேபோன்று குறைந்த ஸ்கோரில் தோல்வி அடைந்தது, இப்போது, கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்திலும் தொடர்கிறது. (உஷ் கண்டுகாதிங்க)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x