Last Updated : 01 Oct, 2021 09:39 AM

 

Published : 01 Oct 2021 09:39 AM
Last Updated : 01 Oct 2021 09:39 AM

கடினமான நேரத்திலும் ரசிகர்கள் அளித்த ஆதரவு; சிஎஸ்கே மீண்டு வந்தது மகிழ்ச்சி: தோனி நெகிழ்ச்சி


கடினமான நேரத்திலும், வெற்றியின்போதும் ரசிகர்கள் அளித்த ஆதரவு, அவர்கள் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை மீட்டு மீண்டு சிஎஸ்கே திரும்பி வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 44-வது லீக் ஆட்டத்தி்ல் சன்ரைசர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்த வெற்றியின்மூலம் சிஎஸ்கே அணி 11 போட்டிகளி்ல் 9 வெற்றிகள், 2 தோல்விகள் 18 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்து, ப்ளேஆஃப் சுற்றையும் உறுதி செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் 11-வது முறையாக சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்கிறது.

வலுவாக திரும்பி வருவோம் என்று கடந்த ஐபிஎல் சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் முதல்முறையாக சிஎஸ்கே வெளிேயறியபோது தோனி கூறியவார்த்தைகள் இவை. ஆனால், இந்த சீசனில் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றை சிஎஸ்கே அணி உறுதி செய்து, வலுவாக திரும்பி வந்துள்ளது.
இந்த போட்டியின் வெற்றிக்குப்பின், சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாங்கள் இந்த வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு அதிகமான அர்த்தம் இருக்கிறது. ஏனென்றால் கடந்த ஆண்டு சீசனில், முதல்முறையாக ப்ளே ஆஃப் சூசனுக்குள் செல்லாமல் முதல்முறையாக வெளிேயறினோம். அப்போது அடுத்தமுறை வலுவாக திரும்பி வர வேண்டும் என்று விரும்பினோம். அதற்கு ஏற்றார்போல் வலுவாக திரும்பி வந்துள்ளோம்.

அனைத்துப் போட்டிகளிலும் எப்போதும் உங்களால் வெல்ல முடியாது. கடந்த முறை சீசன் நாங்கள் நினைத்தபடி இல்லை, எங்கள் விருப்பப்படி ஆட்டமும் அமையவில்லை. நாங்கள் செய்த தவறுக்கு எந்தவிதமான காரணமும் நாங்கள் சொல்லவில்லை என்பது முக்கியம். ஆனால் இந்த முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு சென்று நாங்கள் சொன்னதைச் செய்துள்ளோம்.

இந்த வெற்றிக்கு முழுமையாக அணி வீரர்கள்தான்காரணம். அந்த வெற்றிக்கான தருணத்தை தொடர்ந்து வைத்திருந்து, அணிவீரர்கள் கொண்டு சென்றார்கள். கிரிக்கெட்டின் ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்பட்டு, சமநிலையுடன் அனைத்தையும் கொண்டு சென்றார்கள். வீரர்களின் ஆதரவு, ஊழியர்களின் ஆதரவு வெற்றிக்கு முக்கியமானது.

இந்த ஆடுகளத்தில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆனது, குறிப்பாக முழங்கால் அளவுக்கு பந்து எழும்பியது. இதனால் வழக்கமான ஆடுகளத்தைவிட பேட்ஸ்மேன் நேராக அடித்து ஆட வசதியாக இருந்தது.

பந்துவீச்சாளர்களும் பந்தை ஸ்விங் செய்ய முயன்றபோது பந்து கூடுதலாக முன்னோக்கி பிட்ச் ஆனது. பின்னர் பந்துவீச்சாளர்கள் தங்கள் சரி செய்து கொண்டனர். இந்த சூழலை நாம் நமக்குச் சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்று பந்துவீச்சார்களிடம் தெரிவித்தேன். பந்து பிட்ச் ஆனபின் பேட்ஸ்மேன் பேட்டுக்கு தாமதமாகவே வருகிறது என்று தெரிவித்தேன்.

எங்களின் பேட்டிங் வரிசை வலுவானதாக இருக்கிறது. விக்கெட் வீழ்ந்தாலும்கூட எங்கள் வீரர்கள் ஒவ்வொருவரும் ஆக்ரோஷமாகவே ஒவ்வொரு முறையும் பேட் செய்கிறார்கள், ரன்கள் அடிக்க வேண்டும் என நினைப்பில் பேட்செய்கிறார்கள். 2-வது சுழற்பந்துவீச்சாளராக மொயின் அலி இருப்பது கூடுதல்பலம். சமநிலையுடன் அணி இருப்பது சிறப்பாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

ரசிகர்களைப் பற்றி அதிகமாகச் சொல்லத் தேவையில்லை. எங்களின் வெற்றியிலும், கடினமான காலத்திலும் தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். அந்த நம்பிக்கையை சிஎஸ்கே திருப்பி அளித்து ப்ளே ஆஃப் வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது

இவ்வாறு தோனி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x