Published : 23 Sep 2021 04:56 PM
Last Updated : 23 Sep 2021 04:56 PM

ஆர்சிபி கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி ஐபிஎல் முடிவதற்குள் நீக்கப்பட வாய்ப்பு?- அடுத்து யார் கேப்டன்?

ஆர்சிபி கேப்டன் விராட் கோலி | கோப்புப்படம்

அபுதாபி

ஆர்சிபி கேப்டன் விராட் கோலியின் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக, இந்த ஐபிஎல் சீசன் முடியும் முன்பே நீக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சமீபத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பின் இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நாட்களில், ''ஆர்சிபி அணிக்கு கேப்டனாக இந்த சீசனோடு விடைபெறுகிறேன். அடுத்த சீசன் முதல் ஆர்சிபி வீரராகத் தொடர்வேன். கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுகிறேன்'' எனக் காணொலி மூலம் கோலி அறிவித்தார்.

ஆர்சிபி அணிக்கு 8 சீசன்களாக கேப்டனாக வழிநடத்தும் கோலியால், இதுவரை ஒருமுறைகூட சாம்பியன் பட்டத்தைப் பெற்றுத்தர முடியவில்லை என்பது பெரிய குறையாக இருப்பதால், இந்த சீசனோடு கேப்டன் பொறுப்பிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து இந்த சீசனில் 2-வது பாதியில் முதல் போட்டியில் கொல்கத்தா அணியோடு ஆர்சிபி மோதியது. மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்சிபி அணி 92 ரன்களில் ஆட்டமிழந்து ஐபிஎல் தொடரில் மிகக்குறைவான 3-வது ஸ்கோரைப் பதிவு செய்தது.

கேப்டன் கோலி 5 ரன்களில், பிரசித்கிருஷ்ணா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். கேப்டன் பொறுப்பு போகப்போகிறது என்ற விரக்தியிலும், வெறுப்பிலும் விளையாடிய கோலியால் களத்தில் நின்று விளையாட முடியவில்லை. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

கோலியின் முடிவு குறித்து முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் அளித்த பேட்டியில்,” விராட் கோலி எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், அதை ஐபிஎல் தொடர் முடிந்தபின் அறிவித்திருக்க வேண்டும். சீசனின் 2-வது பகுதி தொடக்கத்திலேயே கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் என அறிவித்தது அணியின் ஒற்றுமையையும், வீரர்களின் மனவலிமையைக் குலைத்துவிடும். கோலியின் அறிவிப்பால் அணி நிலையற்ற தன்மைக்கு வந்துவிட்டதாகவே பார்க்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ஆர்சிபி அணி தற்போது 10 புள்ளிகளுடன் வலுவாக இருந்தாலும், வீரர்கள் மனதளவில் நிலையற்று இருக்கிறார்கள். கொல்கத்தா அணிக்கு எதிராக கோலி விளையாடிய விதம் அவர் ஃபார்மில் இல்லாமல் இருப்பதையும், எந்தக் குறிக்கோளும் இல்லாமல் பேட்டிங் செய்ததையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இதிலிருந்து கோலி மனதளவில் சரியான நிலையில் இல்லை என்பதை நிர்வாகிகள் உணர்வதால், இந்த சீசன் முடிவதற்கு எப்போது வேண்டுமானாலும் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்படலாம்.

இதுபோன்ற சீசன் இடையே கேப்டன் நீக்கப்படுவது புதிது அல்ல. ஏற்கெனவே கொல்கத்தா அணியிலிருந்து தினேஷ் கார்த்திக், சன்ரைசர்ஸ் அணியிலிருந்து டேவிட் வார்னர் என நீக்கப்பட்டுள்ளார்கள். இது ஆர்சிபியிலும் நடக்கலாம். கோலியின் ஆட்டம் அடுத்த போட்டியிலும் தொடர்ந்தால் நிச்சயம் ஆர்சிபி கேப்டன் பதவியில் மாற்றம் இருக்கும்.

ஒருவேளை கேப்டன் பொறுப்பில் மாற்றம் இருந்தால், ஏபி டிவில்லியர்ஸ் வசம் பொறுப்பு வழங்கப்படலாம். அல்லது, அடுத்த மூத்த வீரர் யஜுவேந்திர சஹலிடம் வழங்கப்படலாம். தற்போது பல அணிகள் இளம் வீரர்களிடம் கேப்டன் பொறுப்பை வழங்கி வருகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்ஸனிடமும், டெல்லி அணி ரிஷப் பந்த்திடமும், பஞ்சாப் அணி ராகுலிடமும் வழங்கி சோதித்து வருகின்றன.

ஆதலால், அடுத்த கேப்டனை உருவாக்கும் பொருட்டு தேவ்தத் படிக்கலிடம் கூட கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம். கடந்த இரு சீசன்களிலும் குறைகூற முடியாத அளவு படிக்கல் சிறப்பாக விளையாடுகிறார்” எனத் தெரிவித்தார்.

ஆதலால், ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பு மாற்றச் செய்தி இந்த சீசன் முடிவதற்குள் வருமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x