Last Updated : 04 Oct, 2021 08:00 AM

 

Published : 04 Oct 2021 08:00 AM
Last Updated : 04 Oct 2021 08:00 AM

ப்ளே ஆஃப் சுற்றுக்கு 2-வது முறையாக தகுதி பெற்ற ஆர்சிபி: காப்பாற்றிய மேக்ஸ்வெல் , சஹல்

2020ம் ஆண்டைத் தொடர்ந்து இந்த ஐபிஎல் டி20 சீசனிலும் ப்ளே ஆப் சுற்றுக்கு ஆர்சிபி அணி தகுதிபெற்றது. ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது, வீரர்களுக்கு ஊக்கத்தை அளித்து, அச்சமின்றி விளையாடத் துணைபுரியும் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது.

இதுவரை ஆர்சிபி அணி 12 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளுடன் 3-வது அணியாக ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது. இன்னும் இரு போட்டிகள் இருப்பதால், ப்ளே ஆஃப் சுற்றில் எந்த இடம் என்பது வரும் போட்டிகளில் ஆர்சிபி்க்கு முடிவாகும்.

அதேசமயம், பஞ்சாப் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் 5 வெற்றி,8 தோல்விகளுடன்10 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்துவரும் ஒரு போட்டியில் வென்றாலும், ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியாது. இதனால் கணித ரீதியாக போட்டித் தொடரிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது.

ஆர்சிபியின் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் மேக்ஸ்வெல்தான். 33பந்துகளி்ல்4 சிக்ஸர், 3 பவுண்டரிகள் உள்ளிட்ட 57 ரன்கள் சேர்த்த மேக்ஸ்வெலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பந்துவீச்சில் யஜுவந்திர சஹல் வீழ்த்திய 3 விக்கெட்டுகளும் ஆட்டத்துக்கு திருப்புமுனையாக அமைந்தன. அதிலும் அகர்வால், பூரன் விக்கெட் ஆட்டம் ஆர்சிபி கைகளுக்கு வருவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

தொடக்க வரிசையில் படிக்கல்(40), கோலி(25) விரைவாக ஆட்டமிழந்தநிலையில் நடுவரிசையில் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் ஜோடி வலுவான ஸ்கோர் உருவாகக் காரணமாக அமைந்தனர். இந்த சீசன்முழுவதும் ஜொலிக்காத டிவில்லியர்ஸ் 23 ரன்னில் ரன்அவுட் ஆகினார். மற்றவகையில் எந்த வீரரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

கிங்ஸ் பஞ்சாப் தரப்பில் முகமது ஷமி, ஹென்ரிக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கடந்த சில போட்டிகளாக சிறப்பாகப் பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சை மேக்ஸ்வெல் வெளுத்துவாங்கிவிட்டார். அர்ஷ்தீப் 4 ஓவர்களில் 42 ரன்களை வாரி வழங்கினார். ஹென்ரிக்ஸ் அற்புதமாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 12 ரன்கள் கொடுத்து 3 வி்க்கெட்டுகளை வீழ்த்தினார்.

165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. ராகுல், அகர்வால் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ராகுல் 39 ரன்னில் 2சிக்ஸர்,ஒரு பவுண்டரி உள்ளிட்ட சேர்த்து ஆட்டமிழந்தார். பூரன் 3 ரன்னில் இந்த முறையும் ஏமாற்றினார். அதிரடியாக ஆடிய அகர்வால் 42 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து (2சிக்ஸர்,6பவுண்டர்) ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த நடுவரிசை வீரர்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை. மாார்க்ரம்(20), சர்பிராஸ் கான்(0), ஷாருக்கான்(16) என விரைவாக ஆட்டமிழந்தனர். 91 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த பஞ்சாப் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது.

ஹர்சல் படேல் வீசிய ஓவரின் முதல் பந்தில் ஷாருக்கான் 16 ரன்னில் ரன்அவுட் ஆகியவுடன் ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது. அதன்பின்வந்த பிரார் 2 ரன்களும், 3-வதுபந்தில் ஒரு ரன்னும் சேர்த்தார். 4-வது பந்தில் ஹென்ரிக்ஸ் 2 ரன்னும், 5-வது பந்தில் ஒரு சிக்ஸரும் அடித்தார். கடைசிப்பந்தில் ஒரு ரன் மட்டுமே சேர்்க்கவே 6 ரன்னில் பஞ்சாப் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றிக்குப்பின் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி கூறுகையில் “ அற்புதமாக உணர்கிறேன். 2011ம் ஆண்டுக்குப்பின், பல போட்டிகளை மீதம் வைத்து ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதியாகவில்லை. தற்போது 12 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதியாகியுள்ளோம். முதல் இரு இடங்களைப் பிடிக்க இன்னும் இரு போட்டிகள் உள்ளன. இந்த வெற்றி வீரர்களுக்கு நம்பிக்கையையும், அச்சமின்றி விளையாடவும் துணையாக இருக்கும்.

ஸ்கோர்போர்டில் எந்த வீரரும் இல்லாதபோது, அதிகமான ரிஸ்க் எடுக்கலாம்.நானும், படிக்கலும் அப்படித்தான் ஆடினோம். இந்த மைதானத்தில் 15 முதல் 20 ரன்கள் என்பது முக்கியமானது. வெற்றியோ அல்லது தோல்வியோ நாங்கள் எங்களை பட்டைத்தீட்டிக்கொண்டே இருப்போம்.

இந்த ஆடுகளம் மந்தமானது எனத் தெரியும். அகர்வால், ராகுல் சிறப்பாக பேட் செய்தனர், இருவரையும் ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் ஆட்டம்கைக்கு வந்துவிடும் எனத் தெரியும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்குப்பின்சிராஜ் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார். ஹர்ஸல் பந்துவீச்சு அற்புதமாக இருக்கிறது. சஹல், ஷான்பாஸ், கார்டன் சிறப்பான பங்களிப்பு செய்தனர். வீரர்கள் சரியாக அமையாவிட்டால், தொடர் கையைவிட்டு சென்றுவிடும்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x