Published : 29 Sep 2021 04:28 PM
Last Updated : 29 Sep 2021 04:28 PM

ராகுலுக்கு ரன் அவுட் வேண்டாம்: சிறந்த ஸ்போர்ட்மேன்ஷிப்பை வெளிப்படுத்திய ரோஹித், குர்னல் பாண்டியா

கே.எல்.ராகுலுக்கு ரன் அவுட் அப்பீல் வேண்டாம் என நடுவரிடம் கூறிய ரோஹித் சர்மா | படம் உதவி: ட்விட்டர்

அபுதாபி

அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, குர்னல் பாண்டியாவின் செயல் சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புக்கான வெளிப்பாடாக அமைந்தது.

அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது.

136 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்தபின் இப்போது மும்பை அணி வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும் வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொண்டது.

பொதுவாக ஐபிஎல் போட்டிகள் என்றால், வீரர்களிடையே காரசார மோதல், வாக்குவாதம் போன்றவை இயல்பாக நடக்கும். ஷார்ஜாவில் நேற்று நடந்த ஆட்டத்தில்கூட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கனுக்கும், டெல்லி கேபிடல்ஸ் வீரர் அஸ்வினுக்கும் இடையே வாக்குவாதம் நடந்து, அதை தினேஷ் கார்த்திக் விலக்கிவிட்டார்.

ஆனால், சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புக்கு எடுத்துக்காட்டாக அரிதாகவே சில சம்பவங்கள் நடக்கும். அந்த வகையில் நேற்று மும்பை, பஞ்சாப் இடையே ஒரு சம்பவம் நடந்தது.

இதில் பஞ்சாப் அணி முதலில் பேட் செய்தது. 6-வது ஓவரை மும்பை இந்தியன்ஸ் வீரர் குர்னல் பாண்டியா வீசினார். அந்த ஓவரின் கடைசிப் பந்தை குர்னல் வீச, பந்தை கிறிஸ் கெயில் எதிர்கொண்டார், நான் ஸ்ட்ரைக்கர் பகுதியில் கே.எல்.ராகுல் இருந்தார்.

கிறிஸ் கெயில் பந்தை நேராக அடித்தவுடன் பந்து கே.எல்.ராகுல் மீது பட்டு, குர்னல் பாண்டியா கைகளில் பட்டு ஸ்டெம்பில் பட்டது. பந்து ஸ்டெம்பில் பட்ட நேரத்தில் ராகுல் க்ரீஸை விட்டு வெளியே இருந்தார். இதைப் பார்த்த குர்னல் பாண்டியா நடுவரிடம் அவுட் என்று அப்பீல் செய்தார்.

ஆனால், இதைப் பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பந்து ராகுல் மீது பட்டு வந்து குர்னல் கைகளில் பட்டதால், ரன் அவுட் அப்பீல் வேண்டாம் என்று நடுவரிடம் கேட்டுக்கொண்டார். இதைக் கேட்ட குர்னல் பாண்டியாவும் உடனடியாக அப்பீல் வேண்டாம் என்று தனது சைகை மூலம் நடுவரிடம் கேட்டுக்கொண்டார். மூன்றாவது நடுவருக்கு அப்பீல் செய்யும் முன் இருவரும் நடுவரிடம் கேட்டுக்கொண்டதால், அப்பீல் செய்யவில்லை.

இந்தப் போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாழ்வா, சாவா எனத் தீர்மானிக்கும் போட்டி. ரோஹித் நினைத்திருந்தால், அவுட் கேட்டு ராகுலை வெளியே அனுப்பி இருக்கலாம். ஆனால், பந்து வீரர் உடலில் பட்டு ஸ்டெம்பில் பட்டு அவுட் ஆனது கிரிக்கெட் தார்மீகத்தின்படி சரியல்ல என்பதை உணர்ந்த ரோஹித் சர்மா அப்பீல் போகவில்லை என்று முடிவு செய்து சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புக்கு உதாரணமாக விளங்கினார். ரோஹித் சர்மாவின் கருத்தைப் புரிந்து குர்னல் பாண்டியாவும் உடனடியாக அப்பீலை ரத்து செய்ததும் சிறந்த விளையாட்டு வீரருக்குரிய பண்பாகும்.

ரோஹித் சர்மா, குர்னல் பாண்டியா இருவரும் நடுவரிடம் அப்பீல் வேண்டாம் எனக் கூறியதைக் கேட்ட பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், கையின் கட்டை விரலை உயர்த்தி ரோஹித் சர்மா, குர்னல் பாண்டியாவுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x