Last Updated : 04 Oct, 2021 11:27 AM

 

Published : 04 Oct 2021 11:27 AM
Last Updated : 04 Oct 2021 11:27 AM

ப்ளேஆஃப் வாய்ப்பு யாருக்கு? சாத்தியங்கள் என்ன? 7 போட்டிகள், ஒரு இடம் 4 அணிகள்  போட்டி: அணிகளிடையே கடும் கோதா

கோப்புப்படம்

துபாய்


14-வது ஐபிஎல் டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு 3 அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில் ஒரு இடத்துக்கு 4 அணிகள் போட்டியிடுகின்றன.

ஓரிடத்துக்கு மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

14-வது ஐபிஎல் சீசனின் 2-வது சுற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 12 லீக் போட்டிகளில் 9 வெற்றிகள், 3 தோல்விகள் என 18 புள்ளிகளுடன் முதல் அணியாக ப்ளே ஆஃப்சுற்றுக்குள் நுழைந்தது.

அடுத்தார்போல் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 12 போட்டிகளில் 9 வெற்றிகள், 3 தோல்விகள் என 18 புள்ளிகளுடன் 2-வது அணியாக ப்ளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இந்நிலையில் ஷார்ஜாவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது.

இதுவரை ஆர்சிபி அணி 12 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளுடன் 3-வது அணியாக ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது.

ப்ளே ஆஃப் சுற்றில் 4 அணிகள் மோத வேண்டியநிலையில் 3 அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில் 4-வது இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்வதில் கடும் போட்டி நிலவுகிறது.

இதில் எந்தெந்த அணிகளுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது என்று பார்க்கலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தற்போது 13 போட்டிகளில் 6 வெற்றி, 7 தோல்வி என 12 புள்ளிகளுடன் உள்ளது. இன்னும் ஒரு போட்டி மட்டுமே உள்ளது. வரும் 7-ம் தேதி நடக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குறைவான ரன்னில் சுருட்டி, அதை குறைந்த ஓவரில் வென்று இந்த உயர்ந்த ரன் ரேட்டை கொல்கத்தா அணி தக்கவைக்க வேண்டும். ஆனால் கடைசி ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோற்றுவிட்டால் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்வது கடினம், அவ்வாறு தோற்றாலும் ரன்ரேட்டை உயர்த அளவில் முடிக்க வேண்டும்.

ஏனென்றால், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இன்னும் 2 லீக் ஆட்டங்கள் உள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் தோல்வி அடையும்பட்சத்தில், கொல்கத்தா அணி நிகர ரன்ரேட் உயர்வாக இருந்தால், ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லலாம். ஆதலால், கொல்கத்தா அணிக்கு ரன்ரேட், வெற்றி முக்கியம்.

பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இ்ன்னும் ஒரு போட்டி மட்டுமே இருக்கிறது. 10 புள்ளிகளுடன் இருக்கும் பஞ்சாப் அணி, வரும் 7-ம் தேதி சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியி்ல் சிஎஸ்கே அணியை மிகப்பெரிய வித்தியாசத்தில் வெல்வது பஞ்சாப் அணிக்கு அவசியம். அதன்பி்ன் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை கூர்ந்து கவனிக்க வேண்டும். பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பு என்பது மற்ற அணிகளின் மோசமான தோல்வியில்தான் இருக்கிறது

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் இரு போட்டிகள் மீதமுள்ளன. கொல்கத்தா அணியுனுடன் ஒரு போட்டியிலும், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நாளை ஒரு போட்டியிலும் ராஜஸ்தான் மோதுகிறது.

இந்த இரு ஆட்டங்களிலும் ராஜஸ்தான் அணி வெல்ல வேண்டும். மும்பை அணியை ராஜஸ்தான் அணி தோற்கடிக்கும் பட்சத்தில் மும்பை அணி தொடரிலிருந்து வெளியேறும். ஒருவேளை ராஜஸ்தான் அணி மும்பையிடம் தோற்றுவிட்டு, கொல்கத்தா அணிக்கு எதிராக வியாழக்கிழமை நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தாவை ராஜஸ்தான் வெல்லும் பட்சத்தில் 3 அணிகளும் தலா 12 புள்ளிகள் என்ற ரீதியில் வரும்.அப்போது, நிகர ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணி செல்ல வாய்ப்புள்ளது. அதைத் தவிர்க்க ராஜஸ்தான் அணி நல்ல ரன்ரேட்டில் வெல்வதும் அவசியம்.

மும்பை இந்தியன்ஸ்
நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது 7வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டும் மைனஸ்-0.453 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்த இரு போட்டிகளிலும் மும்பை அணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரன்ரேட்டை உயர்த்திக்கொண்டால் ப்ளேஆஃப் செல்லலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x